தமிழகம் முழுக்க மழை தொடரும்.. புயல் பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை- அமைச்சர் எச்சரிக்கை
சென்னை: தமிழகத்தில் மழை தொடரும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
நேற்று முதல் இன்று வரை, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்துள்ளது. சேலம் மாவட்டம் மேட்டூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல இடங்களில் பரவலாக மழை பெய்தது
புதுக்கோட்டை, ஆலங்குடி, கீரமங்கலம், திருமயம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது.
புரேவி.. தமிழகம், புதுவையில் இன்று மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் நிலவரம் என்ன?.. வானிலை மையம்
தர்மபுரி
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி, தர்மபுரி பென்னாகரம், பாலக்கோடு, காரிமங்கலம், பாப்பிரெட்டிபட்டி, பொம்மிடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பரவலாக சாரல் மழை பெய்வதும், வெயில் அடிப்பதுமாக உள்ளது.
மதுரை
மதுரை மாவட்டம் மேலூர் மற்றும் கருங்காலக்குடி, தும்பைப்பட்டி, கீழவளவு, கீழையூர், வண்ணாம்பாறை, வெள்ளலூர், மலம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக கனமழை பெய்தது.
சென்னை எப்படி
புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
வதந்தி கூடாது
இந்த நிலையில், புயல் குறித்த வதந்திகள் மக்கள் நம்ப வேண்டாம் என்றும் ஆதாரமற்ற தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்பி உதயகுமார் தெரிவித்துள்ளார். 5 புயல்கள் தமிழகம் நோக்கி வர உள்ளதாக சமூக வலைத்தளங்களில் போலி செய்தி பரவிய நிலையில் அமைச்சர் எச்சரித்துள்ளார்.