துப்பாக்கிய பிடிங்க அன்புமணி..ஒட்டுமொத்தமாய் புறக்கணித்த பாட்டாளிகள்! யோசித்த ராமதாஸ்..முடிந்த மோதல்
சென்னை: பரபரப்பான அரசியல் சூழலில் பாமகவில் நடைபெற்று வந்த உட்கட்சி மோதல் கிட்டத்தட்ட இறுதிக் கட்டத்திற்கு வந்திருக்கிறது. அன்புமணி பின்னால் 99 சதவீத நிர்வாகிகள் அணிவகுத்து இருக்கும் நிலையில் மோதலை இனியும் தொடர வேண்டாம் என முடிவெடுத்து இருக்கிறாராம் ராமதாஸ். சமாஜ்வாதி கட்சிக்கு நடந்ததை சில சீனியர்கள் சுட்டிக்காட்ட அன்புமணிக்கு அனைத்து பொறுப்புகளையும் விட்டுத் தர முன் வந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பாட்டாளி மக்கள் கட்சியினர் நிம்மதி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் திமுக அதிமுக போன்ற கட்சிகள் ஒரு மிகப்பெரிய திரை பிம்பத்தோடு வந்தவை. அண்ணா போன்ற எழுத்தாளர், கலைஞர் போன்ற கதாசிரியர், எம்ஜிஆர் போன்ற நடிகர் என ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே திமுகவை வளர்த்தெடுத்தது.
அதிமுகவுக்கு எம்ஜிஆர் என்ற ஒற்றை அடையாளமே போதுமானதாக இருந்தது. தொடர்ந்து ஜெயலலிதா என்ற திரை ஆளுமை தான் அந்த கட்சியை தொடர்ந்து பயணிக்க செய்தது. ஆனால் எந்தவித பின்புலமும் இன்றி வன்னியர் சமுதாயத்தினரை ஒருங்கிணைத்து அரசியல் படுத்தியவர் ராமதாஸ்.

மருத்துவராக பணியை தொடங்கி வன்னியர் சங்கத்தை ஆரம்பித்து, இட ஒதுக்கீட்டு போராட்டம் என களமாடி தொடர்ந்து பாமகவை உருவாக்கியவர். அந்தக் கட்சியின் மூலம் பலர் எம்எல்ஏ, எம்பி, மத்திய அமைச்சர்கள் ஆகி இருக்கிறார்கள். இன்றும் பல கட்சிகளில் வன்னியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள் என்றால் அதற்கு பாமகவும் மறைமுக காரணம். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே பாமகவில் உட்கட்சி மோதல் வலுத்திருந்தது. கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டாலும் மூன்றாண்டுகளில் அனைத்து முடிவுகளையும் ராமதாஸை எடுத்து வந்திருக்கிறார்.
கட்சியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் உள்ளிட்ட விவகாரங்களில் அவரே முடிவு எடுத்து வந்திருக்கிறார். குறிப்பாக இளைஞர் அணி தலைவர் நியமன விவகாரத்தில் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இடையே மோதல் வெடித்தது. அடுத்த அடுத்த நாட்களில் பொது இடங்களிலேயே இருவரும் எதிர்த்து பேச ஆரம்பித்தனர். இதனால் கட்சி தொண்டர்கள் தான் அதிர்ச்சி அடைந்தனர். மோதலின் உச்சமாக மாமல்லபுரத்தில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநாட்டில் அன்புமணி ராமதாசை மறைமுகமாக ராமதாஸ் சாடியது நிர்வாகிகளை ரசிக்க வைக்கவில்லை.
இதுவரை இல்லாத அளவு மிகப் பிரமாண்டமாக மாநாடு நடைபெற்ற நிலையில் தேவையில்லாததை பேசி ராமதாஸ் குழப்பி விட்டதாக குற்றம் சாட்டினர். மேலும் ராமதாஸின் வயதை பயன்படுத்தி குடும்பத்திலும் கட்சியிலும் சிலர் அவரை தவறாக வழிநடத்துவதாகவும் குற்றம் சாட்டினர். குறிப்பாக கட்சியின் கௌரவ தலைவரான ஜிகே மணி மீது நேரடியாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்கு தன்னை கத்தியால் கூட குத்தி விடலாம் என பதில் அளித்திருந்தார்.
இந்த நிலையில் மூன்று நாட்களாக தைலாபுரத்தில் கட்சியின் மாவட்ட செயலாளர்கள், மகளிர் அணி, இளைஞரணி மற்றும் சார்பு அணி நிர்வாகிகளை ஆலோசனைக்கு அழைத்திருந்தார் ராமதாஸ், ஆனால் 99 சதவீத நிர்வாகிகள் கலந்து கொள்ளவில்லை, அன்புமணி ராமதாஸ் ஆதரவு நிலைப்பாடு காரணமாகவே அவர்கள் ராமதாஸின் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என கூறப்பட்டது. இதனால் கட்சி உடையுமா அல்லது தேர்தல் ஆணையம் வரை விவகாரம் செல்லுமா என பிரச்சனை எழுந்தது.
காரணம் நிறுவனரும் நான் தான், தலைவரும் நான் தான், அன்புமணி செயல் தலைவர் என ராமதாஸ் குறிப்பிட்டார். ஆனால் பொதுக்குழுவால் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவன் நான் என கூறியிருந்தார் அன்புமணி. கட்சியில் மோதல் வலுப்பதை விரும்பாத சில முக்கிய நிர்வாகிகள் அன்புமணி ராமதாஸ் மற்றும் ராமதாஸ் இடையே சமாதானம் பேசியதாக கூறப்படுகிறது. குறிப்பாக உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற சம்பவத்தை எடுத்துக் கூறியிருக்கின்றனர்.
சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்த பிறகு பாஜக ஆட்சியைப் பிடித்தது முலாயம்சிங் யாதவ் தனது மகன் அகிலேஷ் யாதவை கட்சியின் தலைவராக நியமித்தார். கூட்டணி உள்ளிட்ட விவகாரங்களில் இருவருக்கும் மோதல் ஏற்பட்ட நிலையில் கட்சி உடைந்தது. தொடர்ந்து தேர்தலில் படுதோல்வியை சந்தித்த பிறகு தந்தையும் மகனும் ஒன்று சேர்ந்தனர். இந்த நிலையில் 2026 தேர்தலில் பாமக குறிப்பிடத்தக்க வெற்றியை பெற வேண்டும் என்றால் தொண்டர்களையும் நிர்வாகிகளையும் எந்தவிதமான அச்ச உணர்வுகளுக்குள்ளும் அதிருப்திக்குள்ளும் ஆழ்த்தி விடக்கூடாது என நிர்வாகிகள் சிலர் அறிவுறுத்தியுள்ளனர்.
மேலும் அன்புமணி ராமதாசுக்கே அதிக ஆதரவு இருப்பதால் ராமதாஸ் விட்டுக்கொடுத்து போவது நல்லது என கூறினார்களாம். இதுவரை தனது பேச்சைக் கேட்ட நிர்வாகிகள் தற்போது முழுமையாக அன்புமணிக்கு பின்னால் திரண்டு இருப்பதை உணர்ந்த ராமதாஸ் பேச்சுவார்த்தைக்கு உடன்பட்டு இருப்பதாகவே கூறப்படுகிறது. கட்சியின் முழு கட்டுப்பாட்டையும் அன்புமணி ராமதாஸிடம் கொடுத்துவிட்டு வழிகாட்டியாக தான் இருந்து கொள்ளப் போவதாக நிர்வாகிகளிடம் கூறியிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் - ராமதாஸ் சந்திப்பு விரைவில் நடக்கும் என்கின்றனர் நம்மிடம் பேசிய பாமக நிர்வாகிகள்.












Click it and Unblock the Notifications