பாசம் வைக்க பாஜக..நேசம் வைக்க ஓபிஎஸ்! ரொம்ப சந்தோஷம்.. ஏக குஷியில் ’தாமரை’! பொன்னார் சொல்லிட்டாரே!
சென்னை : ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதிக்கான இடைத் தேர்தலில் பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம் என ஓ.பன்னீர்செல்வம் அதிரடியாகக் கூறியிருக்கும் நிலையில், பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய ஓபிஎஸ்க்கு நன்றி என பாஜக மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.
அதிமுகவை பொருத்தவரை ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக எடப்பாடி பழனிச்சாமி தரப்பு அறிவித்திருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் அதிமுகவில் எடப்பாடி பழனிச்சாமி ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இடையான மோதல் வலுப்பெற்று இருக்கும் நிலையில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்காக இரு தரப்பும் எதிர்நோக்கி உள்ளது.
ஓ.பன்னீர் செல்வத்தின் நிலைப்பாடு என்னவாக இருக்கும் என்பதை எடப்பாடி தரப்பின் எதிர்பார்ப்பாகவும் இருந்த நிலையில், அவரும் வேட்பாளரை அறிவிப்போம் அறிவித்திருக்கிறார். இதனால் தேர்தலை விட அதிமுகவில் பரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் சென்று கொண்டிருக்கிறது.
அரசியல் தனிமரம்..விரக்தியின் வெளிப்பாடு..ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை..ஜெயக்குமார் பொளேர்
ஓபிஎஸ் போட்டி
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஓபிஎஸ்," ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நாங்கள் போட்டியிட உள்ளோம். இரட்டை இலை சின்னத்தை பெற எங்களுக்கு முழு உரிமை உள்ளது. 2026 வரை ஒருங்கிணைப்பாளராக செயல்பட தொண்டர்கள் என்னை தேர்ந்தெடுத்துள்ளனர். இரட்டை இலை சின்னம் கோரி ஏ மற்றும் பி படிவத்தில் கையெழுத்திடுவேன். பாஜக போட்டியிட விரும்பினால் நாங்கள் ஆதரவு அளிப்போம்.
சட்டப் போராட்டம்
இரட்டை இலை சின்னத்தை முடக்க எந்த காலத்திலும் தடையாக இருக்க மாட்டோம். அதிமுக பழைய நிலைக்கு வரும் வரை சட்டப் போராட்டம் தொடரும். தேர்தல் ஆணையத்தை பொறுத்தவரை நான் தான் அதிமுக ஒருங்கிணைப்பாளர். நாளை மறுநாள் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் நல்ல முடிவெடுப்போம். இரட்டை இலை சின்னம் கிடைக்காவிட்டாலும் சுயேட்சை சின்னத்தில் போட்டியிடுவோம். பாஜக, பாமக, த.மா.கா உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் ஆதரவை கோருவோம். சசிகலா தரப்பில் இதுவரை எந்த பேச்சு வார்த்தையும் நடத்தப்படவில்லை.
பழனிசாமி தரப்புடன் பேச்சு
அதிமுக பிளவுபட்ட அணிகளாக தேர்தலை சந்திக்க எங்களுக்கு விருப்பம் இல்லை. சசிகலாவை சந்திக்க வாய்ப்பு கிடைத்தால் சந்திப்போம். அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதே எனது விருப்பம். ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக பழனிசாமி அணியுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார். ஒன்றிணைந்து செயல்படுவது தொடர்பாக இதுவரை பழனிசாமி தரப்புடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் எங்கள் தரப்பில் போட்டியிடும் வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார்" என்றார்.
பொன்னார் நன்றி
இதனால் எடப்பாடி தரப்பு கடும் அதிருப்தி அடைந்துள்ளது. அதே நேரத்தில் எடப்பாடி தரப்புடன் பேச தயார் என ஓபிஎஸ் கூறினாலும் தங்கள் தரப்பு பேச தயாராக இல்லை என எடப்பாடி பழனிசாமியின் தீவிர ஆதரவாளரான ஜெயக்குமார் கூறியிருக்கிறார். இந்நிலையில் பாஜகவுக்கு ஆதரவளிப்பதாகக் கூறிய ஓபிஎஸ்க்கு நன்றி என பாஜக மூத்த தலைவரான பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய அவர்,"இடைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவு தெரிவிப்போம் என கூறிய ஓ பன்னீர்செல்வத்துக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறோம் என்றார். இதனால் ஈரோடு தேர்தலில் பாஜக என்ன முடிவெடுக்கும் என்பதே தற்போதைய அரசியல் களத்தில் பேசு பொருளாக இருக்கிறது. அதே நேரத்தில் எடப்பாடி தரப்பு பாஜக ஆதரவை கேட்கும் எனவும் கூறப்படுகிறது.