திமுக வெல்லப் போகும் இடங்களின் எண்ணிக்கை... மு.க. ஸ்டாலினுக்கு உற்சாகத்தைக் கொடுத்த பிரஷாந்த் கிஷோர்
சென்னை: சட்டசபை தேர்தலில் திமுக மட்டும் 150 இடங்களில் வெல்லும் வாய்ப்புகள் உள்ளதாக தேர்தல் வியூக வல்லுநர் பிரஷாந்த் கிஷோர் தெரிவித்த தகவலால் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உற்சாகமடைந்துள்ளாராம்.
தமிழக சட்டசபை தேர்தலில் ஏப்ரல் 6-ந் தேதியன்று பகல் வரை சீரான வாக்குப் பதிவு இருந்தது. பிற்பகலில் வாக்குப் பதிவு மந்தமாகவும் மாலையில் மீண்டும் சீராகவும் இருந்தது.

ஐபேக் அலுவலகத்தில் ஸ்டாலின்
வாக்குப் பதிவின் ஏற்றம், இறக்கம் குறித்து பல்வேறு ஆரூடங்கள், விவாதங்கள் முன்வைக்கப்பட்டன. சென்னையில் வாக்களித்த கையோடு பிரஷாந்த் கிஷோரின் ஐபேக் அலுவலகத்துக்கு சென்று முகாமிட்டார் மு.க.ஸ்டாலின்.

ஆலோசனை
ஐபேக் அலுவலகத்தில் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், மருமகன் சபரீசன் உள்ளிட்டோரும் ஆலோசனையில் பங்கேற்றனர். அப்போது வாக்கு சதவீத நிலவரங்கள் சாதகமாக இருக்குமா? என்பது குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.

ஸ்டாலின் ஆலோசனை
மாலையில் ஸ்டாலின் மீண்டும் வந்தும் ஆலோசனையில் பங்கேற்றார். அப்போது நிலவரம் எப்படி இருக்கிறது? என ஸ்டாலின் கேட்டார். இரவு 7 மணிக்கு வாக்குப் பதிவு முடிந்த உடன் உங்களுக்கு ரிசல்ட் சொல்கிறேன் என பிரஷாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.

பிகே சொன்ன தகவல்
இதற்காகவே ஸ்டாலினும் காத்திருந்தார். வாக்குப் பதிவு முடிவடைந்த தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஐபேக் ஊழியர்களிடம் இருந்து தகவல்கள் கொட்டத் தொடங்கின. இதனடிப்படையில் திமுக மட்டுமே மொத்தம் 150 இடங்களில் வெல்லும் வாய்ப்புள்ளதாக ஸ்டாலினிடம் பிரஷாந்த் கிஷோர் கூறியிருக்கிறார்.

உற்சாக திமுக
திமுக கூட்டணி கட்சிகளின் வெற்றியையும் சேர்த்தால் சுமார் 170 முதல் 180 இடங்கள் கிடைக்க வாய்ப்பிருக்கிறது என்றும் ஸ்டாலினிடம் சொல்லப்பட்டிருக்கிறது. இந்த தகவல் ஸ்டாலினை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது. உடனடியாக இந்த தகவலை துரைமுருகன் உள்ளிட்ட சீனியர்களிடம் பகிர்ந்திருக்கிறார் ஸ்டாலின். இதனால் திமுக வட்டாரங்கள் ஹேப்பி அண்ணாச்சியாக இருக்கிறதாம்.












Click it and Unblock the Notifications