போட்டி போட்டு பொதுக் குழு.. உச்சகட்டத்தில் பாமக பஞ்சாயத்து! தலைவர் ரேஸில் வெல்லப் போவது யார்? இவரா?
சென்னை: பாமகவில் உச்சகட்ட மோதல் நிலவி வருகிறது. கட்சியின் தலைவரான அன்புமணி வரும் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு நடைபெறும் என அறிவித்திருக்கிறார். அதே நேரத்தில் 17ஆம் தேதி பட்டானூர் தனியார் திருமண மண்டபத்தில் சிறப்பு பொது குழுவை கூட்டுவதாக அறிவித்திருக்கிறார் ராமதாஸ். அன்புமணியின் அலுவலகத்தையே தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கும் நிலையில் அவரது பொதுக்குழுவுக்கே அங்கீகாரம் கிடைக்கும் என்கின்றனர் பாமகவினர்.
2026 சட்டமன்ற தேர்தலுக்கு தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. அதிமுக தொடங்கி தேமுதிக, பாமக என அனைத்து கட்சிகளும் தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பித்து விட்டன. கட்சி தலைவர்களும் எழுச்சி பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
அந்த வகையில் பாமக தலைவர் ஆன அன்புமணி ராமதாஸ் முதல் கட்ட சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு இரண்டாம் கட்ட பயணத்தை மேற்கொண்டு வருகிறார். தமிழகம் முழுவதும் 100 நாட்கள் இந்த சுற்றுப்பயணம் நடைபெற இருக்கிறது.

பாமக மோதல்
இது ஒருபுறம் இருக்க பாமகவில் நடக்கும் உட்கட்சி மோதல் நிர்வாகிகளையும் தொண்டர்களையும் சுணக்கமடைய செய்திருக்கிறது. பாமக தலைவராக இருந்த ஜிகே மணியை நீக்கிவிட்டு தனது மகனும் முன்னாள் மத்திய அமைச்சரான அன்புமணி ராமதாஸை தலைவராக அறிவித்தார் ராமதாஸ். அதற்கு பிறகு தந்தை மகன் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். மேலும் பொதுச் செயலாளர் வடிவேல் இராவணன், பொருளாளர் திலகபாமா, வழக்கறிஞர் பாலு உள்ளிட்டோரை நீக்குவதாக அறிவித்த அவர், 2 எம்எல்ஏக்கள், 150-க்கும் மேற்பட்ட மாநில நிர்வாகிகள் மாவட்ட செயலாளர்கள், மாவட்ட தலைவர்களை நீக்கிவிட்டு ஏற்கனவே கட்சியில் இருந்து விலக்கப்பட்ட பலரை பதவியில் அமர்த்தினார்.
அன்புமணி ராமதாஸ்
தமிழ்நாடு முழுவதும் இருதரப்பு ஆதரவாளர்களும் போட்டிப்போட்டு கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் தான் பொது குழுவால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் நான் தான், தனக்கு தான் அனைத்து அதிகாரமும் இருக்கிறது என கூறி வருகிறார் அன்புமணி ராமதாஸ். மேலும் இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடமும் முறையிடப்பட்டிருக்கிறது. இதற்கு இடையே அன்புமணி ராமதாஸின் சுற்றுப்பயணத்தை தடை செய்ய வேண்டும் என்ற ராமதாஸின் கோரிக்கை ஏற்கப்படவில்லை.
ராமதாஸ்
இந்த நிலையில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைமையகத்தை தைலாபுரத்துக்கு மாற்றுவதாக அறிவித்தார் ராமதாஸ். ஆனால் தேர்தல் ஆணையமும் ஏற்கனவே இருந்த முகவரிதான் கட்சியின் அலுவலகமாக செயல்படும் என்பதை உறுதி செய்திருக்கிறது. இந்த நிலையில் பாமக பொதுக்குழு வருகின்ற ஒன்பதாம் தேதி நடைபெறும் என அறிவித்திருக்கிறார் கட்சியின் தலைவரான அன்புமணி ராமதாஸ்.
பாமக பொதுக் குழு
இதனை முன்னதாக வருகின்ற 19ஆம் தேதி பொதுக்குழு நடைபெறும் என அறிவித்திருக்கிறது ராமதாஸ் தரப்பு. பொதுச் செயலாளர் தொடங்கி பொருளாளர் பதவி என அனைத்து பதவிகளும் நிரப்பப்பட்டு இருக்கும் நிலையில் யாருக்கு செல்வாக்கு என்பது தான் கேள்வி. இந்த நிலையில் தங்கள் தரப்புக்கு தான் சாதக அம்சங்கள் நிறைய இருக்கிறது. நாங்கள் தான் இறுதியில் வெல்வோம் என்கின்றனர் அன்புமணி ஆதரவாளர்கள்.
பாமக விதிகள்
இது தொடர்பாக பேசிய போது," 2022 ஆம் ஆண்டு பொது குழுவை கூட்டி அன்புமணியை தலைவர் ஆக்கினார் ராமதாஸ். அந்த முடிவுகளின்படி தற்போது வரை அன்புமணி ராமதாஸ் தான் தலைவர். அன்புமணியும் பொது செயலாளர் வடிவேல் இராவணனும் இல்லாத எந்த கூட்டங்களும் செல்லாது. அந்த வகையில் ராமதாஸ் கூட்டிய செயற்குழு உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியும் செல்லாது. மேலும் அன்புமணி நியமித்த பொதுச் செயலாளர், பொருளாளர், மாவட்ட தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு தான் தலைவரை தேர்ந்தெடுக்கும் அதிகாரம் இருக்கிறது.
தேர்தல் ஆணையம்
அந்த வகையில் வரும் ஒன்பதாம் தேதி நடக்கும் பொதுக்குழுவில் அன்புமணி ராமதாஸ் மீண்டும் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவார். அந்த தீர்மானம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்படும் கட்சி அமைப்பு விதிகளின்படி தலைவரும் பொது செயலாளர் பொதுக்குழு உறுப்பினர்களும் தான் தலைவரை தேர்ந்தெடுக்க முடியும். அந்த வகையில் தன்னை தலைவர் என ராமராஸ் அறிவித்துக் கொண்டாலும் தேர்தல் ஆணைய விதிகள் மற்றும் பாமக உட்கட்சி விதிகளின்படி அன்புமணி ராமதாஸ் தான் தலைவர்.
அடுத்து என்ன?
இதனை தேர்தல் ஆணையமும் உறுதி செய்யும். அதே நேரத்தில் ராமதாஸ் அறிவித்திருக்கும் பொதுக்குழு செல்லத்தக்கது அல்ல என்பதையும் தேர்தல் ஆணையத்துக்கு நினைவூட்டுவோம். எப்படி பார்த்தாலும் கட்சியில் எதிர்காலம் அன்புமணி தான். ராமராஸை ஒரு சிலர் தவறாக வழி நடத்திக் கொண்டிருக்கிறார்கள். விரைவில் இதற்கெல்லாம் முடிவு வரும்" என்கின்றனர்.












Click it and Unblock the Notifications