தேனியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில் சேவை தேவை! பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை
சென்னை: தேனியில் இருந்து சென்னைக்கு தினசரி ரயில் சேவை தேவை என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இவர்களின் இந்த கோரிக்கை நிறைவேறுமா என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம்.
இதுகுறித்து தமிழக ரயில் தகவல்கள் எனும் சமூகவலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தேனி மாவட்ட மக்களின் அத்தியாவசியத் தேவையை உணர்ந்து, போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் ரயில் சேவைகளை உடனடியாக தினசரிச் சேவைகளாக மாற்ற வேண்டும் என்று ரயில்வே நிர்வாகத்திற்கு இப்பகுதி மக்கள் சார்பாக வலுவான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய சேவையின் சவால்கள்: தற்போது போடிநாயக்கனூரில் இருந்து சென்னைக்குச் செல்லும் ஒரே ரயில், வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதனால், தொழில் மற்றும் கல்வி ரீதியாகத் தினந்தோறும் சென்னைக்குச் செல்ல வேண்டிய தொழில் அதிபர்கள், அரசு ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.
பயணச் செலவு அதிகரிப்பு: வாரத்தில் பெரும்பாலான நாட்கள் ரயில் இல்லாததால், அதிகச் செலவில் தனியார் பேருந்து மற்றும் பிற போக்குவரத்துச் சேவைகளை நாட வேண்டிய கட்டாயத்தில் பயணிகள் உள்ளனர்.
நீண்ட வழித்தடம்: தற்போதுள்ள ரயில் (போடி - சென்னை) திண்டுக்கல், மதுரை, கரூர், நாமக்கல், சேலம் வழியாகச் செல்வதால், பயண நேரம் அதிகமாகிறது.
இரண்டு முக்கிய கோரிக்கைகள்
ரயில்வே நிர்வாகம் இரண்டு முக்கிய அம்சங்களைக் கருத்தில் கொண்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேனி மாவட்ட ரயில் பயணிகள் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தினசரிச் சேவையாக மாற்றம்: போடிநாயக்கனூரில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கிச் செல்லும் தற்போதைய வாராந்திர ரயில் சேவையை, மக்களின் அத்தியாவசியத் தேவையைக் கருதி, தினசரி விரைவு ரயில் சேவையாக மாற்றுதல்.
புதிய மற்றும் குறுகிய வழித்தடத்தில் சேவை: தற்போது ரயில் செல்லும் சேலம் வழித்தடத்தைவிட, திருச்சி மற்றும் விழுப்புரம் வழியாகச் செல்லும் வழித்தடம் பயண தூரத்தைக் குறைக்கும். எனவே, பயண நேரத்தைக் குறைப்பதற்காகவும், சேவைகளை அதிகரிப்பதற்காகவும், போடி - சென்னைக்கு திருச்சி, விழுப்புரம் வழியாக கூடுதலாக ஒரு தினசரி ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.
ரயில்வே பாதைகள் முழுமையாக மின்மயமாக்கப்பட்டு, இயக்கத்திற்குத் தயாராக உள்ள நிலையில், பயணிகளின் அடிப்படை உரிமையான தினசரி ரயில் சேவை குறித்த அறிவிப்பை ரயில்வே நிர்வாகம் விரைவில் வெளியிட வேண்டும் என்பதே தேனி மாவட்ட மக்களின் ஒருமித்த எதிர்பார்ப்பாக உள்ளது.
சென்னையில் இருந்து விழுப்புரம், திருச்சி வழியாக போடி செல்ல 594 கி.மீ. தூரமாகும். சென்னையில் இருந்து சேலம், கரூர் வழியாக போடி செல்ல 646 கி.மீ. தூரம் என்கிறார்கள். இந்த ரயில் சேவைக்காக மக்கள் நீண்ட காலமாக காத்திருப்பதாக சொல்கிறார்கள்.











Click it and Unblock the Notifications