‘டிராகன்’ படம் போல பாலிடெக்னிக் அரியர் வைத்த மாணவர்களுக்கு கிரேஸ் சான்ஸ்.. சூப்பர் அறிவிப்பு!
சென்னை: பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் வருகிற பருவ தேர்வுகளின் போது, அரியர் தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.
அண்மையில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற 'டிராகன்' திரைப்பட காட்சி போல, பாலிடெக்னிக் கல்லூரி அரியர்களை க்ளியர் செய்ய சிறப்பு சான்ஸ் வழங்குகிறது தமிழக அரசு. பாலிடெக்னிக் கல்லூரி இறுதி ஆண்டு முடித்து அரியர்ஸ் வைத்துள்ள மாணவர்கள் எதிர்வரும் ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடைபெறும் பருவ தேர்வுகளின் போது, தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கப்படுவதாக உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தெரிவித்துள்ளார்.

உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார தேவையை அறிந்து அரசின் அனைத்து துறைகளின் சார்பாக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. தமிழ்நாட்டின் மாணவச் செல்வங்களின் எதிர்கால நலன் கருதி, மாணவர்களின் மீது தனி அக்கறை கொண்டு உயர்கல்வித் துறையில் பல்வேறு நல திட்டங்களை அறிமுகப்படுத்தி மாணவர்களின் கல்வி தரத்தை செம்மைப்படுத்தி வருகிறது. ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயின்று, தகுந்த வேலை வாய்ப்பினைப் பெற வேண்டும் என்ற உயரிய நோக்கத்துடன் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தொழிற்சார் கல்வியினை வழங்கி வருகிறது தமிழக அரசு.
பாலிடெக்னிக் கல்லூரியில் பயின்று பல்வேறு குடும்பச் சூழ்நிலைகளால் தேர்ச்சி பெறாமல் அரியர்ஸ் வைத்துள்ள பாடங்களுக்கு தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு வழங்கும்படி மாணவர்களிடமிருந்து வரப்பெற்ற கோரிக்கைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிசீலித்து உத்தரவிட்டதன்படி, பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் இறுதி ஆண்டு முடித்தும் பல்வேறு காரணங்களால் சில பாடங்களில் தேர்ச்சி அடையாமல் தங்களின் வாழ்வில் அடுத்த நிலைக்கு செல்ல இயலாத சூழ்நிலையினை கருத்தில் கொண்டு அவர்களும் வாழ்வில் முன்னேற்றம் பெற ஏதுவாக அரசு எதிர்வரும் ஏப்ரல் 2025 மற்றும் அக்டோபர் 2025 பருவத் தேர்வுகளின் போது, அரியர் தேர்வு எழுத சிறப்பு வாய்ப்பு (Grace Chance) வழங்க முடிவெடுத்துள்ளது.
இது குறித்த விவரங்களை என்ற இணையதளம் வாயிலாக மாணவர்கள் அறிந்து கொள்ளலாம். இந்தச் சிறப்பு வாய்ப்பினை சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்." எனத் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் திரையில் வெளியான 'டிராகன்' திரைப்படத்தில் மோசடியாக பட்டப் படிப்பு சான்றிதழ் பெற்ற ஹீரோ, 3 மாதங்களுக்குள் 48 அரியர்களையும் எழுதி தேர்ச்சி பெற வேண்டும், இல்லையெனில் வேலையும் திருமணமும் பறிபோகும் என செக் வைப்பார் கல்லூரி முதல்வரான மிஷ்கின்.
அந்த வகையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் படித்து அரியர் வைத்துள்ள மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு எழுதும் சிறப்பு வாய்ப்பை தமிழ்நாடு அரசு வழங்கி உள்ளது. இச்சிறப்பு வாய்ப்பினை சில பாடங்களில் தேர்ச்சி பெறாத பாலிடெக்னிக் மாணவர்கள் பயன்படுத்தி தங்கள் எதிர்காலத்தை வளமாக்கி கொள்ளலாம்.












Click it and Unblock the Notifications