‘சின்னம்மா’ தானே பொதுச்செயலாளரு.. சீல் வைக்குறேன் பாருங்க! பூட்டோடு அதிமுக அலுவலகம் வந்த லோக்கல் கை!
சென்னை : சசிகலா தான் அதிமுகவின் பொது செயலாளர், அதனால் அதிமுக தலைமை அலுவலகத்தை நான் பூட்டி சீல் வைக்கப் போகிறேன் என்று பூட்டு சங்கிலி சகிதமாக வந்த நபரை போலீசார் பிடித்து விசாரித்த போது அவர் மது போதையில் இருந்ததால் எச்சரித்து அனுப்பி வைத்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
அதிமுக தலைமை அலுவலகம் முன் நேற்று, பன்னீர்செல்வ்ம் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் மோதிக்கொண்டனர். சட்டம் ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி, அதிமுக அலுவலகத்துக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.
மேலும், அலுவலகத்தின் மீது யாருக்கு உரிமை உள்ளது என்பது குறித்து ஜூலை 25ம் தேதி ஆஜராகி விளக்கமளிக்கும்படி இரு தரப்பினருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

அதிமுக அலுவலகம்
அசம்பாவிதங்கள் நிகழாமல் தடுக்க அங்கு சுழற்சி முறையில் சட்டம் ஒழுங்கு, ரோந்து மற்றும் ஆயுதப்படை போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். சாலையில் இருபுறமும் தடுப்புகளை அமைத்து சோதனைகளுக்குப் பிறகே அனுமதித்து வருகின்றனர். வழக்கமாக அப்பகுதிகளில் போக்குவரத்து அதிகம் இருக்கும் நிலையில் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

எடப்பாடி முறையீடு
இந்நிலையில் அதிமுக அலுவலகத்துக்கு வைக்கப்பட்ட சீலை அகற்ற உத்தரவிடக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதாகவும், அந்த மனுவை அவசர வழக்காக இன்று பிற்பகல் விசாரிக்க வேண்டும் என அதிமுக தற்காலிக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண், சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி சதீஷ்குமார் முன் முறையீடு செய்துள்ளார்.

சின்னம்மா தானே பொதுச்செயலாளர்
இதனிடையே ராயப்பேட்டை ஔவை சண்முகம் சாலையில் அமைந்துள்ள அதிமுக தலைமை அலுவலகத்திற்கு வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை சகிதமாக கையில் பூட்டு சங்கிலியுடன் ஹெல்மெட் அணிந்த நபர் ஒருவர் வந்தார் அப்போது அங்கிருந்த போலீசார் அவரை பிடித்து விசாரித்த போது அதிமுகவின் பொது செயலாளர் சின்னம்மா (சசிகலா) தானே அவர் இருக்கும்போது எப்படி அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கலாம் அதனால் என்னை சீல் வைக்க சொல்லியுள்ளார்கள் நான் அதிமுக அலுவலகத்திற்கு சீல் வைக்கப் போகிறேன் என கூறினார்.

குடி போதை நபர்
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் அவரிடம் தனியாக அழைத்துச் சென்று கேட்டபோது குடி போதையில் இருப்பது தெரிய வந்தது ஏற்கனவே இருக்கும் பிரச்சனையில் இது வேறயா என நொந்து கொண்ட போலீசார் அந்த நபரை எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அவ்வழியாக சென்றவர்கள் திடீரென கூட்டம் கூடியதால் போலீசார் அவர்களையும் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். நேற்று அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்களை நீக்குவதாக எடப்பாடி பழனிச்சாமி பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களை அதிமுகவிலிருந்து தான் நீக்குவதாக ஓ. பன்னீர்செல்வம் கூறியது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications