பிரேமலதாவுக்கு போன் போட்ட பிரதமர் மோடி.. விஜயகாந்த் உடல்நிலை பற்றி விசாரிப்பு.. குணமடைய பிரார்த்தனை!
சென்னை : தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் உடல்நிலை குறித்து பிரதமர் நரேந்திர மோடி, பிரேமலதா விஜயகாந்திடம் தொலைபேசியில் நலம் விசாரித்தார்.
உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட தேமுதிக தலைவர் விஜயகாந்த்தின் ரத்த சர்க்கரை அளவு வெகுவாக அதிகரித்த நிலையில், அவரது காலில் மூன்று விரல்கள் அகற்றப்பட்டுள்ளன.
இந்நிலையில், பிரேமலதாவை தொடர்பு கொண்டு பேசிய பிரதமர் நரேந்திர மோடி விஜயகாந்த் விரைந்து நலம் பெற்றுத் திரும்ப வேண்டிக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.
”கேப்டன் விஜயகாந்த் என் அருமை நண்பர்” - உடல்நலம் பெற வாழ்த்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
விஜயகாந்த் உடல்நிலை
உடல்நிலை சரியில்லாததால் கடந்த சில வருடங்களாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் பொதுக்கூட்டங்களிலோ, கட்சிக் கூட்டங்களிலோ பங்கேற்காமல் இருந்து வருகிறார். அவர் சிகிச்சைக்காக பல்வேறு நாடுகளுக்கும் பயணம் மேற்கொண்டார். இந்நிலையில், சமீபத்தில் விஜயகாந்தின் காலில் வீக்கம் ஏற்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கால் விரல்கள்
விஜயகாந்த்தின் கால் விரல் பகுதியில் ரத்த ஓட்டம் சீராக இல்லை என்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகளவு கூடியிருப்பதால் விஜயகாந்தின் உடல்நிலை கடுமையாக பாதிக்கப்பட்டிருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனால் தவிர்க்க முடியாத காரணத்தால் விஜயகாந்தின் வலது கால்களில் இருந்த 3 விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளதாகவும் தேமுதிக சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது.
நலமாக இருக்கிறார்
மேலும், மருத்துவர்களின் கண்காணிப்பில் அவர் நலமாக இருக்கிறார். சிகிச்சை முடிந்து ஓரிரு நாட்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்ததும், கட்சித் தொண்டர்கள், அபிமானிகள் முதல் திரை பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் விஜயகாந்த் உடல் நலம் பெற அடுத்தடுத்து தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
விசாரித்த பிரதமர் மோடி
இந்நிலையில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல் நலம் குறித்து பிரேமலதா விஜயகாந்த்திடம் பிரதமர் நரேந்திர மோடி கேட்டறிந்தார். விஜயகாந்த்திற்கு அளிக்கப்படும் மருத்துவ சிகிச்சைகள் குறித்தும் பிரதமர் மோடி தொலைபேசியில் பிரேமலதாவிடம் விசாரித்துள்ளார். மேலும் விஜயகாந்த் விரைவில் குணமடைந்து ஆரோக்கியமாக வாழ தாம் பிரார்த்தனை செய்ததாகவும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.