பெருங்குடி குப்பையில் பிணமாக கிடந்த பெண் யார்? கர்நாடகம் விரைந்தது தனிப்படை
பெருங்குடியில் கொலையுண்ட பெண் கர்நாடகத்தை சேர்ந்தவராக இருக்கக்கூடும் என கூறப்படுகிறது.
Recommended Video

சென்னை: பெருங்குடி குப்பையில் கொலை செய்யப்பட்ட பெண் கர்நாடகத்தை சேர்ந்தவராக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
கடந்த 21-ம் தேதி பெருங்குடி குப்பைக் கிடங்கில் பெண்ணின் கை, கால்கள் பார்சலில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
ரத்தம் படிந்த நிலையில் அப்பெண்ணின் வலது கையும், 2 கால்களும் துண்டுகளாக அந்த பார்சலில் இருந்தது. கால்களில் மெட்டி, வலது கையில் 2 டாட்டூக்கள் இருந்தன.

திடுக் தகவல்கள்
இது சம்பந்தமாக தனிப்படை அமைக்கப்பட்டு போலீசார் விசாரணையில் இறங்கி உள்ளனர். தினந்தோறும் பல தகவல்கள் இது சம்பந்தமாக வெளிவந்து கொண்டே இருக்கின்றதே தவிர கொலை செய்யப்பட்ட பெண் யார் என தெரியவில்லை.

மரம் அறுக்கும் மிஷின்
இந்த கொலை மிகவும் கொடூரமாக உள்ளதாக போலீசார் கூறுகிறார்கள். பெண்ணை கொன்றதுடன் இல்லாமல், அவரது உடலை மரம் அறுக்கும் மிஷினை வைத்து பொறுமையாக அறுத்துள்ளதாகவும், இதனை ஒருவர் மட்டுமே செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறப்படுகிறது. இவ்வளவு குரூர இதயம் படைத்தவர்கள் யாராக இருக்கும் என்பதில்தான் போலீசார் தீவிரமாக இறங்கி உள்ளனர்.

மற்ற பாகங்கள்?
எதற்காக கொலையாளி பெண்ணின் ஓரிரு பாகங்களை மட்டுமே குப்பையில் வீச வேண்டும், மற்ற பாகங்களை என்ன செய்திருப்பார்கள், அதனை வைத்து கொண்டு என்ன முடியும் என்றும் போலீசார் குழம்பி உள்ளனர்.

கைரேகை விவரங்கள்
குப்பையில் கிடைத்த ஒரே ஒரு கையில் கைரேகையினை எடுத்து ஆதார் மூலம் இறந்த பெண் யார் என கண்டுபிடிக்கலாம் என்று யோசிக்கப்பட்டது. அதற்காக அரசின் ஆதார் அமைப்பின் உதவியை நாடியபோது, இறந்த செல்கள் மூலம் கைரேகை விவரங்களை துல்லியமாக பெறமுடியாது என ஆதார் அமைப்பு மறுத்துவிட்டது. அதனால் விசாரணையின் ஆரம்பமே சிக்கலானது.

காணாமல் போனவர்கள்
மற்றொரு பக்கம் குப்பைகள் வந்த பகுதியிலிருந்து சிசிடிவி காமிராக்கள், மற்றும் போஸ்டர்களை ஒட்டி இறந்த பெண் யார் என்றும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதிலும் தோல்விதான் கிடைத்தது. தமிழகத்தில் கல்யாணம் ஆகி காணாமல் போன பெண்களின் பட்டியலை தேடியும் பெரிய அளவில் விசாரணையில் முன்னேற்றம் இல்லை.

க்ளூ கிடைத்தது
ஆனால் இப்போது, இறந்த பெண் கர்நாடகாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற ஒரு க்ளூ கிடைத்துள்ளது. இறந்த பெண் குறித்து போலீசார் சொன்ன தகவல்கள் அனைத்தும், கர்நாடகாவில் காணாமல் போன பெண் ஒருவருடன் ஒத்து போவதாக தெரியவந்துள்ளது.

தனிப்படை விரைந்தது
அதனால் தனிப்படை போலீசார் கர்நாடகா விரைந்துள்ளனர். அங்கு காணாமல் போன பெண் யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது. காணாமல் போனவர் பெருங்குடியில் இறந்த பெண் தான் என்பது உறுதியானால் கொலையாளி யார், கொலை செய்ய என்ன காரணம் என்றெல்லாம் ஒவ்வொன்றாக தெரியவரும்.












Click it and Unblock the Notifications