தமிழக உள்ளாட்சித் தேர்தல்.. பாஜகவினருக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து.. நன்றி சொன்ன அண்ணாமலை
சென்னை: தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றதில் பாஜக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கு பிரதமர் மோடி தமிழில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதை பாஜக தமிழக தலைவரான அண்ணாமலை வரவேற்றுள்ளார்.
தமிழகத்தில், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய ஒன்பது மாவட்டங்களுக்கு ஊரக உள்ளாட்சி தேர்தல் கடந்த 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடந்து முடிந்தது.

உள்ளாட்சித் தேர்தல்கள்
ஒன்பது மாவட்டங்களில் உள்ள 140 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 1381 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும், 2,901 கிராம ஊராட்சித் தலைவர் பதவியிடங்களுக்கும், 22,581 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களுக்கும் என மொத்தமாக 27,003 தேர்தல் உள்ளாட்சிப் பதவிகளுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது. இவற்றில் வேறு மாவட்டங்களில் இடைத் தேர்தல் நடந்த மிகச் சில இடங்களும் அடங்கும்.

பதவி பிரமாணம்
தேர்தலில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு போட்டியின்றி மற்றும் போட்டி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் இன்று காலை 10 மணிக்கு அந்தந்த மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டனர். பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டவர்கள் மட்டுமே வரும் 22ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத்தலைவர், ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர் தேர்தலில் போட்டியிடவோ அல்லது வாக்களிக்கவோ தகுதி உடையவர்கள் என்று மாநில தேர்தல் ஆணையம் கூறியிருந்தது.

பிரதமர் மோடி வாழ்த்து
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் "தமிழ்நாடு உள்ளாட்சித் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட எங்கள் கட்சிக்காரர்களை நான் வாழ்த்த விரும்புகிறேன். எங்கள் மீது நம்பிக்கை வைத்த தமிழ்நாட்டின் சகோதர சகோதரிகளுக்கு நன்றி. அருமையான தமிழகத்தின் முன்னேற்றத்திற்காக தொடர்ந்து உழைப்போம்" என்று பதிவிட்டுள்ளார்.

அண்ணாமலை பகிர்ந்த புகைப்படம்
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பாஜகவினரை சமீபத்தில் சந்தித்தார். அப்போது அவர்களுடன் எடுத்துக் கொண்ட படங்களை டுவிட்டரில் பகிர்ந்துள்ளார். இந்த டுவிட்டை ரீட்வீட் செய்துள்ள பிரதமர் மோடி, மேற்கண்டவாறு வாழ்த்து தெரிவித்தார்.

அண்ணாமலை நன்றி
இதற்கு பதிலளித்துள்ளார் அண்ணாமலை. பிரதமர் மோடியின் ட்வீட்டை ரீட்வீட் செய்துள்ள அண்ணாமலை, உள்ளம் தமிழையும் தமிழர்களை விரும்புவதால் உள்ளாட்சித் தேர்தலை கூட உற்று நோக்குகின்றீர்கள். உங்கள் வாழ்த்து எங்களுக்கு உற்சாகப் பொற்புதையல். அருமை தமிழகத்தின் பெருமைகளையும், சகோதர வாஞ்சையுடன் தமிழர்களையும் வாழ்த்தியதற்கு நன்றி. நரேந்திர மோடி அய்யா, தமிழகம் என்றும் உங்களுடன்! இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Recommended Video

பாஜக பெற்ற வெற்றி
ஊரக உள்ளாட்சி தேர்தலில் பாஜக, 8 யூனியன் கவுன்சிலர், 41 பஞ்சாயத்து தலைவர்கள், 332 வார்டு உறுப்பினர்கள் இடங்களை பிடித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications