118 இருக்குனு விஜய் சொல்லியிருந்தால் நான் என்ன தலை கணக்கை எண்ண போறேனா? அர்னாபிடம் அர்லேகர் கேள்வி
சென்னை: விஜய் ஆட்சி அமைக்க நான் தடுக்கவே இல்லை என தமிழக ஆளுநர் (பொறுப்பு) ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தெரிவித்துள்ளார். விஜய் கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் ஆட்சி அமைக்க முன் வரலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ரிபப்ளிக் டிவிக்கு ஆளுநர் அர்லேகர் அளித்த தொலைபேசி பேட்டியில் கூறியிருப்பதாவது: ஆட்சி அமைக்க உரிமை கோரும் கட்சி, நம்மிடம் போதுமான எண்ணிக்கையில் பலம் இருக்கிறது என்பதையும் தங்களால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியும் என்பதையும் எனக்குத் திருப்திப்படுத்தும் வகையில் தெரிவித்தல் வேண்டும்.
இதுதான் எனது நிபந்தனை. எந்த ஒரு கட்சியோ அல்லது கூட்டணியோ ஆட்சி அமைக்க என்னிடம் வரும் போது போதுமான பலம் எங்களிடம் இருக்கும் என்று என்னிடம் சொல்ல வேண்டும். நான் அவர்களின் தலையை எண்ண போவதில்லை, அது சட்டசபையில்தான் நடக்கும் என்றார்.
அது போல் அதிமுக, திமுக மற்றும் பிற கட்சிகள் இணைந்து வந்து 118 என்ற பெரும்பான்மையைக் காட்டினால் நீங்கள் அதை ஏற்பீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ள ஆலுநர் அர்லேகர், "மெஜாரிட்டி எண்ணிக்கையுடன் யார் வந்தாலும் நான் அதை சரிபார்க்க வேண்டும். அதுதான் ஜனநாயகம்.
பெரும்பான்மை இல்லாத கட்சிக்கு எப்படி அனுமதி அளிக்க முடியும். விஜய் முதல்வராக பதவியேற்க நான் தடுக்கவில்லை. விஜய் பதவியேற்க பெரும்பான்மையை மட்டுமே நிரூபிக்க வேண்டும். விஜய் ஆதரவு கடிதங்களை மட்டுமே தரலாம். 118 பேரையும் விஜய் அழைத்து வர வேண்டியது இல்லை என அர்லேகர் தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்று, தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை நெருங்கியுள்ள நிலையில், அக்கட்சி ஆட்சி அமைப்பதற்கான முதற்கட்டப் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் ஆதரவு: தவெக ஆட்சி அமைப்பதற்கு காங்கிரஸ் கட்சி தனது ஆதரவை அதிகாரப்பூர்வமாக வழங்கியுள்ளது. இதன் மூலம் தவெக தலைமையிலான புதிய அரசு அமைவது உறுதியாகியுள்ளது.
ஆளுநருடன் சந்திப்பு: கடந்த புதன்கிழமை அன்று தமிழக ஆளுநரைச் சந்தித்த அக்கட்சியின் தலைவர், முறைப்படி ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
தொடரும் இழுபறி: புதன்கிழமை சந்திப்பின் போது ஆளுநரிடமிருந்து உடனடி அழைப்பு ஏதும் வராத நிலையில், நேற்று (வியாழக்கிழமை) இரண்டாவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க விரைந்து அழைப்பு விடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தாலும், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் தவெக இருப்பதால், ஆளுநரின் அடுத்தகட்ட நடவடிக்கை தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆளுநர் அர்லேகரிடம் விஜய் கொடுத்த கோப்புகளில்தான் தவறு என பலர் சொல்கிறார்கள். காங்கிரஸ் கட்சியின் எண்ணிக்கையை காட்டாமல் 107 (திருச்சி கிழக்கு நீங்கலாக) தவெக எம்எல்ஏக்களின் கடிதத்துடன் விஜய், ஆளுநரை அணுகியிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு 112 இருக்கு, இன்னும் 6 பேரின் ஆதரவை பெற பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என சொல்வதெல்லாம் தவறு.
எங்களுக்கு இத்தனை சீட் இருக்கிறது. எங்களை ஆட்சி அமைக்க அழையுங்கள் என்றுதான் விஜய் அந்த கோப்புகளில் குறிப்பிட்டிருக்க வேண்டும். அதை விட்டுவிட்டு ஆளுநருக்கு எடுத்துக் கொடுப்பது போல் இவராகவே 112 தான் இருக்கு என சொல்வது சரியில்லை. இந்த விஷயத்தில் செங்கோட்டையன் போன்றோர் கூட கவனிக்காமல் விட்டது எப்படி என அரசியல் பார்வையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.












Click it and Unblock the Notifications