பெயரும் போடல..பேசவும் அழைக்கவில்லை! அமைச்சர், தலைமை செயலரை அவமதித்த ஆளுநர் மாளிகை? மீண்டும் சர்ச்சை!
சென்னை : ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பெயரை அழைப்பிதழில் போடாமல் நிகழ்ச்சிக்கு அழைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே ஆளும் திமுக அரசுக்கும் ஆளுநர் ஆர் என் ரவிக்கும் மோதல் போக்கு நீடித்து வருகிறது. அரசு சார்பில் அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டுள்ளதாக திமுக அரசு குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் பல்கலைக் கழக நிகழ்வுகளில் வேந்தர் என்ற முறையில் பங்கேற்கும் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நிகழ்ச்சிகளில் சனாதானம் குறித்து பேசியது தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் திமுக கூட்டணி கட்சிகள் ஆளுநருக்கு எதிராக களமிறங்கியுள்ளன.
தமிழக ஆளுநர் ரவி குறித்து விவாதிக்க வேண்டும்! மக்களவையில் நோட்டீஸ் கொடுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி.!
ஆளுநர் ஆர்.என்.ரவி
மேலும் ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதா குறித்தும் சர்ச்சைகள் வலுத்து வரும் நிலையில், ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற அம்பேத்கர் சிலை திறப்பு விழா நிகழ்ச்சிக்கு தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோர் பெயரை அழைப்பிதழில் போடாமல் நிகழ்ச்சிக்கு அழைத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.அண்ணல் அம்பேத்கரின் பிறந்த நாளை ஒட்டி சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வளாகத்தில் அம்பேத்கர் திருவுருவ சிலை திறப்பு விழா நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கடும் சர்ச்சை
இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தமிழக ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டவர்களும், அரசு உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர். ஆனால், அந்த நிகழ்ச்சிக்காக ராஜ் பவன் சார்பில் அச்சடிக்கப்பட்ட அழைப்பதலில் ஆளுநர் மற்றும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் ஆகியோர் பெயர் மட்டுமே இடம் பெற்றுள்ளது.
அமைச்சர் கயல்விழி
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தலைமை செயலாளர் இறையன்பு ஆகியோரின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை. அழைப்பிதழில் பெயர்களை போடாமல், நிகழ்ச்சியில் மட்டும் வந்து கலந்து கொள்ளுமாறு ராஜ் பவனில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது..
பேச்சிலும் புறக்கணிப்பு
உயரிய பொறுப்புகளில் இருக்கும் தமிழக அமைச்சர் மற்றும் தலைமைச் செயலாளரின் பெயர் அழைப்பிதழில் விடுபட்டது எதைச்சையாக நடந்த செயலா அல்லது வேறு ஏதேனும் காரணத்தினால் விடுபட்டதா என்ற கேள்வி பலரும் எழுப்பி வருகின்றனர். அழைப்பிதழில் பெயர் போடாதது மட்டுமில்லாமல், 2 மணி நேரத்திற்கும் மேல் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர், மத்திய இணை அமைச்சர் உள்ளிட்ட பலரும் மேடையில் பேசினர்.
என்ன நடந்தது?
ஆனால் தமிழக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் மற்றும் தலைமை செயலாளர் ஆகியோர் பேசுவதற்கு கூட அழைக்கப்படவில்லை. இது தொடர்பாக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ்-யிடம் விளக்கம் கேட்டபோது "சென்னையில் இருக்கும் தன்னுடைய அலுவலகத்திற்கு ஆளுநர் மாளிகை அதிகாரிகள் வந்து அழைப்பிதழ் கொடுத்ததாகவும், அந்த நேரத்தில் தான் சொந்த ஊரில் இருந்ததால் அழைப்பிதழை கூட பார்க்கவில்லை. அழைப்பை ஏற்று நிகழ்ச்சிக்கு சென்றேன்."என தெரிவித்துள்ளார்.