நானே களத்துல இறங்குறேன்.. சோலோவாக மதுரையைக் கலக்கும் அமைச்சர் பிடிஆர்! திண்டாடும் உடன் பிறப்புகள்!
மதுரை: 2026 தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் திமுக அமைச்சர்கள் மக்களை சந்திக்க தொடங்கி இருக்கின்றனர். அந்த வகையில் மதுரை மத்திய தொகுதியில் ஹாட்ரிக் வெற்றி பெற தயாராகி வருகிறார் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சரான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன். தொகுதி மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து வரும் அவர் உடன் கவுன்சிலர்கள், நிர்வாகிகளை அழைத்துச் செல்லாமல் நேரடியாக அதிகாரிகளை அழைத்து செல்வதாக புலம்புகின்றனர் திமுகவினர்
2026 தேர்தலுக்கு தமிழகம் தயாராகி வரும் நிலையில் திமுக அமைச்சர்கள் தங்கள் தொகுதிகளில் வேலையை துவக்கி விட்டனர். அந்த வகையில் மதுரை மத்திய தொகுதியில் மூன்றாவது முறையாக களமிறங்கு இருக்கும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார்.
தமிழக அரசியலில் பாரம்பரிய மிக்க பிடிஆர் குடும்பம் 3 தலைமுறைகளாக அரசியலில் ஈடுபட்டுள்ளனர். இவரது தாத்தா பிடி ராஜன் சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர். அவரது தந்தை பிடிஆர் பழனிவேல் ராஜன் முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் ஆகவும், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராகவும் இருந்திருக்கிறார்.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
3ஆம் தலைமுறை அரசியல்வாதியான பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் 2021-ல் நிதியமைச்சர் ஆகவும் அதற்குப் பிறகு தகவல் தொழில்நுட்ப அமைச்சராகவும் பணியாற்றி வருகிறார். மனதில் பட்டதை சற்றென்று பேசுபவர். தமிழக அமைச்சர்களில் நன்கு படித்தவர்களில் ஒருவர். இடையில் ஒரு ஆடியோ விவகாரத்தால் திமுக தலைமை அவர் மீது அதிருப்தி அடைந்ததாக சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு கட்சி பணிகளில் இருந்து ஒதுங்கி இருக்கும் அவர் தொகுதி அளவில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
மதுரை மத்திய தொகுதி
இந்நிலையில் கடந்த சில தினங்களாக தொகுதி மக்களை நேரடியாக சந்தித்து வருகிறார் பிடிஆர். மதுரை மத்திய தொகுதியில் ஹாட்ரிக் அடிப்பாரா என எதிர்பார்க்கப்படும் நிலையில் அவரை எதிர்த்து களமிறங்க அதிமுக பாஜக தலைவர்கள் தயாராகி வருகிறார்கள். மதுரை மத்திய தொகுதியில் தமிழக வெற்றிக் கழகமும் பலமாக இருப்பதால் இந்த முறை சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என உணர்ந்திருக்கிறார் பிடிஆர்.
திமுக கவுன்சிலர்கள்
ஆனால் தனது மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட வார்டுகளில் கட்சிக்காரர்களை கண்டு கொள்ளாமல் தானே மக்களை சந்தித்து வருகிறார். வார்டு வாரியாக மதுரை மத்திய தொகுதி மக்களை சந்தித்து வரும் அவர் அவர்கள் சுட்டிக்காட்டும் குறைகளை உடனடியாக அதிகாரிகள் மூலம் நிறைவேற்றியும் வருகிறார். இந்த நிலையில் கவுன்சிலர்கள் வார்டு செயலாளர்கள் உள்ளிட்டவர்களை கண்டு கொள்ளாமல் தொகுதி மக்களை அவர் சந்திப்பதாகவும் புலம்புகின்றனர் கவுன்சிலர்கள். தேர்தல் நேரத்தில் பிடிஆருக்காக நிறைய வேலை பார்த்தோம். ஆனால் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என நினைக்கும் அமைச்சர் உள்ளூர் நிர்வாகிகளை புறக்கணித்து வருகிறார் என கூறுகின்றனர்.
திமுகவினர் அதிருப்தி
அதே நேரத்தில் பகுதி மக்களை சந்திக்கும் போது கவுன்சிலர்கள் எந்த விதமான நலத்திட்ட உதவிகளையும் செய்யவில்லை எனவே கூறுகின்றனர். இதனால் மக்கள் முன் கவுன்சிலர்களை அதட்ட வேண்டிய நிலை உள்ளது. மேலும், கவுன்சிலர்கள் மீது மக்கள் கடும் அதிருப்தியில் இருக்கும் நிலையில், அந்த அதிருப்தியை சமாளிக்கும் பொருட்டு அவர்களை அழைத்துச் செல்லவில்லை என கூறுகின்றனர் அமைச்சரின் ஆதரவாளர்கள்.












Click it and Unblock the Notifications