ஆட்சியில் பங்கு கேட்கும் பாஜக, பாமக.. ஓபிஎஸ், அமமுக விவகாரம் வேற.. மாட்டிக்கொண்ட எடப்பாடி பழனிசாமி!
சென்னை: அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக தொடர்ச்சியாகக் கூட்டணி ஆட்சி என்று பேசி வரும் நிலையில், அதிமுகவுடன் கூட்டணி அமைக்கக் காத்திருக்கும் பாமகவும், ஆட்சியில் பங்கு என்று பேசத் தொடங்கி இருக்கிறது. இன்னொரு பக்கம் ஓபிஎஸ் மாநாடு நடத்த உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமிக்கு அழுத்தம் அதிகரித்திருப்பதாகப் பார்க்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 9 மாதங்கள் இருக்கும் நிலையில், அத்தனை கட்சிகளும் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளனர். திமுக முதலில் தனது கட்சி நிர்வாகிகளைச் சந்தித்து ஆலோசித்து வரும் நிலையில், அதிமுக நேரடியாக மக்களைச் சந்தித்து வருகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தொகுதி வாரியாக மக்களைச் சந்தித்து வருகிறார்.

இதனிடையே அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலில் வென்றால், கூட்டணி ஆட்சி அமைக்கப்படும் என்று அமித்ஷா 3 முறை கூறி இருக்கிறார். இன்று செய்தியாளர்களைச் சந்தித்து அண்ணாமலை பேசுகையில், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்பதைத் தெளிவாகச் சொல்லிவிட்டார். அவர் சொன்னதை நான் எப்படி மாற்றிக் கூற முடியும்? அதிமுகவுக்கு மாற்றுக் கருத்து இருந்தால், அமித்ஷாவிடம் பேசி முடிவு எடுக்கலாம் என்று தெரிவித்துள்ளார்.
இதனால் தமிழக பாஜகவின் குரல் கூட்டணி ஆட்சி என்பதாகவே பார்க்கப்படுகிறது. ஏனென்றால் பல்வேறு தருணங்களிலும் அண்ணாமலை மற்றும் அமித்ஷா இடையில் அதிக இணக்கம் இருப்பது பாஜகவில் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். இதனால் தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி என்று எடப்பாடி பழனிசாமி கூறி வந்தாலும், கூட்டணி ஆட்சி என்று பாஜக பேசி வருவது பின்னடைவாக மாறி வருகிறது.
அதுமட்டுமல்லாமல் பாஜகவைத் தொடர்ந்து பாமகவில் ஆட்சியில் பங்கு என்ற வார்த்தையை அன்புமணி பேசத் தொடங்கி இருக்கிறார். தமிழகத்தில் ஆளும் அரசியல் பாமகவின் பங்கும் இருக்க வேண்டும், அது நமது உரிமையும் கூட என்று அன்புமணி பேச தொடங்கியுள்ளார். பாஜக ஏற்கனவே அதிமுகவுடன் கூட்டணி அமைத்துவிட்ட நிலையில், அடுத்ததாக பாமக இணையும் என்று பார்க்கப்படுகிறது.
பாமக மற்றும் பாஜக ஆகிய இரு முக்கிய கட்சிகள் ஒரே குரலாக ஆட்சியில் பங்கு என்பதைத் தெளிவாகப் பேசி வருகின்றனர். வன்னியர்கள் வாக்கு இல்லாமல் அதிமுகவால் சேலத்தில் கூட முழுமையாக வெற்றி பெற முடியாது. இதனை எடப்பாடி பழனிசாமியும் நன்றாகவே அறிவார். இன்னொரு பக்கம் ஆகஸ்ட் மாதத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாநாடு நடத்த உள்ளதாக அறிவித்திருக்கிறார்.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஓபிஎஸ் பாஜக அணியில் இருந்ததன் காரணமாக, பாஜக வேட்பாளர்களுக்கு கணிசமான வாக்குகள் கிடைத்தன. முக்குலத்தோர் சமுதாய வாக்குகள் ஓபிஎஸ்-க்கு இன்னும் வலிமையாகப் பார்க்கப்படும் சூழலில், அமமுக தரப்பில் தாங்களும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருக்கிறோம் என்று தொடர்ந்து பேசி வருகின்றனர்.
திமுக கூட்டணி இணக்கமாக இருந்து வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இடம்பெறக் கூடிய கட்சிகள் தொடர்ச்சியாக ஆட்சியில் பங்கு வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமியை நெருக்கி வருகின்றனர். இதனால் எடப்பாடி பழனிசாமியின் அடுத்தகட்ட திட்டம் என்னவாக இருக்கும் என்பதே ரத்தத்தின் ரத்தங்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.












Click it and Unblock the Notifications