ராமதாஸ், அன்புமணியை நேரில் வர சொல்லுங்கள்.. பேச்சுவார்த்தைக்கு அழைத்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி ஆகிய இருவருடனும் தனியாக பேச வேண்டும் என்று நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். அன்புமணி கூட்டிய பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ராமதாஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதன் விசாரணை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு முன் வந்தது. அப்போது கட்சியின் நலன் கருதி இருவரும் தனது அறைக்கு மாலை 5.30 மணிக்கு வர வேண்டும், இது எனது வேண்டுகோள் என்றும் நீதிபதி கூறி இருக்கிறார்.
பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது. பாமகவை கைப்பற்றும் நோக்கில் அன்புமணி இறங்கி இருக்கிறார். அந்த வகையில் மாமல்லபுரத்தில் நாளை அன்புமணி தலைமையிலான பாமக பொதுக்குழு கூட்டம் நடக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ராமதாஸ் தரப்பில் பாமகவின் பொதுக்குழு கூட்டம் ஆகஸ்ட் 17ஆம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால் அன்புமணி தரப்பில் திட்டமிட்டபடி மாமல்லபுரத்தில் பாமக பொதுக்குழு கூட்டம் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டது. இதனால் ராமதாஸ் தரப்பு நீதிமன்றத்தை நாடி இருக்கிறது. ராமதாஸால் நியமிக்கப்பட்ட மாநில பொதுச்செயலாளர் முரளி சங்கர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், பாமக தலைவராக 2022 மே மாதம் நியமிக்கப்பட்ட அன்புமணியின் பதவிக்காலம் மே 28ஆம் தேதியுடன் நிறைவடைந்துவிட்டது.
இதன்பின் புதிய தலைவராகக் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தேர்வு செய்யப்பட்டு, கடந்த மே 30ஆம் தேதி முதல் அவர் தலைவராகச் செயல்பட்டு வருகிறார். கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பும், நிர்வாக பொறுப்புகளும் கட்சியின் நிறுவனத் தலைவருக்கே வழங்கி கடந்த ஜூலை 7ஆம் தேதி நடந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கட்சியின் பொதுக்குழு மற்றும் அவசர பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்களை கூட்டுவதற்கான அதிகாரமும் ராமதாஸ்க்கு மட்டுமே உள்ளது. இந்த நிலையில், கட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையிலும், குழப்பத்தை ஏற்படுத்தும் வகையிலும் அன்புமணி செயல்பட்டு வருகிறார். கட்சியின் நிறுவனத் தலைவரின் அனுமதியில்லாமல், 100 நாள் நடைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இதற்கு எதிராக டிஜிபியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் 9ஆம் தேதி மாமல்லபுரத்தில் பொதுக்குழுக் கூட்டம் நடத்தவுள்ளதாக அன்புமணி அறிவித்துள்ளார். உள்நோக்கத்துடன் கூடிய இந்த அறிவிப்பால், சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் அன்புமணி அழைப்பு விடுத்துள்ள பொதுக்குழுக் கூட்டத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி முரளி சங்கர் தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, வழக்கை வெள்ளிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாகத் தெரிவித்தார். இதனால் அன்புமணி தலைமையில் நடக்கும் பாமக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்த நிலையில் அன்புமணி கூட்டும் பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது ராமதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதங்களை முன் வைக்க வந்தார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், நான் ஒரு கோரிக்கை வைக்கிறேன். அந்த கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இருவரையும் நீதிமன்ற நேரம் முடிந்த பின் மாலை 5.30 மணிக்கு எனது அறைக்கு வரச் சொல்லுங்கள்.
கட்சியின் நலன் கருதி இருவரிடமும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தனித் தனியாகவும் பேசுகிறேன். இருவரும் வரும் போது கட்சிக்காரர்கள் யாரும் இருக்க கூடாது. வழக்கறிஞர்கள் கூட இருக்க கூடாது. உடனடியாக ராமதாஸை கிளம்பச் சொல்லுங்கள்.. இது எனது வேண்டுகோள் என்று தெரிவித்துள்ளார். மேலும் நீதிபதியின் கோரிக்கையை ஏற்று இரு தரப்பும் நேரில் வருவதாக வழக்கறிஞர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும் ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் முடிவு எடுத்து அறிவிப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications