சென்னையில் தண்ணீருக்கு கஷ்டம்... இப்போ காற்றும் விஷமாகிறது... ஷாக் ரிப்போர்ட்
Recommended Video
சென்னை: சென்னையில் வீசும் காற்றில் உள்ள மாசு அளவை வருடம் தோறும் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் வெளியிடப்பட்ட அறிக்கை சென்னைவாசிகளுக்கு ஷாக் தருவதாக அமைந்துள்ளது.
தேசிய காற்று தர கண்காணிப்பு திட்டத்தின் கீழ் சென்னையில் அடையாறு, தியாகராய நகர், கீழ்ப்பாக்கம், அண்ணா நகர், நுங்கம்பாக்கம் ஆகிய ஐந்து பகுதிகளில் காற்றின் தரம் சோதிக்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் ஏர் குவாலிட்டி இண்டக்ஸ் எனப்படும் சென்னை நகரில் நிலவும் காற்றின் மாசு அளவு குறித்த அறிக்கையை தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
காற்றில் அனுமதிக்கப்பட்ட மாசுவின் அளவு பிஎம்-10க்கு 60 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர், பிஎம்-2.5க்கு 40மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் என்ற அளவில் இருக்க வேண்டும். ஆனால் இப்போது வெளியிட்டுள்ள அறிக்கையின்படி சென்னையிலுள்ள பிற பகுதிகளிலும் பிஎம்-10 மாசுவின் அளவு 100 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் அளவுக்கு அதிகமாகவே உள்ளது. இந்த அறிக்கையில் சென்னை நகரிலுள்ள அண்ணா நகர், நுங்கம்பாக்கம், கீழ்ப்பாக்கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் காற்றின் மாசு அளவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது.
காற்றும் விஷமாகிறது
அதன்படி, சென்னையில் காற்றின் மாசு அளவு அதிகரித்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் காற்றில் கலந்துள்ள மாசுவின் அளவு சில நாட்கள் மட்டுமே குறைந்து காணப்பட்டதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. சென்னையில் மரங்கள் சற்று அடர்த்தியாக உள்ள பகுதிகள், கடலோரத்தில் இருக்கும் பகுதிகள் ஆகியவற்றில் காற்று மாசு சற்று குறைந்து காணப்படும்.
காற்றுமாசு அதிகம்
அடையாறு போன்ற பகுதிகள் காற்று மாசு சற்று குறைவாக உள்ள பகுதிகளாகும். ஆனால் இப்போது எடுக்கப்பட்ட கணக்கீட்டின்படி காற்றின் தரநிலை மிக மோசமடைந்துள்ளது. இருப்பினும் பிற பகுதிகளை ஒப்பிடுகையில் அடையாறு பகுதியில் இந்த மாசுவின் அளவு 107ஆக உள்ளது. இது சென்னையின் குறைந்த அளவாகும். மேலும் சென்னையில் கடந்த 2016-17 ஆண்டு நிலவிய காற்றின் மாசுபாட்டுடன் ஒப்பிடும் போது தற்போது காற்று மாசின் அளவு அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை நுங்கம்பாக்கத்தில் பிஎம்-10 மாசு அளவு 173 மைக்ரோ கிராம்/கியூபிக் மீட்டர் அளவீட்டில் உள்ளதாக தெரியவந்துள்ளது.
துகள்களின் விகிதமும் உயர்வு
காற்றில் உள்ள சல்பர் டையாக்சைடு, நைட்ரஜன் டையாக்சைடு ஆகியவற்றின் வருடாந்திர சராசரி மதிப்புகள் கட்டுப்பாட்டுக்குள் இருந்துள்ளதாக தற்போது வெளியிடப்பட்ட இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கணக்கீடு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் கண்காணித்து வரும் 28 நிலையங்களிலும் இதே நிலை இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காற்றில் துகள்களின் விகிதமும் கணிசமாக உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. துகள்களின் அளவு அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 173 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது.
வாகனப் புகை
சாலைகளில் வெளியாகியுள்ள மணற்துகள்கள், வாகனப் புகை போன்றவற்றால் துகள்களின் விகிதம் அதிகரித்துள்ளது. தியாகராய நகரில் 138 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர், அண்ணா நகரில் 161 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர், அடையாற்றில் 107 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர், கீழ்ப்பாக்கத்தில் 128 மைக்ரோகிராம்/கியூபிக் மீட்டர் என்ற விகிதத்தில் துகள்களின் அளவு அதிகரித்துள்ளது. தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் முந்தைய அறிக்கைகளுடன் தற்போதைய அறிக்கையை ஒப்பிட்டால், சென்னையில் காற்று மாசு மிக மோசமடைந்திருப்பது தெரிகிறது. சென்னையில் பிஎம்-10 மாசு அதிகரித்ததற்கு, அதிகப்படியான வாகன போக்குவரத்தும் இவற்றால் ஏற்படும் புழுதியுமே முக்கிய காரணம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.