ராஜபாளையம் தொகுதியை குறி வைத்த நடிகை கவுதமி.. எதிர்க்கும் ராஜேந்திர பாலாஜி! எடப்பாடி ஆதரவு யாருக்கு?
சென்னை: சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பாக ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட நடிகை கவுதமி விருப்ப மனு கொடுத்துள்ளதாக தெரிய வந்துள்ளது. ஆனால் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நடிகை கவுதமிக்கு பதிலாக தனது ஆதரவாளருக்கு சீட் பெற்று கொடுக்க வேண்டும் என்று காய் நகர்த்தி வருகிறார்.
அதிமுகவில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வரும் சூழலில், நடிகை கவுதம் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட விருப்ப மனு கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது. 2021ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலின் போதே நடிகை கவுதமி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட ஆர்வம் காட்டி இருந்தார்.

அப்போது பாஜகவில் இருந்த கவுதமிக்கு ராஜபாளையம் தொகுதி பொறுப்பு அளிக்கப்பட்டது. விருதுநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் ராஜபாளையம் தொகுதியில் கவுதமி போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதி என்று கூறப்பட்டது. ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு, தொகுதி பங்கீட்டின் போது ராஜபாளையம் தொகுதி அதிமுக வசம் சென்றது.
இதனால் ஏமாற்றம் அடைந்த நடிகை கவுதமி, பின்னர் பாஜகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த நடிகை கவுதமிக்கு கொள்கை பரப்பு இணைச் செயலாளர் பதவி அளிக்கப்பட்டது. இதையடுத்து அதிமுக பொதுக்கூட்டங்களில் பங்கேற்று நடிகை கவுதம் பங்கேற்று பேசி வருகிறார்.
இந்த நிலையில் நடிகை கவுதமி மீண்டும் ராஜபாளையம் தொகுதியை குறி வைத்துள்ளார். அதற்கேற்ப இம்முறை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் தொகுதி மாற முடிவு செய்திருக்கிறார். மீண்டும் சிவகாசி தொகுதியில் போட்டியிடும் முடிவில் உள்ள ராஜேந்திர பாலாஜி, ராஜபாளையம் தொகுதியில் தனது ஆதரவாளரை நிறுத்தவும் திட்டமிட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்கேற்ப விருதுநகரில் நடக்கும் அதிமுக நிகழ்ச்சிகளில் ராஜேந்திர பாலாஜி நடிகை கவுதமியை பங்கேற்க அழைப்பதில்லை. இன்னொரு பக்கம் பாஜக பக்கம் ராஜபாளையம் தொகுதியை தள்ளிவிடும் முடிவிலும் அதிமுக இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி ராஜபாளையம் தொகுதி பாஜகவுக்கு அளிக்கப்பட்டால், முன்னாள் எம்எல்ஏ கோபால்சாமி போட்டியிடலாம் என்று கூறப்படுகிறது.
அதேபோல் பாமக பொருளாளரான திலகபாமாவும் விருதுநகர் மாவட்டத்தின் ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட ஆழம் பார்த்து வருவதாக கூறப்படுகிறது. சமூக ரீதியிலான வாக்குகளை ஒருங்கிணைக்க முடியும் என்று திலகபாமா நம்புவதால், ராஜபாளையம் தொகுதி யாருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications