ஓஎன்ஜிசி வழக்கில் விதிக்கப்பட்ட 13 ஆண்டு சிறை தண்டனை.. மேல்முறையீடு செய்த பிஆர் பாண்டியன்!
சென்னை: ஓ.என்.ஜி.சி. நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவரான பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருந்தது. இதற்கிடையே இந்த தீர்ப்பை எதிர்த்து பிஆர் பாண்டியன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி பகுதியைச் சேர்ந்த பிஆர் பாண்டியன், தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் மாநிலத் தலைவராக இருக்கிறார். இவர் காவிரி நீர் பங்கீடு, மேகதாது எதிர்ப்பு, நெல் கொள்முதல் நிலைய மேம்பாடு என விவசாயிகள் சார்ந்து பல்வேறு விவகாரங்களில் போராட்டங்களை நடத்தி வருகிறார்.

அப்படித் தான் கடந்த 2015ல் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்குத் திருவாரூர் மாவட்டத்தில் போராட்டம் நடத்தினர். அப்போது விவசாயிகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டத்தை நடத்தினர்.. ஓஎன்ஜிசி சார்பில் விக்கிரபாண்டியத்தில் மீத்தேன் எடுக்க ஆய்வுப் பணிகள் நடந்த நிலையில், அதை எதிர்த்தே இந்த போராட்டங்கள் நடத்தப்பட்டன. அப்போது பிஆர் பாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது பொதுச் சொத்துகளைச் சேதப்படுத்தியது உள்பட பல பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இது தொடர்பான வழக்கு கடந்த 10 ஆண்டுகளாகத் திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, விரிவான விசாரணை நடத்தப்பட்டது. இந்தச் சூழலில் தான் கடந்த வாரம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு எதிரான போராட்டத்தில் பொது சொத்துகளைச் சேதப்படுத்தியதாகக் கூறி பிஆர் பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்போது பிஆர் பாண்டியனும் அங்கு ஆஜராகி இருந்தார். சிறை தண்டையை அடுத்து அவர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். பிஆர் பாண்டியன் விவகாரம் விவாதமானது. இணையத்தில் இது தொடர்பாகப் பலரும் தங்கள் கருத்துகளைப் பதிவிட்டு வந்தனர்.
இதற்கிடையே சிறை தண்டனையை எதிர்த்து பிஆர் பாண்டியன் மேல்முறையீடு செய்துள்ளார். 13 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்த நிலையில், மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. தண்டனை நிறுத்தி வைத்தும், ஜாமீன் வழங்கக்கோரியும் பி.ஆர்.பாண்டியன் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என தெரிகிறது.












Click it and Unblock the Notifications