கேப்டனுக்கு நடக்குறதுல பிரச்சினை இருக்கு.. அதுக்காக தொண்டர்கள் கதறி அழுறாங்கன்னு சொல்வதா? பிரேமலதா
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்திற்கு பேசுவதிலும் நடப்பதிலும் பிரச்சினை இருக்கிறது உண்மைதான். அதற்காக தொண்டர்கள் அவரை பார்த்து கதறி அழுதாங்கன்னு சொல்வதா என கட்சியின் பொருளாளரும் அவரது மனைவியுமான பிரேமலதா விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.
கறை படியாத கைகளுக்கு சொந்தக்காரர், கொடுத்து கொடுத்து சிவந்த கை, வீட்டிற்கு யார் போனாலும் சாப்பிடாமல் அனுப்ப மாட்டார், யார் எந்த உதவி கேட்டாலும் செய்யக் கூடியவர்- இப்படி அனைத்து நற்குணங்களையும் கொண்டவர் விஜயகாந்த்.
அவர் நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்த போது வெளிநாடுகளில் நிகழ்ச்சிகளை நடத்தி நடிகர் சங்கத்தின் கடனை அடைத்தவர். சின்ன கலைஞர்களுக்கு எத்தனையே உதவிகளை செய்தவர். இன்று வரை கிறிஸ்துமஸ், தீபாவளி, ரம்ஜான், பொங்கல் என எந்த பண்டிகையாக இருந்தாலும் நலத்திட்டங்களை வாரி வழங்கக் கூடியவர்.
எழுதாத பேனாவிற்கு ரூ. 80 கோடியில் சிலை எதற்கு? பெரியார் சிலை வைக்கலாமே..கேட்கிறார் பிரேமலதா
விஜயகாந்த்
அப்படிப்பட்ட விஜயகாந்த் தற்போது உடல்நலம் பாதிக்கப்பட்டு ஓய்வில் இருக்கிறார். இவர் அண்மையில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி கொடியேற்றவும் ஆகஸ்ட் 25 ஆம் தேதி தனது ரசிகர்களை சந்திக்கவும் வெளியே வந்தார். கொடியேற்றும் போது அவரால் முடியவில்லை, கண்ணாடியை சரி செய்யவும் அத்தனை பாடுபட்டார். இவற்றை எல்லாம் பார்த்த நெட்டிசன்கள் எதற்காக அவரை கஷ்டப்படுத்துறீங்கன்னு பிரேமலதாவுக்கு விமர்சனங்களை முன் வைத்தனர்.
தொண்டர்கள்
விஜயகாந்த் விரும்பியதால்தான் தொண்டர்களை சந்திக்க கட்சி அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார் என பிரேமலதா விளக்கமளித்திருந்தார். இந்த நிலையில் அவர் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: விஜயகாந்திற்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவருக்கான பிரச்சினை என்னவென்றால் அவர் நடப்பதிலும் பேசுவதிலும்தான் இருக்கிறது.
இடைவிடாமல் உழைப்பு
இடைவிடாமலும் கடினமாகவும் உழைத்ததால் அதன் பக்க விளைவுகள் தற்போது 70 வயதில் காட்டுகிறது. எனது திருமணத்தின் போதே விஜயகாந்த் மக்களுக்கானவர் என்பதை நான் முடிவு செய்துவிட்டேன். அதனால்தான் அவர் தொண்டர்களை பார்த்தவுடன் அத்தனை ஆரவாரம் செய்தார். அவரை பார்த்தவுடன் தொண்டர்களின் உற்சாகத்திற்கு அளவே இல்லை.
தொண்டர்கள்
முக்கியமான நாட்களில் தொண்டர்களை சந்திப்பதை விஜயகாந்த் விரும்புகிறார். இதை பலர் விமர்சிக்கிறார்கள். தவறாக சித்தரிக்கிறார்கள். தொண்டர்களை பார்க்க வேண்டும் என விரும்புவது கேப்டன்தான். அது போல் தொண்டர்களும் அவரை பார்க்க விரும்புகிறார்கள். அவரை தொண்டர்கள் பார்ப்பதற்கு நாங்கள் அனுமதித்தால் அவரை ஏன் கஷ்டப்படுத்துறீங்க, துன்புறுத்துறீங்க என்பதை போல் நெகட்டிவ்வாக பேசுகிறார்கள்.
ஓய்வு
சரி அவரை யாரும் பார்க்க வேண்டாம். அவர் ஓய்வு எடுக்கட்டும் என நினைத்தால் என்னங்க கேப்டனை கண்ணிலேயே காட்ட மாட்டேங்கிறீங்கன்னு சொல்றாங்க. ராதாரவி கூட விஜயகாந்தை பார்க்கவிடுலைனு சொல்லியிருக்காரு. நாங்கள் ஏற்கெனவே ஒரு விழாவில் கேப்டனை அவரது பிறந்தநாளின் போது வந்து பாருங்கள் என ராதாரவி உள்ளிட்டோரிடம் சொல்லிவிட்டோம்.
நடிகை வடிவுக்கரசி
அன்றைய தினம் வடிவுக்கரசி உள்ளிட்டோர் நேரில் வந்து கேப்டனை சந்தித்தார்கள். அவர்கள் கேட்டதால் நாங்கள் கேப்டனை சந்திக்க அனுமதித்தோம். இதை நெகட்டிவ்வாக கொண்டு போக நினைப்பவர்கள் அப்படித்தான் விமர்சிக்கிறார்கள். எனவே கேப்டன் தொண்டர்களை பார்க்க ஆசைப்பட்டால் நாங்கள் ஒரு நாள் ஏற்பாடு செய்து அன்றைய தினம் அவரை பார்க்க அனுமதித்து வருகிறோம்.
தினமும் கேட்டால் எப்படி
அவரவர் விருப்பப்படி தினமும் ஒருவர் அப்பாயிண்மென்ட் கேட்டால் நம்மால் கொடுக்க முடியாது. அதனால் ஒருநாள் கிளப் செய்து அனைவரையும் அழைத்து பார்க்க விடுகிறோம். கேப்டனை பார்க்க வேண்டும் என கேட்டவர்களை தொடர்பு கொண்டு இந்த நாளில் பார்க்க வருமாறு கூறினால் வெளியூரில் இருப்பதாக சொல்கிறார்கள். எனவே அவரை பார்க்க அனுமதித்தாலும் தப்பு சொல்றாங்க, பார்க்க விடலைன்னாலும் தப்பு சொல்றாங்க என பிரேமலதா தெரிவித்தார்.
ராதாரவி
விஜயகாந்த் எலும்பும் தோலுமாக இருக்கும் புகைப்படத்தை பார்க்கும் பலர் கண்ணீர் விட்டனர். இந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு யூடியூப் சேனலுக்கு ராதாரவி அளித்த பேட்டியில் விஜயகாந்தின் புகைப்படத்தை பார்த்து கண் கலங்கினார். அப்போது அவர் கூறுகையில் விஜயகாந்தை சந்திக்க அவரது மைத்துனர் சுதீஷுக்கு போன் செய்தேன். ஆனால் அவர் எடுக்கவே இல்லை. இதனால் அவரது மகன் விஜய பிரபாகரனுக்கு போன் செய்தேன். நல்ல மரியாதையாக பேசினார். அப்பாவை சந்திக்கலாம் அங்கிள், ஆனால் அம்மாவிடம் கேட்டு சொல்கிறேன் என தெரிவித்தார். அத்தோடு அவ்வளவுதான் விஜய பிரபாகரனிடம் இருந்து போனே வரவில்லை என ராதாரவி தனது மனக்குறையை தெரிவித்திருந்தார்.