ஓஹோ.. திமுகவுடன் நெருங்கிய தேமுதிக.. சட்டென அதிமுக கூட்டணியை முறித்த பாமக
சென்னை: திமுகவுடன் விஜயகாந்த்தின் தேமுதிக நெருக்கம் காட்டி வரும் நிலையில், அதற்கு முன்பாக கூட்டணிக்கான சிக்னலை பாமக தரப்பு கொடுத்து விட்டது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
Recommended Video
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டன. இன்று வேட்புமனுத்தாக்கல் தொடங்கிவிட்டது. இதில் 7 மாவட்டங்கள் வட தமிழகத்தில் அமைந்துள்ளன.
இங்கு வன்னியர்கள் கணிசமாக இருப்பதால் பாட்டாளி மக்கள் கட்சியின் தயவு அதிமுகவுக்கு தேவைப்பட்டது. இந்த நிலையில்தான் கூட்டணியிலிருந்து பிரிந்து கொள்வதாக அறிவித்துள்ளது பாட்டாளி மக்கள் கட்சி.

திமுக கூட்டணி
தனித்து போட்டியிடப் போவதாக பாமக நிறுவனர் ராமதாஸ் அறிவித்து இருந்தாலும்கூட தற்போதைய அரசியல் சூழ்நிலையில் அது போன்ற முடிவுகள் பெரிய பலனைக் கொடுக்காது, அதற்குப் பதிலாக திமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட கூடும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.

விஜயகாந்த் கட்சி
அதிமுக கூட்டணியில் இருந்தபடி பாமக போட்டியிட்டிருக்கலாமே, விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத் தேர்தலின்போது பாமக மற்றும் அதிமுக கூட்டணி கெமிஸ்ட்ரி சிறப்பாக செயல்பட்டு திமுக கூட்டணியை வீழ்த்தியதே என்று சிலர் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்புவதை பார்க்கமுடிகிறது. இதுபற்றி அரசியல் விமர்சகர்கள் சிலரிடம் கேட்டபோது.. திமுக கூட்டணியை நோக்கி விஜயகாந்தின் தேமுதிக நெருங்கி வருவதால், பாமக தாமதமாக திமுக கூட்டணியில் சேர்ந்தால் உரிய அங்கீகாரம் கிடைக்க வாய்ப்பு இல்லை. எனவே இப்போது இருந்தே, திமுக கூட்டணி சேர்வதற்கு பாமக முயற்சி செய்வதுதான் அந்த கட்சிக்கு நல்லதாக அமையும் என்று குறிப்பிடுகிறார்கள்.

திமுக, தேமுதிக நெருக்கம்
முதல் முறையாக எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் உதயநிதி ஸ்டாலின். விஜயகாந்த் வீட்டுக்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்து திரும்பினார். பின்னர் முதல்வர் ஸ்டாலின் திமுகவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் விஜயகாந்த் வீட்டுக்கு சென்று அவரிடம் உடல் நலம் விசாரித்தனர். கடந்த சட்டசபை தேர்தலின்போது அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியுடன் தேமுதிக கூட்டணி அமைத்தது இதனால் பெரும் படுதோல்வியை சந்திக்க நேரிட்டது. இருப்பினும் அந்தக் கட்சிக்கு ஒரு குறிப்பிட்ட வாக்கு வங்கி இருக்கிறது. உரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்தால் அந்த வாக்கு வங்கி ஆக்டிவ் மோடுக்கு வந்து பலன் தரும் என்பது பல்வேறு கருத்துக்கணிப்புகள் மற்றும் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

பாராட்டிய பாமக
எனவே, தேமுதிகவை தங்கள் பக்கம் கொண்டுவர வேண்டும் என்று திமுக நினைக்கிறது. எனவே தான் இப்போது திமுக கூட்டணியில் துண்டு போட்டு வைத்து விடவேண்டும் என்று பாமக நினைக்கிறது என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். திமுக ஆட்சிக்கு வந்தது முதல் இந்த அரசு கொண்டு வரும் பல்வேறு திட்டங்களுக்கு ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். சட்டசபையிலும் முதல்வருக்கு நேரடியாக பாமக உறுப்பினர்கள் பாராட்டு தெரிவித்து பேசியதை கவனிக்க முடிந்தது. பாமக சட்டசபை உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் செய்து கொண்டதுமே, முதல்வர் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்தி விட்டு வந்தனர். இப்போது உள்ளாட்சித் தேர்தல் நெருங்கி விட்டதால் உடனடியாக முடிவுக்கு வரவேண்டிய நிலையில் இருந்தது பாமக. எனவே, அதிமுக கூட்டணியை விட்டு வெளியேறும் முடிவை செயல்படுத்தி விட்டது என்கிறார்கள் சில அரசியல் பார்வையாளர்கள்.












Click it and Unblock the Notifications