பொள்ளாச்சி பாலியல் வழக்கு! பார் நாகராஜை எனக்கு தெரியாது! அவரை தவெகவில் சேர்க்கவில்லை - செங்கோட்டையன்
சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பார் நாகராஜ் தனது தலைமையில் தவெகவில் இணைந்ததாக பரவும் செய்தியை அமைச்சர் செங்கோட்டையன் மறுத்துள்ளார்.
தமிழக அரசியலில் அவ்வப்போது சில புகைப்படங்கள் வெளியாகி பெரும் புயலைக் கிளப்புவது வழக்கம். அந்த வகையில், தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு செய்தி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் தொடர்புடையதாகக் கூறப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட 'பார்' நாகராஜ், அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் 'தமிழக வெற்றிக் கழகத்தில்' (தவெக) இணைந்ததாக ஒரு தகவல் காட்டுத்தீயாய் பரவியது.
இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் விவாதப் பொருளான நிலையில், இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் அமைச்சர் செங்கோட்டையன் தனது முகநூல் பக்கத்தில் அதிரடியான விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
சர்ச்சையின் பின்னணி என்ன?
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் 'பார்' நாகராஜின் பெயர் அடிபட்டதுமே, அப்போதைய அதிமுக தலைமை அவரை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கியது. அதன் பிறகு பொதுவெளியில் அதிகம் தென்படாத அவர், சமீபத்தில் அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்த புகைப்படம் ஒன்று வெளியானது. அந்தப் புகைப்படத்தை வைத்து, அவர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகத்தில்' இணைந்துவிட்டதாகத் தவறான தகவல்கள் பரப்பப்பட்டன.
அமைச்சர் செங்கோட்டையனின் விளக்கம்
இந்த விவகாரம் குறித்து தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ள அமைச்சர் செங்கோட்டையன், "நான் தமிழ்நாடு அரசின் அமைச்சராகப் பொறுப்பேற்றுக் கொண்டதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஆயிரக்கணக்கான தொண்டர்களும், பொதுமக்களும் நேரில் வந்து எனக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர். அப்படி வந்த கூட்டத்தோடு கூட்டமாகத்தான் இந்த 'பார்' நாகராஜ் என்பவரும் வந்து சென்றிருக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், "இந்த நபருடன் எனக்கு முன்பின் எந்த அறிமுகமும் கிடையாது. கூட்டத்தில் ஒருவராக வந்த ஒருவரை, தவெக கட்சியில் நான் இணைத்து வைத்ததாகப் பரப்பப்படும் செய்தி முற்றிலும் பொய்யானது. திட்டமிட்டு பரப்பப்படும் இத்தகைய தவறான செய்திகளை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்," எனத் தெரிவித்துள்ளார்.
பரபரப்பில் அரசியல் களம்
ஒரு சாதாரண சந்திப்பை வைத்துக்கொண்டு, ஒரு கட்சியின் பெயரையும், அமைச்சரின் பெயரையும் இணைத்து வதந்திகள் பரப்பப்படுவது அரசியல் களத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எது எப்படியோ, "யார் வேண்டுமானாலும் வந்து வாழ்த்து சொல்லலாம், ஆனால் அதற்காக அவர்கள் என் நண்பர்களோ அல்லது நான் காட்டும் வழியில் நடப்பவர்களோ ஆகிவிட முடியாது" என்பதை அமைச்சர் தனது விளக்கத்தின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார். இந்த விளக்கத்திற்குப் பிறகு, சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகள் ஓயத் தொடங்கியுள்ளன.
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தவெகவில் இணைந்தார். அங்கு அவருக்கு தலைமை நிர்வாகக் குழு ஒருங்கிணைப்பாளர் பதவி கொடுக்கப்பட்டது. அது போல் சட்டசபை தேர்தலில் அவருக்கு கோபிசெட்டிபாளையத்தில் போட்டியிட விஜய் வாய்ப்பு வழங்கினார்.
அந்த தேர்தலில் திமுக, அதிமுக வேட்பாளர்களை தோற்கடித்து செங்கோட்டையன் வெற்றிக் கொடி நாட்டினார். இதையடுத்து அவருக்கு வருவாய் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. அவை முன்னவராகவும் இருந்து வருகிறார். செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்ததை அடுத்து ஏராளமானோர் பல்வேறு கட்சிகளில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்.
அதிலும் தவெக ஆட்சி அமைத்த பிறகு, அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் தவெகவில் இணைந்தனர். அதுபோல் அதிமுகவ சேர்ந்த மரகதம் குமரவேல், பெருந்துறை ஜெயக்குமார், சத்தியபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர்.












Click it and Unblock the Notifications