தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தாக்குதல்- இந்தியாவுக்கு விடப்பட்ட சவால்: அன்புமணி ராமதாஸ் ஆவேசம்!
சென்னை: தமிழக மீனவர்கள் மீதான இலங்கையின் தொடர் தாக்குதல், இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் என்று பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்துள்ளார்.
தமிழக மீனவர்கள் தங்களது பாரம்பரிய மீன்பிடி பகுதியில் மீன்பிடித்தாலே மீனவர்கள் அத்துமீறிவிட்டதாக குற்றம்சாட்டி இலங்கை கடற்படை தாக்குதல் நடத்துவது, படுகொலை செய்வது தொடர் கதையாகிவருகிறது. தமிழக மீனவர்கள் 800க்கும் அதிகமானோரை இலங்கை கடற்படை கொன்று குவித்துள்ளது. ஆனால் மத்திய அரசு இதுவரை இலங்கை அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முதல்வரின் கடிதம்
கடந்த ஓராண்டில் மட்டும் தமிழக மீனவர்கள் 221 பேரை இலங்கை கடற்படை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மீனவர்கள் பிரச்சனை தொடர்பாக மத்திய அரசுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அனுப்பிய கடிதத்தில், 28-11-2022 அன்று 23 மீனவர்களும் அவர்களது 5 மீன்பிடிப் படகுகளும் இலங்கைக் கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் மட்டும் 221 தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவது, மீன்பிடித் தொழிலை மட்டுமே நம்பியிருக்கும் தமிழக மீனவ சமூகத்தினரிடையே கடுமையான மன அழுத்தத்தையும் வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்திருந்தார்.

2,000 மீனவர்கள் விரட்டியடிப்பு
இந்த பின்னணியில் ராமேஸ்வரத்தில் இருந்து 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் சுமார் 2,000 மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். தமிழக மீனவர்கள் எப்போதும் போல கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். பகல் நேரத்தில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் நடுக்கடலில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது திடீரென அங்கு இலங்கை கடற்படையினர் ரோந்து பணிக்காக வந்தனர். தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடிப்பதாக கூறி விரட்டியடிக்க தொடங்கியது இலங்கை கடற்படை. இதனையடுத்து மீன்பிடி தொழிலை பாதியிலேயே கைவிட்டு தமிழக மீனவர்கள் கரை திரும்ப தொடங்கினர். அப்போது 5 ரோந்து படகுகளில் தமிழக மீனவர்களை சுற்றி வளைத்த சிங்கள கடற்படையினர் திடீரெனத் தாக்குதல் நடத்தினர். அப்போது கற்கள், பாட்டில்களைக் கொண்டும் சரமாரியாக தாக்குதல் நடத்தியது சிங்கள கடற்படை. இதனால் தமிழக மீனவர்கள் பெரும் அச்சத்துடன் கரை திரும்பினர். இச்சம்பவம் ராமேஸ்வரம் மீனவர்களை கொந்தளிக்க வைத்துள்ளது.

அன்புமணி ராமதாஸ் கண்டனம்
தமிழக மீனவர்கள் மீதான இத்தாக்குதலுக்கு பாட்டாளி மக்கள் கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது: வங்கக்கடலில் கச்சத்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது சிங்களக் கடற்படையினர் கல்வீசித் தாக்குதல் நடத்தியுள்ளனர். பத்துக்கும் மேற்பட்ட படகுகளில் இருந்த மீன்பிடி கருவிகளை சேதப்படுத்தி, மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். இது கடுமையாக கண்டிக்கத்தக்கது. தமிழக மீனவர்களை கைது செய்து சிறையில் அடைப்பது, மீனவர்களின் படகுகளை சேதப்படுத்தி மூழ்கடிப்பது, கல்வீசித் தாக்குதல் நடத்தி மீனவர்களை விரட்டியடிப்பது, மீன்களை கொள்ளையடிப்பது என தமிழக மீனவர்கள் மீதான சிங்களக் கடற்படையினரின் அத்துமீறல்கள் தொடர்கின்றன!

இந்தியாவுக்கு இலங்கையின் சவால்
சிங்களக் கடற்படையினரின் அட்டகாசங்களுக்கு எதிராக தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. பா.ம.க உள்ளிட்ட கட்சிகளும், மாநில அரசும் கண்டித்தும் கூட சிங்களப் படையினர் அவர்களின் அத்துமீறலை நிறுத்திக் கொள்வதாக தெரியவில்லை. இது இந்தியாவுக்கு விடப்பட்ட சவால் ஆகும். வங்கக்கடலில் மீன்பிடிக்கச் செல்லும் தமிழ்நாட்டு மீனவர்கள் அச்சமின்றி மீன்பிடிப்பதை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். அதற்காக இரு நாட்டு மீனவர்களிடையே பேச்சு உள்ளிட்ட அனைத்து வாய்ப்புகளையும் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும்! இவ்வாறு அன்புமணி ராமதாஸ் எம்.பி. கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications