அமைச்சர்களை மாவட்டங்களுக்கு அனுப்புங்க.. கடும் இழப்பு.. உடனே நிவாரணம் வழங்கணும்.. ராமதாஸ் கோரிக்கை!
சென்னை : மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்புகளை கணக்கிடுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அனுப்ப வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ், தமிழக அரசுக்கு வலியுறுத்தியுள்ளார்.
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரம் அடைந்துள்ளது. சென்னை, கடலூர், சீர்காழி உள்ளிட்ட இடங்களில் பெய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைநீரை அகற்றும் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று நேரில் சென்று பார்வையிட்டார். மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஸ்டாலின் கொசுவலை வழங்கினார்.
இதனிடையே இன்று சென்னையில் இருந்து புறப்படும் முதல்வர் ஸ்டாலின் நாளை சீர்காழி, மயிலாடுதுறை, கடலூரில் ஆய்வு செய்ய உளார். மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து, நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட உள்ளார்.
ஆளுநர் முடிவெடுக்க காலவரம்பு நிர்ணயிக்கணும்.. “சிக்கலுக்கு காரணமே அவர்தான்” - கொதித்த ராமதாஸ்!
பேய் மழை
தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டி வருகிறது. மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களில் கடந்த 2 நாட்களாக இடைவிடாமல் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சீர்காழி, பூம்புகார் பகுதிகளில் தொடர்ந்து வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்து வருகிறது. இதனால் பல குடியிருப்பு பகுதிகளில் மழை வெள்ள நீர் புகுந்துள்ளதுடன், விவசாய நிலங்களும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. கனமழையால் டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டுள்ள பயிர்கள் வெள்ள நீரில் மூழ்கி உள்ளன. பல்லாயிரம் ஏக்கர் நிலங்களில் பயிர்கள் மூழ்கியிருப்பதால், அரசு நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
ராமதாஸ்
இந்நிலையில், பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளைப் பார்வையிட அமைச்சர்கள் குழுவை அனுப்ப வேண்டும், விரைந்து மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். சூறைக்காற்றில் படகுகள் மோதி சேதமடைந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் மற்றும் வணிகம் தடைபட்டிருப்பதால் அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
கடுமையான பாதிப்பு
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியால் தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் உழவர்கள், மீனவர்கள், கூலித் தொழிலாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். வடகிழக்கு பருவமழையால் கடலூர் மற்றும் காவிரி பாசன மாவட்டங்கள் தான் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
வெள்ளக்காடு
அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டம் இந்த மழையால் வெள்ளக்காடாக மாறியிருக்கிறது. கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத வகையில் சீர்காழியில் 44 செ.மீ மழை பெய்துள்ளது. கொள்ளிடத்தில் 32 செ.மீ மழையும், அருகிலுள்ள கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம் நகரில் 31 செ.மீ மழையும் பெய்துள்ளது. கடலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அனைத்து தரப்பினருக்கும் இழப்பு
அரியலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை என தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கொட்டித் தீர்த்த மழை மக்களின் இயல்பு வாழ்க்கையை கடுமையாக பாதித்திருக்கிறது. கடந்த சில ஆண்டுகளில் பெய்த மழையால் பயிர்களுக்கு மட்டும் தான் பாதிப்பு ஏற்பட்டது. ஆனால், இப்போது பெய்து வரும் மழை அனைத்து தரப்பினரையும் இழப்புக்கு உள்ளாக்கியிருக்கிறது.
வாழ்வாதாரம் பாதிப்பு
தமிழகத்தின் பல மாவட்டங்களில் சுமார் 2 லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா மற்றும் தாளடி பயிர்கள் மழை - வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. பல இடங்களில் பயிர்கள் அழுகிவிட்டன. சூறைக்காற்றில் படகுகள் மோதி சேதமடைந்ததால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தொழில் மற்றும் வணிகம் தடைபட்டிருப்பதால் அவற்றை நம்பியுள்ள தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.
அமைச்சர்களை அனுப்ப வேண்டும்
இதைக் கருத்தில் கொண்டு மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்புகளை கணக்கிடுவதற்காக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் குழுவை அனுப்ப வேண்டும். அவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் விவசாயிகளுக்கும், பிற பிரிவினருக்கும் உடனடியாக போதிய இழப்பீடு வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.