ராமதாஸ் 'தமிழை தேடி' பயணம்! சென்னை டூ மதுரை! இன்று முதல் மொத்தம் 8 நாட்கள்! பயண ரூட் இது தான்!
சென்னை டூ மதுரை வரை தமிழைத் தேடி சுற்றுப்பயணம் செல்லும் ராமதாஸ்.
சென்னை: சென்னையிலிருந்து மதுரை வரை ''தமிழைத் தேடி'' விழிப்புணர்வு பிரச்சார பயணத்தை இன்று தொடங்குகிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருச்சி, திண்டுக்கல் வழியாக பயணித்து வரும் 28ஆம் தேதி தனது பயணத்தை மதுரையில் நிறைவு செய்கிறார்.
ராமதாசுடன் பாமகவினர் பலர் இந்த தமிழைத் தேடி விழிப்புணர்வு பிரச்சார பயணத்தில் பங்கேற்கிறார்கள். இந்த பயணத்தின் அவசியம் குறித்து ராமதாஸ் கூறியிருப்பதாவது;

தமிழ் இல்லை
தமிழ்நாட்டில் 'எங்கும் தமிழ் எதிலும் தமிழ்' என்பது தான் ஒரு காலத்தில் முழக்கமாக இருந்தது. ஆனால், இன்று எங்கே தமிழ்? என்று கேட்கும் நிலை உருவாகியிருக்கிறது. தமிழ்நாட்டின் பள்ளிக்கூடங்களில் தமிழ் இல்லை; ஆலயங்களில் தமிழ் இல்லை; உயர்நீதிமன்றத்தில் தமிழ் இல்லை; வணிக நிறுவனங்களின் பெயர்ப் பலகைகளில் தமிழ் இல்லை; வீடுகளில் தமிழ் இல்லை; தாய்க்கும் சேய்க்குமான உரையாடல்களில் தமிழ் இல்லை. இந்த நிலை மாற்றப்பட வேண்டும் என்பது தான் தமிழ்நாட்டில் உள்ள பெரும்பான்மையினரின் விருப்பமாகவும், நோக்கமாகவும் உள்ளது.

தமிழைத் தேடி பரப்புரை பயணம்
தமிழ்நாட்டு மக்களின் விருப்பத்தையும், நோக்கத்தையும் நிறைவேற்றும் வகையில், அழிவின் விளிம்பிலிருந்து அன்னைத் தமிழை மீட்டெடுக்க வேண்டும்; அதற்காக தமிழ்நாட்டின் பள்ளிகளில் தமிழை பயிற்றுமொழியாக்கி சட்டம் இயற்ற வேண்டும்; பள்ளிகளில் தொடங்கி கோயில்கள் வரை எல்லா இடங்களிலும் தமிழே ஆட்சி செய்யும் நிலையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 21-ஆம் நாள் உலக தாய்மொழி நாளில் சென்னையில் தொடங்கி மதுரை வரை தமிழைத் தேடி பரப்புரை பயணம் மேற்கொள்ளவிருக்கிறேன்.

பயண ரூட்
| நாள் | தொடங்கும் இடம் | நிறைவடையும் இடம் |
| 21.02.2023 | வள்ளுவர் கோட்டம், சென்னை | மறைமலை நகர் |
| 22.02.2023 | மதுராந்தகம் | திண்டிவனம் |
| 23.02.2023 | புதுச்சேரி | கடலூர் |
| 24.02.2023 | சிதம்பரம் | மயிலாடுதுறை |
| 25.02.2023 | குத்தாலம் | கும்பகோணம் |
| 26.02.2023 | தஞ்சை | தமிழ்ப் பல்கலைக்கழகம் |
| 27.02.2023 | வல்லம் | திருச்சி |
| 28.02.2023 | திண்டுக்கல் | மதுரை (நிறைவு நிகழ்வு) |

உலகத் தாய்மொழி நாள்
தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணம் அரசியல் கலப்பற்ற, அரசியல் நோக்கமற்ற பயணமாகும். மனிதர்களாகப் பிறந்த அனைவருக்கும் தாயைக் காப்பது எப்படி தவிர்க்க முடியாத கடமையோ, அதேபோல், தமிழர்களாக பிறந்த அனைவருக்கும் அன்னை மொழியான தமிழ்மொழியை காக்க வேண்டியதும் கடமை ஆகும். அந்தக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் தமிழைத் தேடி விழிப்புணர்வு பரப்புரை பயணத்தை உலகத் தாய்மொழி நாளில் தொடங்குகிறேன்.












Click it and Unblock the Notifications