டிவிஎஸ் உட்பட.. களமிறங்கிய 8 நிறுவனங்கள்.. அரசு மருத்துவமனைகளில் நிறுவப்படும் ஆக்சிஜன் தொழிற்சாலைகள்
சென்னை: தமிழகத்தில் அரசு மருத்துவமணிகளிலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை நிறுவும் திட்டத்தில் தனியார் நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. அரசுக்கு உதவியாக 8 நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன.
தமிழகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரிக்க அதிகரிக்க ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டு வருகிறது. இதுவரையில் ஆக்சிஜன் தட்டுப்பாடு பெரிதாக வெடிக்கவில்லை என்றாலும், வரும் நாட்களில் ஆக்சிஜன் தேவை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது தமிழகத்தின் ஆக்சிஜன் தேவை 420 மெட்ரிக் டன்னாக உள்ளது. வரும் வாரங்களில் இது 840 மெட்ரிக் டன்னாக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனாவை குணமாக்கும் என நினைத்து.. மண்ணெண்ணெய் குடித்த டெய்லர் பரிதாப உயிரிழப்பு!
தேவை
தமிழகத்திற்கு தற்போது தேவையான ஆக்சிஜன் கிடைத்து வருகிறது. தமிழகத்திற்கு உள்ளேயே சிப்காட், ஐனாக்ஸ் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள், ஒடிசா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு ஆக்சிஜன் தொடர்ந்து வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அனைத்து மருத்துவமனைகளுக்கும் போதுமான அளவு ஆக்சிஜன் வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால்
ஆனால் இந்த ஆக்சிஜனை மருத்துவமனைக்கு கொண்டு செல்வதில் சமயங்களில் தாமதம் ஏற்படுகிறது. முக்கியமாக மருத்துவமனைகளுக்கு சிலிண்டர்கள் கொண்டு செல்லப்படும் போக்குவரத்து நேரம் காரணமாக அவ்வப்போது நிறைய தாமதம் ஏற்படுகிறது. இதனால் மருத்துவமனைகளுக்கு அருகிலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைத்தால் நன்றாக இருக்கும் என்று கோரிக்கைகள் வைக்கப்பட்டு வருகின்றன.
ஆக்சிஜன் சிலிண்டர்
அதன்படி தமிழகத்தில் அரசு மருத்துவமணிகளிலேயே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை நிறுவும் திட்டத்தில் 8 தனியார் நிறுவனங்கள் களமிறங்கி உள்ளன. இதற்காக தமிழகத்தில் உள்ள பெரிய தனியார் நிறுவனங்களான செயிண்ட் கோபெய்ன், ஹூண்டாய், டிவிஎஸ்,எல்&டி உள்ளிட்ட 8 நிறுவனங்கள் முன்வந்துள்ளன. நாங்களே ஆக்சிஜன் உற்பத்தி மையங்களை அமைத்து தருகிறோம் என்று கூறியுள்ளன.
எங்கு
முதல் கட்டமாக பல்வேறு மாவட்டங்களில் இந்த உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட உள்ளன. ஒமந்தூரார், ஸ்டான்லி மற்றும் செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட 13 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் உற்பத்தி மையங்கள் அமைக்கும் திட்டத்தை இந்த நிறுவனங்கள் தமிழக அரசிடம் சமர்பித்துள்ளன. தமிழக அரசு இதற்கு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல்கள் வருகின்றன.
எப்படி?
நேரடியாக மருத்துவமனைக்கு வெளியே ஆக்சிஜன் உற்பத்த் செய்து, மருத்துவமனைக்கு நிமிடத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த திட்டத்தை அந்த நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இதன் மூலம் பெரிய அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு மொத்தமாக குறையும். அதேபோல் இங்கு அனுப்பப்படும் ஆக்சிஜன்கள் மற்ற மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லவும் வசதியாக இருக்கும்.