மழையோடு விடைபெறும் 2022.. அடுத்த 4 நாட்கள் டமால் டுமீல்! சென்னை டூ குமரி வரை காத்திருக்கும் சம்பவம்
சென்னை: வங்கக்கடலில் நிலைகொண்டு இருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடந்து, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும் என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டின் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டு இருக்கும் தகவலில், "தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று (25-12-2022) காலை 08:30 மணி அளவில் நாகப்பட்டினத்திலிருந்து சுமார் 320 கிலோமீட்டர் தென்கிழக்கே நிலை கொண்டுள்ளது.
இது தென்மேற்கு திசையில் நகர்ந்து இன்று மதியம் இலங்கை கடற்கரையை திரிகோணமலைக்கு தெற்கே கடந்து, மேற்கு - தென்மேற்கு திசையில் நகர்ந்து நாளை (26-12-2022) காலையில் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவக் கூடும்.
கன்னியாகுமரியை நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..புயலாக மாறுமா? வானிலை சொல்வதென்ன?
தெற்கில் கனமழை
இதன் காரணமாக, இன்று தமிழக கடலோர மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தூத்துக்குடி, இராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
நாளை மழைக்கு வாய்ப்பு
நாளை தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, தென்காசி, விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
29 ஆம் தேதி வரை
27 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 28 ஆம் தேதி மற்றும் 29 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்." என்று தெரிவிக்கபட்டு உள்ளது.
சென்னையில் வானிலை
"சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.
சென்னையில் மழைக்கு வாய்ப்பு
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28-29 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்." என்றும் தெரிவித்து உள்ளது.
மழை அளவு
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
சென்னை கலெக்டர் அலுவலகம் 5, CD மருத்துவமனை தண்டையார்பேட்டை (சென்னை) 4, சென்னை விமான நிலையம், சென்னை நுங்கம்பாக்கம், கட்டப்பாக்கம் (காஞ்சீபுரம்) தலா 3, அண்ணா பல்கலைக்கழகம் (சென்னை), எம்ஜிஆர் நகர் (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), இந்துஸ்தான் பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), டிஜிபி அலுவலகம் (சென்னை), பூந்தமல்லி (திருவள்ளூர்), பெரம்பூர் (சென்னை), ஆலந்தூர் (சென்னை), தரமணி (சென்னை), அயனாவரம் தாலுகா அலுவலகம் (சென்னை), காரைக்கால், ஏசிஎஸ் மருத்துவக் கல்லூரி (காஞ்சிபுரம்), ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), சத்யபாமா பல்கலைக்கழகம் (செங்கல்பட்டு), வேளாங்கண்ணி (நாகப்பட்டினம்) தலா 2, நாகப்பட்டினம் (நாகப்பட்டினம்), தாம்பரம் (செங்கல்பட்டு), அம்பத்தூர் (திருவள்ளூர்), செம்பரம்பாக்கம் (திருவள்ளூர்), சோழிங்கநல்லூர் (சென்னை), கடலூர், தரங்கம்பாடி (மயிலாடுதுறை), ஆவடி (திருவள்ளூர், ) புழல் (திருவள்ளூர்) 1, கோடியக்கரை (நாகப்பட்டின்), பொன்னேரி (திருவள்ளூர்), தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்), செங்கல்பட்டு, சோழவரம் (திருவள்ளூர்), செய்யாறு (திருவண்ணாமலை), சிதம்பரம் (கடலூர்), தலைஞாயர் (நாகப்பட்டினம்), காஞ்சிபுரம், குன்றத்தூர் தாலுகா அலுவலகம் (காஞ்சிபுரம்) தலா 1.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
"இன்று தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகள், தமிழக கடலோரப்பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
சூறாவளிக் காற்று
நாளை தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள், குமரிக்கடல் பகுதிகள், தெற்கு கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
கடலுக்கு செல்ல வேண்டாம்
27.12.2022: குமரிக்கடல் பகுதிகள், கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். 28.12.2022: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்." என்று எச்சரித்து உள்ளது.