இனி எப்பவுமே இல்லை.. கதம் கதம்தான் - அரசியல் வருகை பற்றி அதிரடி முடிவை அறிவித்த ரஜினிகாந்த்
நான் அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்று மனதில் பல கேள்விகள் உள்ளன. நிர்வாகிகளிடம் ஆலோசித்து முடிவு செய்யப்போவதாக கூறிய ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று கூறி ஆட்டையை கலைத்து விட்டார்.
சென்னை: அரசியலுக்கு வரலாமா என்று ரசிகர்களிடம் ஆலோசிக்க உள்ளதாக கூறிய நடிகர் ரஜினிகாந்த், வருங்காலத்தில் அரசியலுக்கு வரவே மாட்டேன் என்று கூறி மக்கள் மன்றத்தையும் கலைத்து விட்டார். இப்ப இல்லைன்னா எப்பவுமே இல்லை என்று கடந்த ஆண்டு சொன்ன ரஜினிகாந்த் இனி எப்பவுமே இல்லை என்று தனது முடிவு உறுதியாக அறிவித்து விட்டார். ரஜினியின் இந்த அறிவிப்பு கொஞ்ச நஞ்ச அரசியல் கனவில் இருந்த அவரது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
Recommended Video
என் மனதில் பல கேள்விகள் உள்ளன. எதிர்காலத்தில் நான் அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் அது தொடர்பான ரசிகர்களிடம் ஆலோசனை நடத்தி முடிவு செய்யப்போவதாக நடிகர் ரஜினிகாந்த் காலையில் போயஸ் கார்டனில் கூறி விட்டு ராகவேந்திர மண்டபத்திற்கு சென்றார்.
தனது நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய கையோடு பரபரப்பான அறிக்கையை வெளியிட்டு அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

ரஜினி சூட்டிங்
நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் கட்சி அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி வெளியிடுவேன் என்று கூறியிருந்தார். அதற்கு முன்பாக அண்ணாத்தே படத்திற்காக ஹைதராபாத் படப்பிடிப்பிற்கு சென்ற இடத்தில் ரஜினிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிசிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினிகாந்த், அறிக்கை ஒன்றை வெளியிட்டார். தனது உடல்நலத்தை கருத்தில் கொண்டு அரசியல் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்டுள்ளதாக கூறினார். இந்த அறிவிப்பு அவரது ரசிகர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

அமெரிக்கா பயணம்
தமிழக சட்டசபைத் தேர்தலில் வாக்களித்த ரஜினிகாந்த் தனது அண்ணாத்தே படத்தின் சில கட்ட படப்பிடிப்புகளை முடித்து கொடுத்து விட்டு உடல் நல பரிசோதனைக்காக கடந்த மாதம் அமெரிக்கா சென்றார். பரிசோதனை முடிந்து சில தினங்களுக்கு சென்னை திரும்பிய ரஜினி இன்று ரசிகர் மன்ற நிர்வாகிகளை ராகவேந்திரா திருமண மண்டபத்தில் சந்தித்து பேசினார்.

ரஜினிகாந்த் பேட்டி
போயஸ்கார்டனில் தனது வீட்டிற்கு முன்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், நான் அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்த பிறகு நான் மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கவில்லை. அதன்பிறகு அண்ணாத்த ஷூட்டிங் இருந்தது.

மக்கள் மன்ற நிர்வாகிகள்
தேர்தல் நடந்து முடிந்துள்ளது. கொரோனா வந்தது. இதனால் நிர்வாகிகளை சந்திக்க முடியவில்லை. அமெரிக்காவில் உடல்பரிசோதனையை முடித்து கொண்டு சென்னை திரும்பியுள்ளேன். மக்கள் மன்ற நிர்வாகிகளின் பணி என்ன? மக்கள் மன்றத்தை தொடரலாமா என்பது குறித்து ஆலோசிக்க உள்ளேன்.

மனதில் கேள்விகள்
எதிர்காலத்தில் அரசியலுக்கு நான் வரப்போகிறேனா? இல்லையா? என்ற கேள்விகளும் மனதில் இருக்கிறது அது குறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளிடம் ஆலோசிக்க உள்ளேன் என்றும் நடிகர் ரஜினிகாந்த் கூறினார். மீண்டும் அரசியலுக்கு வருவேனா? மாட்டேனா என்று ரசிகர்கள் மற்றும் மக்கள் மன்ற நிர்வாகிகள் மத்தியில் எழுந்துள்ளது. இதுகுறித்து மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசிக்கவுள்ளதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்தார்.

ரஜினி அரசியல்
நடிகர் ரஜினிகாந்த் 6 மாதங்களில் கட்சி ஆரம்பிப்பார் என்றும் சட்டசபைத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றி பெறுவார் என்றெல்லாம் சொல்லப்பட்டது. ஆனால் சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாகவே அவர் உடல்நலனை கருதி இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என்று அறிவித்தார். தற்போது மீண்டும் அரசியலுக்கு வருவேனா மாட்டேனா என்று ஆலோசிக்க உள்ளதாக கூறி பரபரப்பை கிளப்பினார்.

எப்போதும் வர மாட்டேன்
எதிர்காலத்தில் தாம் அரசியலுக்கு வரப்போவது இல்லை,அரசியலுக்காக தொடங்கப்பட்ட ரஜினி மக்கள் மன்றம் முழுமையாக கலைக்கப்படுகிறது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். ரசிகர் மன்றங்களாக மட்டுமே செயல்படும் என்றும் கூறியுள்ளார் ரஜினிகாந்த். இதன் மூலம் தான் இப்ப மட்டுமல்ல எப்போதுமே அரசியலுக்கு வரமாட்டேன் என்று உறுதியாக சொல்லி விட்டார் ரஜினிகாந்த். ரசிகர்கள் இனி அவரை அரசியலுக்கு வரச்சொல்லி போஸ்டர் ஒட்ட மாட்டார்கள் என்று நம்பலாம்.












Click it and Unblock the Notifications