கருத்து கணிப்புகள்தான் அடிச்சு சொல்லுச்சே... பாமகவை நம்பி தோல்வியை தழுவிய எடப்பாடி வியூகம்
சென்னை: பாமகவை கூட்டணியில் சேர்த்து கொள்வதன் மூலம் வடதமிழகத்தில் கணிசமான வாக்குகளை பெற முடியும் என்கிற எடப்பாடி பழனிசாமியின் தேர்தல் வியூகத்தை திமுக அணி தவிடுபொடியாக்கிவிட்டது.
தமிழக சட்டசபையில் 20 எம்.எல்.ஏக்களை கண்ட கட்சியாக பாமக விஸ்வரூபம் எடுத்த வரலாறும் உண்டு. ஒரு எம்.எல்.ஏ. கூட கிடைக்காத பரிதாபத்துக்குள்ளான வரலாறும் அந்த கட்சிக்கு இருக்கிறது.
ஆனால் பாமகவின் அடுத்தடுத்த அரசியல் தலைகீழ் நிலைப்பாடுகள், ஜாதிய ரீதியான அணுகுமுறை, வன்னியர் ஜாதியில் எழுந்த கடும் அதிருப்தி இவைதான் பாமகவின் பின்னடைவுக்கு பெரும் காரணங்களாக சுட்டிக்காட்டப்பட்டன. இதனை பாமக தலைமையும் நன்கு உணர்ந்து கொண்டுதான் தேர்தலின் போது வன்னியருக்கு தனி இடஒதுக்கீடு, உள் ஒதுக்கீடு என்கிற போராட்டத்தை கையில் எடுத்தது.
திருப்போரூர் பொது தொகுதியில் பாமகவை வீழ்த்தியது விசிக..1,609 வாக்குகள் வித்தியாசத்தில் பாலாஜி வெற்றி
பாமக- அதிமுக அணி
இதை புரிந்து கொண்ட அதிமுக அரசும், வன்னியருக்கு உள்ஒதுக்கீடு கொடுத்து பாமகவை அரவணைத்துக் கொண்டால் வடதமிழகத்தில் கணிசமான இடங்கள் கிடைக்கும் என்று கணக்குப் போட்டது. பாமகவுக்கும் 23 தொகுதிகளைத் தூக்கி கொடுத்து நம்பிக்கையுடன் இருந்தது அதிமுக தலைமை.
கருத்து கணிப்புகள்- எக்ஸிட் போல்
ஆனால் பெரும்பாலான கருத்து கணிப்புகள் பாமகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்காது என ஆரூடம் கணித்தன. அத்துடன் வட தமிழகத்தில் பெரும்பாலான தொகுதிகளை திமுக கூட்டணிதான் கைப்பற்றும் என்றும் அடித்து சொல்லின. தேர்தலுக்கு பின் ஏபிபி- சிவோட்டர் வெளியிட்ட எக்ஸிட் போல் முடிவுகளில் வட தமிழகத்தில் அதிமுக அணிக்கு 8 முதல் 10 இடங்கள்தான் கிடைக்கும் என சொன்னது.
பாமகவுக்கு 5 இடங்கள்
தற்போதைய தேர்தல் முடிவுகளும் ஏறத்தாழ இதேபோல்தான் உள்ளன. சேலம் மேற்குத் தொகுதி இரா. அருள், பென்னாகரம் ஜி.கே. மணி, தருமபுரி வெங்டேஸ்வரன், மயிலம் சிவகுமார், மேட்டூர் சதாசிவம் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர். இதில் வடதமிழகத்தில் மயிலம் தொகுதி மட்டும்தான் வருகிறது. சேலம், தருமபுரி, மேட்டூர், பென்னாகரம் என வடதமிழகத்தை தாண்டிய பகுதிகளில்தான் பாமகவால் வெல்ல முடிந்திருக்கிறது.
வேல்முருகன் கட்சி
வடதமிழகத்தின் மய்ய பகுதி அல்லது பாமகவின் மாஜி கோட்டையான கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாமகவால் ஒன்றும் செய்ய முடியவில்லை. இத்தனைக்கும் பண்ருட்டி தொகுதியில் பிரசாரம் செய்த பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ராமதாஸ், அந்த தொகுதியில் போட்டியிட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகனை இழிவாக விமர்சனம் செய்தும் பார்த்தார். ஆனால் வடதமிழகம் பாமகவை நம்பவில்லை என்பதை வேல்முருகனின் வெற்றி வெளிப்படுத்தி இருக்கிறது.
வடதமிழகமும் பாமகவும்
இதனால் வீறுகொண்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சி செய்த அதிதீவிர களப்பணியால் நெய்வேலி தொகுதியிலும் பாமகவுக்கு தோல்விதான் கிடைத்தது. இதனால் பாமகவை நம்பி எடப்பாடி பழனிசாமி போட்டு வைத்த வியூகம் தவிடு பொடியாகிவிட்டது. பாமகவுக்கும் வடதமிழகத்தில் கொஞ்சம் சொல்லும்படி செல்வாக்கு இருக்கிறது என்பதுதான் இப்போதைய யதார்த்தம்; பாமகவால் சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்தான் இனி ஏதேனும் செய்ய முடியும் என்பதுதான் உண்மை என்பதை இப்போதாவது அதிமுக தலைமை உணர்ந்தால் சரி.