பிரதமர் நரேந்திர மோடி வருகையால் இத்தனை நன்மையா? பட்டியல் போடும் பாஜக.! என்னென்ன திட்டங்கள் தெரியுமா?
சென்னை : பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகை தந்து பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கும் நிலையில், அது தொடர்பாக தமிழகம் அடையும் நன்மைகளை பட்டியலிட்டு பிரதமரை வரவேற்போம்! தமிழகத்தை வளமாக்குவோம்! என தமிழக பாஜகவினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர்.
Recommended Video
திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு தமிழகத்திற்கு 2வது முறையாக வருகை தரும் பிரதமர் நரேந்திர மோடி, சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் பிரமாண்ட விழாவில் கலந்து கொண்டு பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
மேலும் சாலை போக்குவரத்து அமைச்சகத்தின் 4 திட்டங்கள், ரெயில்வே துறை திட்டங்கள், நகர்ப்புற வீட்டு வசதித்துறை திட்டங்கள் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை திட்டங்களை நாட்டுக்கு அர்ப்பணிப்பதுடன், பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

பிரதமர் வருகை
இந்நிலையில் பிரதமர் வருகையால் தமிழகம் அடையும் நன்மைகளை பட்டியலிட்டு பிரதமரை வரவேற்போம்! தமிழகத்தை வளமாக்குவோம்! என தமிழக பாஜகவினர் ட்விட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அதில், "நாளை தமிழகம் வரும் பிரதமர் 31,400 கோடி ரூபாய் மதிப்புள்ள 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாடுகிறார். கட்டமைப்புகளை பெருக்கும் பல்வேறு துறைகளை சார்ந்த இந்த திட்டங்கள் தமிழக தொழில் துறைக்கு புத்துணர்ச்சியூட்டுவதோடு, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும்.

பல திட்டங்கள்
மதுரை-தேனி 75 கிலோ மீட்டர் அகல ரயில்பாதை ரூபாய் 500 கோடி மதிப்பு. தாம்பரம்-செங்கல்பட்டு சென்னை புறநகர் ரயில் மூன்றாவது பாதை ரூபாய் 590 கோடி மதிப்பு. 850 கோடி ரூபாய் மதிப்புள்ள 115 கிலோ மீட்டர் எண்ணூர்-செங்கல்பட்டு, மற்றும் 271 கிலோமீட்டர் திருவள்ளூர்- பெங்களூரு குழாய் மூலம் இயற்கை எரிவாயு திட்டம் 850 கோடி ரூபாய் மதிப்பு. பிரதம மந்திரி அனைவருக்கும் வீடு திட்டத்தில், சென்னை கலங்கரை விளக்கம் அருகில் கட்டப்பட்டுள்ள 116 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 1152 வீடுகளை அர்பணிக்கிறார். சென்னை - பெங்களூரு 262 கிலோ மீட்டர் அதிவிரைவு சாலை ரூபாய் 14870 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும். இதன் மூலம் சென்னை பெங்களூரு பயண நேரம் 2-3 மணி நேரம் குறையும்.

பறக்கும் சாலை திட்டம்
சென்னை துறைமுகம் - மதுரவாயல் நான்கு வழி பறக்கும் சாலை திட்டம் ரூபாய் 5850 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது. 21 கிலோமீட்டர் நீளமுள்ள இந்த நான்கு வழி சாலை நேரடியாக சென்னையின் எல்லையை துறைமுகத்தோடு இணைப்பதோடு, இரண்டு மணி நேர பயணத்தை 15 நிமிடங்களாக குறைக்கும். தர்மபுரி-நெரலூரு தேசிய நெடுஞ்சாலையில் 3870 கோடி ரூபாய் செல்வதில் 94 கிலோமீட்டர் நான்கு வழிப்பாதை மற்றும் மீன்சுருட்டி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 31 கிலோமீட்டர் 720 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படுகிறது. இந்த திட்டம் அருகாமை கிராமங்களை தேசிய நெடுஞ்சாலைகளோடு இணைக்கும்.

பிரதமரின் 'விரைவு சக்தி'
சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையங்களை 1800 கோடி மதிப்பில் நவீனமயமாக்கும் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமரின் 'விரைவு சக்தி' (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டம் மப்பேட்டில் 159 ஏக்கர் நிலத்தில் அமையவிருக்கும் பன்முனை சரக்கு பூங்காவிற்கு அடிக்கல் நாட்டுகிறார். பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தியாவின் சரக்கு போக்குவரத்து கடந்த 10 ஆண்டுகளில் இரு மடங்கு உயர்ந்துள்ளது. வரும் 10 ஆண்டுகளில் இது மேலும் இரு மடங்காக உயரக்கூடிய நிலையில் நம் போக்குவரத்து கட்டமைப்புகளை சீரமைப்பது அவசியமானது மட்டுமல்ல, அவசரமும் கூட.இந்தியாவில் சரக்கு போக்குவரத்து செலவு உள்நாட்டு மொத்த உற்பத்தியில் 13 சதவீதமாக உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. மற்ற முக்கிய நாடுகளில் இது 8 சதவீதமாகவே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்திய ஏற்றுமதியாளர்கள்
இந்திய ஏற்றுமதியாளர்கள் கோடிக்கணக்கான பணத்தை சரக்கு போக்குவரத்திற்காக செலவழிக்கின்றனர். இதன் காரணமாக நம் நாட்டின் தயாரிப்புகள் மற்ற நாடுகளின் தயாரிப்புகளை விட விலை அதிகமாக உள்ளதால், இந்திய ஏற்றுமதியின் போட்டித்தன்மை வெகுவாக பாதிக்கப்படுவதோடு, வேளாண் துறையிலும் நமது விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். ரயில் மூலம் சரக்குகளை கொண்டு சென்றால், செலவும் குறைவதோடு, நேரமும் சேமிக்கப்படும் என்ற போதிலும் உரிய கட்டமைப்புகள் இல்லாததால், 60 சதவீத பொருட்கள் சாலை மார்க்கமாகவே நமது நாட்டில் கொண்டு செல்லப்படுகின்றன. பொருட்களை கொண்டு செல்ல தேவைப்படும் அளவிற்கு சாலைகளுக்கேற்ற வாகனங்களும், வாகனங்களுக்கேற்ற சாலைகளும் முறையாக இல்லை என்பதால் தாமதம் ஏற்படுத்துவதோடு பல சிக்கல்களை உருவாக்குகிறது. மேலும், இந்த பொருட்களை பாதுகாக்க நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கிடங்குகள், குளிர்பதன கிடங்குகள் ஆகிய கட்டமைப்புகள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் நரேந்திர மோடி
இதை சமாளிக்கவே, 'அதி விரைவு சக்தி' (GATI Sakthi) தேசிய பெருந்திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதில் ஒரு பகுதியாகவே, 35 பன்முனை சரக்கு பூங்காக்களை நாடு முழுக்க அமைக்கும் திட்டத்தை கொண்டு வந்துள்ளது சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம். இதன் மூலம் சென்னையில் உள்ள துறைமுகங்கள், விமான நிலையம் ஆகியவற்றை ரயில் மற்றும் சாலை போக்குவரத்தோடு இணைக்கும் முனையமாக மெப்பேடு பூங்கா செயல்படும். இதன் மூலம் தமிழகத்தில் சரக்கு போக்குவரத்து தொய்வின்றி, விரைவாக, குறித்த நேரத்தில் சென்றடைவதோடு , எரிபொருள் மற்றும் போக்குவரத்து செலவை குறைக்கும். சென்னையில், வாகனங்களால் ஏற்படும் மாசு குறையும்.

தமிழகத்தை வளமாக்குவோம்
சென்னை துறைமுகத்திற்கு சொந்தமான 158 ஏக்கர் பரப்பளவில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் அமைகின்ற இந்த பூங்காவானது பத்தாயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும். அந்த பகுதியே இனி சுறுசுறுப்பாக இயங்கக்கூடிய நிலையில், பல்வேறு சிறு குறு வர்த்தகம் வளரும். தமிழக தொழில்துறை மற்றும் தமிழக வர்த்தகம் மேம்படுவதோடு, தமிழக உற்பத்தியாளர்கள் மற்றும் தமிழக விவசாயிகள் இந்த 'அதிவிரைவு சக்தி' தேசிய பெருந்திட்டத்தின் மூலம் அதிக பயனடைவது உறுதி செய்யப்படுகிறது. பிரதமரை வரவேற்போம்! தமிழகத்தை வளமாக்குவோம்!" என அதில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications