சென்னை மாநகராட்சி மேயரானார் திமுகவின் பிரியா ராஜன்! முதல் பட்டியலின மேயர் என்ற பெருமை பெற்றார்
சென்னை: சென்னை மாநகராட்சியின் மேயராக போட்டியின்றி தேர்வானார் திமுகவின் பிரியா ராஜன். இதையடுத்து அவர் மேயராக பதவி பிரமாணம் செய்து கொண்டார்.
தமிழகத்தில் மேயர், துணை மேயர், நகராட்சி தலைவர், நகராட்சி துணைத் தலைவர், பேரூராட்சி தலைவர், பேரூராட்சி துணைத் தலைவர் ஆகியோருக்கான மறைமுகத் தேர்தல் இன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இது முழுக்க முழுக்க கவுன்சிலர்களால் தேர்வு செய்யப்படும் பதவிகளாகும்.
தமிழகத்தில் 21 மாநகராட்சிகளுக்கான மேயர் தேர்தல் இன்று அந்தந்த மாநகராட்சி அலுவலகங்களில் நடைபெற்று வருகிறது. இதில் மொத்தம் 20 மாநகராட்சிகளில் திமுக போட்டியிடுகிறது. ஒரே ஒரு மாநகராட்சியான கும்பகோணம் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுவிட்டது.

சென்னை மேயர் யார்
இதில் தமிழகத்தின் தலைநகர் சென்னையின் மேயர் யாராக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. கிட்டத்தட்ட 11 ஆண்டுகளுக்கு பிறகு சென்னைக்கு மேயர் தேர்வு என்பதாலும் அந்த பதவி பட்டியலினத்தை சேர்ந்த பெண்ணுக்கு ஒதுக்கப்பட்டதாலும் எதிர்பார்ப்புகள் அதிகரித்தனர்.

திமுக சார்பில் மேயர் வேட்பாளர்கள்
அந்த வகையில் திமுக சார்பில் மேயர் வேட்பாளர்கள் குறித்த பட்டியல் நேற்று வெளியானது. அதில் சென்னை மேயர் வேட்பாளராக திமுக சார்பில் பிரியா ராஜன் அறிவிக்கப்பட்டார். அதன்பேரில் இன்று சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற மேயர் தேர்தலில் அவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இதனால் பிரியா ராஜன் சென்னை மேயராக தேர்வானதாக அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் அதிமுக கவுன்சிலர்கள 15 பேர் கலந்து கொள்ளவில்லை. பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் பங்கேற்றார்.

சென்னை மேயராக பிரியா ராஜன் தேர்வு
இதையடுத்து அவர் சென்னை மேயராக பதவியேற்றார். அவருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மேயருக்கான சிவப்பு நிற அங்கியையும் அவரிடம் கொடுத்தார். அந்த அங்கியை அணிந்து கொண்டு வந்த மேயர் பிரியா ராஜனுக்கு மேயருக்கான செங்கோலை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் கொடுக்க அதை அமைச்சர்கள் சேகர் பாபுவும் மா சுப்பிரமணியனும் பிரியா ராஜனுக்கு வழங்கினர்.

சென்னை மேயரானார் பிரியா ராஜன்
இதையடுத்து அவரை மேயருக்கான நாற்காலியில் அமர வைத்தனர். பின்னர் இரு அமைச்சர்களும் மேயர் பிரியா ராஜனுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தினர். அது போல் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடியும் பூங்கொத்து கொடுத்து பிரியா ராஜனுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

யார் இந்த பிரியா ராஜன்
பிரியா ராஜன் சென்னை மேயராக பொறுப்பேற்றதன் மூலம் பட்டியலினத்தை சேர்ந்த முதல் பெண் மேயர், இளம் வயதில் முதல் மேயர், வடசென்னையைச் சேர்ந்த முதல் மேயர் உள்ளிட்ட பெருமைகளை பெற்றுள்ளார். 28 வயதாகும் பிரியா ராஜன், எம் காம் பட்டதாரி ஆவார். வடசென்னையிலிருந்து மேயராக தேர்வு செய்யப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications