இப்படி ஒரு ஆளுநரை தமிழ்நாடு கண்டதில்ல.. நெற்றிபொட்டில் அடித்த ராமதாஸ்! அன்புமணி “சாஃப்டா” சொன்னாரே
சென்னை: சட்டப்பேரவையில் தமிழ்நாடு அரசு தயாரித்த உரையை ஆளுநர் தவிர்த்திருப்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயல் என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்த நிலையில், சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை என்று காட்டமாக கருத்து தெரிவித்து இருக்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.
இன்று காலை 10 மணியளவில் தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில் அதில் ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாடு, பெரியார், அம்பேத்கர், அண்ணா, காமராஜர், திராவிட மாடல், சமூகநீதி, சுயமரியாதை போன்ற வார்த்தைகள், பத்திகளை வாசிக்காமல் தவிர்த்தார்.
இது தொடர்பாக சட்டப்பேரவையில் ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்,ஆளுநர் உரை அவைக்குறிப்பில் இடம் பெறக்கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றினார். இதனால் ஆளுநர் ரவி தேசிய கீதம் ஒலிப்பதற்கு முன்பே அவையிலிருந்தே பாதியில் வெளியேறினார்.

அன்புமணி கண்டனம்
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், "தமிழ்நாடு அரசால் தயாரிக்கப்பட்ட உரையை, சட்டப்பேரவையில் படிக்கும் போது சில வார்த்தைகளையும், சில பத்திகளையும், ஆளுனர் தவிர்த்திருக்கிறார். இது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசையும், சட்டப்பேரவையும் அவமதிக்கும் செயலாகும்.

நாகரிகமும் மரபும்
தமிழ்நாடு அரசால் குறிப்பிடப்படும் சில சொற்களில் பாமகவுக்கு உடன்பாடு இல்லை. ஆளுனருக்கும் உடன்பாடு இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் அரசால் தயாரித்து வழங்கப்படும் உரையை மாற்றாமல் படிப்பது தான் நாகரிகமும், மரபும் ஆகும். அச்சிடப்பட்ட ஆளுனர் உரையை மட்டுமே அவைக்குறிப்பில் ஏற்ற வேண்டும் என்று கோரி முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்தார்.

தேசிய கீதத்திற்கு முன் வெளியேறுவதா?
அப்போது அவை நடவடிக்கைகள் முடிவடைந்து தேசிய கீதம் இசைப்பதற்கு முன்பாகவே ஆளுனர் வெளியேறியது ஜனநாயகத்திற்கு வலிமை சேர்க்காது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி அரசும் ஆளுனரும் நிர்வாகம் என்ற நாணயத்தின் இரு பக்கங்கள். அரசுக்கும், ஆளுனருக்கும் இடையிலான கருத்து வேறுபாடுகள் அதிகரித்துக் கொண்டே செல்வது நல்லதல்ல.

ராமதாஸ் கண்டனம்
தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக ஆளுனரும், அரசும் இணைந்து செயல்பட வேண்டும்." இதேபோல் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் ஆளுநருக்கு ட்விட்டரில் கண்டனம் தெரிவித்து உள்ளார். அன்புமணி மென்மையாக ஆளுநருக்கு கண்டனம் தெரிவித்து இருக்கும் நிலையில் அவரது தந்தையும் பாமக நிறுவனருமான ராமதாஸ் ஒரே வரியில் அழுத்தமான எதிர்ப்பை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்து உள்ள அவர், "சட்டப்பேரவை மரபுகளையும், அவை நாகரிகத்தையும் மதிக்காத இப்படிப்பட்ட ஆளுனரை தமிழ்நாடு இதுவரை கண்டதில்லை." என்று அவர் இருக்கிறார். அதேபோல் சட்டப்பேரவை நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பாமக எம்.எல்.ஏ. ஜி.கே மணியும் ஆளுநரின் செயல்பாட்டை விமர்சித்தார்.

ஜிகே மணி வருத்தம்
" காவிரி உபநீரை பின் தங்கிய மாவட்டமான தருமபுரியின் ஒக்கேனக்கலுக்கு கொண்டு வரும் வரும் திட்டத்தை ஆளுநர் உரையில் எதிர்பார்த்தோம். அது இல்லாதது எங்களுக்கு ஏமாற்றம் தருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி உரையை முடித்துக்கொண்டு தேசிய கீதம் பாடுவதற்கு முன்பே சென்று இருக்கிறார். இதுவும் வருத்தமாக உள்ளது." என்றார்.












Click it and Unblock the Notifications