டிசம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் 234 தொகுதிகளிலும் போராட்டம்.. அன்புமணி ராமதாஸ் அறிவிப்பு!
சென்னை: "வன்னியர்களுக்கான 15% இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் போராட்டம் நடத்தப்படும்" என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். "என் வாழ்க்கை முழுவதும் கட்சிக்கும் அய்யாவிற்கும்தான் உழைத்தேன்; இனியும் அதுபோலத்தான் உழைப்பேன்" என தனது ஆதரவு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
மாம்பழம் சின்னத்தை தங்களுக்கே ஒதுக்க வேண்டும் என ராமதாஸ் தரப்பு நேற்று தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியிருந்த நிலையில் அன்புமணி இன்று ஆலோசனை நடத்தினார். கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தீவிர களப் பணிகளைத் தொடங்கியுள்ளன. இந்தச் சூழலில் பாமகவில் தந்தை - மகன் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. தனது பேரன் முகுந்தனை இளைஞர் அணி நிர்வாகியாக ராமதாஸ் அறிவித்தற்கு பாமக பொதுக்குழு மேடையிலேயே அன்புமணி எதிர்ப்பு தெரிவித்தார். இதனையடுத்து இரு தரப்பிற்கும் சமாதான முயற்சிகள் நடைபெற்றாலும் ஒருங்கிணைப்பு ஏற்படாமல் இருந்து வருகிறது.
அதைத்தொடர்ந்து, பாமக தலைவர் பதவியில் இருந்து அன்புமணியை நீக்கிய ராமதாஸ், அடுத்த சில நாட்களில் கட்சியில் இருந்து நீக்கியும் அறிவிப்பு வெளியிட்டார். ஆனால் இதனை ஏற்காத அன்புமணி, தன்னை பொதுக்குழு தான் தலைவராக தேர்வு செய்தது எனவும், பொதுக்குழுவிற்கு மட்டுமே தன்னை நீக்க அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தார். இதன் காரணமாக பாமகவில் ராமதாஸ் - அன்புமணி என இரு பிரிவாக நிர்வாகிகள் பிரிந்துள்ளனர். ஒரு கட்டத்தில் இரு தரப்பும் நேருக்கு நேர் மோதிக்கொள்ளும் சம்பவமும் அரங்கேறி வருகிறது.
இந்த நிலையில்தான் பாமகவின் சின்னமான மாம்பழம் யாருக்கு என கேள்வி எழுந்திருந்த நிலையில், பீகார் தேர்தலில் போட்டியிடும் வகையில் அன்புமணி தரப்பு தேர்தல் ஆணையத்தில் மாம்பழம் சின்னம் கோரி விண்ணப்பித்திருந்தது. தேர்தல் ஆணையமும் அன்புமணி தரப்பிற்கு மாம்பழம் சின்னத்தை வழங்கியது. இதற்கு ராமதாஸ் தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்த நிலையில் பீகார் சட்டமன்ற தேர்தல் முடிவடைந்துள்ள நிலையில் பாமக நிறுவனர் ராமதாஸ் தரப்பில் தேர்தல் ஆணையத்தில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.
அதில் தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிட தங்களுக்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். எனவே தேர்தல் ஆணையம் ராமதாஸ் தரப்பிற்கு மாம்பழம் சின்னத்தை ஒதுக்குமா? அல்லது அன்புமணிக்கா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் தனது ஆதரவு நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார் அன்புமணி.
"என் வாழ்க்கை முழுவதும் கட்சிக்கும் அய்யாவிற்கும்தான் உழைத்தேன்; இனியும் அதுபோலத்தான் உழைப்பேன்" என தனது ஆதரவு நிர்வாகிகள் உடனான ஆலோசனைக் கூட்டத்தில் அன்புமணி ராமதாஸ் பேசியுள்ளார்.
மேலும், 234 தொகுதிகளிலும் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார் அன்புமணி. வன்னியர்களுக்கான 15% இட ஒதுக்கீடு கோரி டிசம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளிலும் போராட்டம் நடத்தப்படும் என அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications