நாளை சென்னை வருகிறார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.. நாளை மறுநாள் திருச்சி, திருவாரூக்கு பயணம்!
சென்னை: குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு 2 நாள் பயணமாக நாளை (செப்டம்பர் 2) தமிழகத்துக்கு வருகிறார். சென்னைக்கு நாளை வரும் ஜனாதிபதி முர்மு, நாளை மறுநாள் திருச்சி செல்கிறார். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
நாளை காலை 11.40 மணியளவில் தனி விமானம் மூலம் சென்னை வருகிறார். அதைத்தொடர்ந்து, சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெறும் சிட்டி யூனியன் வங்கியின் 120வது ஆண்டு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார். இந்த நிகழ்வில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் பங்கேற்கிறார்.

நாளை மாலை சென்னை ஆளுநர் மாளிகையில் தங்குகிறார் திரௌபதி முர்மு. பாதுகாப்பு அலுவலின் பொருட்டு சென்னை விமான நிலையம், சென்னை வர்த்தக மையம் (நந்தம்பாக்கம்), ராஜ் பவன் மற்றும் இந்திய குடியரசு தலைவரின் வாகனம் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டு, அந்த பகுதிகளில் ட்ரோன் கேமராக்கள் மற்றும் எந்தவிதமான பறக்கும் பொருட்கள் பறக்கவிட, செப்டம்பர் 2, 3 ஆகிய நாட்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள் (செப்டம்பர் 3) சென்னையில் இருந்து தனி விமானத்தில் திருச்சி விமான நிலையத்துக்கு காலை 10.55 மணிக்கு வருகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு. அவரை தமிழக அமைச்சர்கள், மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் உள்ளிட்டோர் வரவேற்கின்றனர். அதைத்தொடர்ந்து, பகல் 12.10 மணியளவில் ஹெலிகாப்டரில் திருவாரூர் சென்று, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் நடைபெறும் 10-வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்று, மாணவ, மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்குகிறார் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு.
அதன்பிறகு, திருவாரூரில் இருந்து மாலை 4.30-க்கு ஹெலிகாப்டரில் புறப்பட்டு, ஸ்ரீரங்கம் யாத்ரி நிவாஸ் எதிரே கொள்ளிடம் ஆற்றின் பஞ்சக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிபேடு தளத்துக்கு வருகிறார். அங்கிருந்து காரில் புறப்பட்டு மாலை 5.20-க்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார். அங்கு சுவாமி தரிசனம் செய்யும் திரவுபதி முர்மு, மாலை 6 மணிக்கு கார் மூலம் திருச்சி விமான நிலையம் சென்றடைகிறார்.
திருச்சி விமான நிலையத்தில் இரவு உணவை முடித்துக்கொண்டு, இரவு 7 மணியளவில் தனி விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டுச் செல்கிறார். குடியரசுத் தலைவர் வருகையை முன்னிட்டு திருச்சி விமான நிலையம், ரங்கம் பஞ்சக்கரை, ரங்கநாதர் கோயில் மற்றும் அவர் காரில் செல்லும் வழிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications