சென்னை வண்ணாரப்பேட்டையில் சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. போலீஸ் தடியடி, பலர் கைது.. பதற்றம்
Recommended Video
சென்னை: சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை சட்டத்துக்கு எதிரான போராட்டத்தில் போலீஸ் தடியடி நடத்தியதோடு, பலரை கைது செய்துள்ளதால் பரபரப்பு ஏற்படது.
குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக, நாடு முழுக்க போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் போராட்டங்கள் நடத்தின. கையெழுத்து இயக்கத்தையும் திமுக முன்னெடுத்து வருகிறது.
இந்த நிலையில், குடியுரிமை சட்டத்துக்கு எதிராக ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆண் மற்றும் பெண் இஸ்லாமியர்கள் வண்ணார்பேட்டையில் இன்று மாலை முதல் தொடர்ந்து 5 மணி நேரமாக போராட்டம் நடத்தினர்.
போராட்டம் நடத்தியவர்கள் சாலையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்தார் வட சென்னை இணை ஆணையர் தினகரன்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அவர் பேச்சுவார்த்தை நடத்தினார். இருப்பினும் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதன்பிறகும் போராட்டம் தொடர்ந்தபோது, போலீசாருக்கும், போராட்டக்காரர்களுக்கும் நடுவே மோதல் ஏற்பட்டது.
சிஏஏ எதிர்ப்பு போராட்டம்.. வண்ணார்பேட்டையில் போலீஸ் தடியடி pic.twitter.com/duvGUN7m21
— Oneindia Tamil (@thatsTamil) February 14, 2020
இதையடுத்து, வட சென்னை இணை ஆணையர் தலைமையில் சுமார் 200 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். அவர்கள் போராட்டக்காரர்கள் மீது தடியடி நடத்தினர். மேலும் சில ஆண்களை போலீசார் அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.
சுமார் 100க்கும் மேற்பட்ட ஆண்களை சம்பவ இடத்திலிருந்து போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதற்கு கண்டனம் தெரிவித்து, பெண்கள் தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுத்தனர். இந்த போராட்டத்தில் குடும்பத்தோடு குழந்தைகளையும் போராட்டக்காரர்கள் அழைத்து வந்திருந்தனர். அனைவருமே தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனிடையே வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையர் அலுவலகத்தில் வைத்து இஸ்லாமிய பிரதிநிதிகளுடன் மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினார். போராட்டத்தில் நடைபெற்ற கல்வீச்சின்போது காவல்துறை இணை ஆணையர் ஒருவர் படுகாயம் அடைந்ததாக காவல்துறை தரப்பு தெரிவிக்கிறது. சென்னை மேற்கு இணை ஆணையர் விஜயகுமார்தான், இவ்வாறு காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.