இனிமே யாராவது பப்பு..ன்னு சொன்னா.. மயிலு இருந்திருந்தா இப்படித்தான் சொல்லியிருப்பாரோ ராகுலிடம்?!?
சென்னை: "இனிமே யாராவது பப்பு..ன்னு சொன்னா சப்புன்னு அறைஞ்சிடு.." மயிலு இருந்திருந்தா இப்படித்தான் சொல்லியிருப்பாரோ.. அந்த பப்பு இனி இங்கே வேகாது.. என்று சொல்லும் அளவுக்கு தன்னை மெருகேற்றி பக்குவமானவராக உருவெடுத்து வருகிறார் ராகுல் காந்தி!
சோனியாவுக்கு உடம்பும் சரியில்லாத சமயம் அது! பெரும்பாலான மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லாத நிலையில் முள் கிரீடத்தோடுதான் கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்றார் ராகுல்காந்தி.
'பப்பு', 'அனுபவம் இல்லாதவர், சிறுபிள்ளை, கத்துக்குட்டி என்ற பாஜக தலைவர்களின் கிண்டல், கேலிக்கு ஆளானார் ராகுல். இவர் எப்படி தலைமை பொறுப்பை சுமந்து செல்வார் என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழும் அளவுக்கு ஒரு மோசமான முத்திரையை பதித்தது பாஜக!
7 தமிழர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.. ராஜீவ் காந்தி கொலை பற்றி மனம் திறந்த ராகுல்!
விமர்சனங்கள்
ஆனால், இந்த ஓர் ஆண்டில்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்.. எவ்வளவு எவ்வளவு பக்குவங்கள்.. தன் மேல் சுமத்தப்பட்ட விமர்சனங்கள், இழிபேச்சுக்கள் அத்தனையையும் நாகரீகமாக கடந்து வந்தார் ராகுல்காந்தி. அதே சமயம் எல்லை தாண்டாமல், கூர்மையான விமர்சனங்களை முன்வைத்து பாஜகவுக்கு பதிலடிகளையும் தந்து வருகிறார் ராகுல்.
மிளிரும் பக்குவம்
அவ்வளவு எதற்கு? தனது கட்சியின் மூத்த தலைவர்கள் எதிர்க்கட்சியினரை மோசமாக விமர்சித்தால், அதை உடனடியாக கண்டித்தவரும் ராகுல்தான். எத்தனையோ பொதுக்கூட்டங்கள், தேர்தல் பிரச்சாரங்கள், கருத்தரங்குகள் போன்றவற்றில் தன்னை மெருகேற்றி கொண்டுள்ளார் ராகுல். பிரச்சாரம் மேற்கொள்ள தமிழகம் வந்த ராகுலிடம் இன்றும் இதே பக்குவம் மிளிறியதை காண முடிந்தது.
யதார்த்த பதில்
இந்தியாவில் பாலின வேறுபாடுகள் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு, ராகுல் ஒப்பிட்டு பேசியது தமிழகத்தைதான். "வட இந்தியாவில் குறிப்பாக உத்திரபிரதேசம், பீகாரில் பெண்களை அவ்வளவு கேவலமாக நடத்துகிறார்கள். பெண்களுக்கு மதிப்பு தருவது இந்தியாவிலேயே முன்னோடி தமிழகம்தான்" என்று பதிலளித்தார். இதே உத்திரபிரதேசம், பீகாரில் இப்போது பிரச்சாரத்திற்கு ராகுல் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தாலும் பட்டென யதார்த்தத்தை போட்டு உடைத்தார் ராகுல்!
மோடி பண்ணது தப்பு
பணமதிப்பிழப்பு தப்புன்னு சொல்றீங்க, நீங்க ஆட்சிக்கு வந்தா என்ன செய்வீங்க என்று ஒருவர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு ராகுல் "உங்களுக்கு இந்த விஷயம் பிடிச்சிருக்கா" என்று அந்த பெண்ணை மடக்கி கேள்வி கேட்க, அதற்கு அந்த பெண் "இல்லை.. பிடிக்கல" என்று பதில் சொல்ல.. உடனே ராகுல், "இதுதான் இந்த நாட்டின் குரல்" என்று சுருக் மற்றும் நறுக்கென பதில் அளித்தார். "இந்த ஐடியாவை மோடிக்கு யார் தந்தாங்களோ தெரியாது, ஆனா அது தப்பு" என்று சற்று கனத்த குரலிலேயே தெரிவித்தார்.
தீவிரவாதம்
காஷ்மீர் பிரச்சனைக்கு என்னதான் தீர்வு என்று ஒரு காஷ்மீர் பெண்ணே கேள்வி எழுப்புகிறார். அதற்கு ராகுல், "நாங்க வந்தபோது காஷ்மீர் தீவிரவாதம் பிடியில் இருந்தது. அதை மெல்ல விடுக்க முயற்சி எடுத்தோம். பெண்களுக்கு சுயஉதவி குழுக்கள் மூலமாக உதவி செய்தோம். சர்வதேசஅளவில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தினோம். ஆனால் மோடி வந்தபிறகு எப்பவுமே ஒரு பதட்டமான சூழலை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்" என்றார்.
சப்புன்னு போயிடும்
இப்படி எந்த மாநிலத்தை பற்றி எந்த கேள்வி கேட்டாலும் ராகுலின் பதிலில் ஒரு முதிர்ச்சி தெரிந்தது.. பக்குவமும், அனுபவமும் கலந்து வெளிப்பட்டது. அதே சமயத்தில், எந்த ஒரு இடத்திலும் தனிநபர் குறித்த விமர்சனங்களை முன் வைக்காமல், மத்திய அரசின் மீதான விமர்சனத்தை மட்டுமே முன்வைத்து... நாகரீகமான அரசியல் பாதையிலேயே தான் நடைபோடுவதை நாசூக்காக வெளிப்படுத்தினார் ராகுல்! இனி அவரை யாராவது பப்பு என்று சொன்னாலும்.. அது சப்புன்னுதான் போகும்...!