மழை வெள்ளம்... பொய்யான தகவல் பரப்பினால் கடும் நடவடிக்கை - டிஜிபி சைலேந்திர பாபு
மழை வெள்ள பாதிப்பு தொடர்பாக சமூக வலைதளங்களில் பொய் பரப்புரைகளை மேற்கொள்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக டிஜிபி சைலேந்திரபாபு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சென்னை: மழை வெள்ளம் குறித்து உண்மைக்குப் புறம்பான இடுகைகளை பதிவிடுவோர் எவராயினும் அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திரபாபு கூறியுள்ளார். அவர்களது வலைதளக் கணக்குகளை முடக்கவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.
Recommended Video
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் , ' தென்கிழக்கு வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துவருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பாதிப்பிலிருந்து பொதுமக்களை பாதுகாத்து இயல்பு வாழ்க்கைக்கு மீண்டும் கொண்டுவர காவல்துறையினர் மற்றும் பிற அரசுத்துறையினர் இரவு, பகல் பாராமல் மீட்புப்பணிகளில் போர்க்கால அடிப்படையில் ஈடுபட்டு வருகின்றனர்.

வதந்தி பரப்பாதீர்கள்
இத்தருணத்தில், சில சமூக விரோதிகள் சமூக வலைதளங்களை தங்களுக்கு சாதகமாக கையிலெடுத்துக்கொண்டு பொதுமக்களிடையே மழை, வெள்ளம் குறித்து அச்சத்தையும், பீதியையும், பதட்டத்தையும் ஏற்படுத்தும் வகையில் காணொளிகள், புகைப்படங்கள் மற்றும் கருத்துக்களை பகிர்வதுடன், பொய் பரப்புரைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

காவல்துறை அறிவிப்பு
கடந்த காலங்களில் தமிழகம் உள்ளிட்ட பிற மாநிலங்களில் நடைபெற்ற வெள்ள பாதிப்புகளை தற்போது நடைபெற்றது போன்று சித்தரித்து, பின்னணிக் குரல் பதிவுடன் சமூக வலைதளங்களில் சிலர் பதிவிட்டு, பொதுமக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்த முனைந்துள்ளது காவல்துறையின் கவனத்திற்கு வந்துள்ளது.

திட்டமிட்டு வதந்தி
சமூக வலைதளங்களை பயனுள்ள வகையில் பெரும்பாலானோர் பயன்படுத்திவரும் நிலையில், சிலர் அரசு நிர்வாகத்திற்கு அவப்பெயர் உருவாக்க வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக இதுபோன்ற அவதூறான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்பி வருவது சட்டப்படி குற்றமாகும்.

கடும் நடவடிக்கை
சமூக பொறுப்பின்றி உண்மைக்குப் புறம்பான இடுகைகளை பதிவிடுவோர் எவராயினும் அவர்கள்மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படுவதுடன், அவர்களது வலைதளக் கணக்குகளை முடக்கவும் தக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று காவல்துறை கடுமையாக எச்சரிக்கிறது'' என்று கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications