'அவர்கள் செய்தது அருவருப்பானது, வருந்தத்தக்கது..' ரஜினி ரசிகர் மன்றம் திடீர் அறிக்கை.. பின்னணி என்ன?
சென்னை: அண்ணாத்த கட்டவுட்டுக்கு ரஜினி ரசிகர்கள் பொது இடத்தில் ஆட்டை பலி கொடுத்த ரத்த அபிஷேகம் செய்த வீடியோ இணையத்தில் பரவி வரும் நிலையில், இது போன்ற சம்பவங்கள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் யாரும் இதுபோன்ற அருவருப்பான செயல்களில் ஈடுபட வேண்டாம் என்றும் ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மெகா பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் அண்ணாத்த. கடந்த ஆண்டே இந்தப் படம் வெளியாகி இருக்க வேண்டும்.
இருப்பினும், கொரோனா பாதிப்பு காரணமாக இது தாமதமானது. இப்போது இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு முற்றிலுமாக முடிந்துள்ள நிலையில், இத்திரைப்படம் தீபாவளி தினத்தன்று வரும் நவம்பர் 4ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உலகில் கொரோனாவால் 22.60 கோடி பேர் பாதிப்பு - அமெரிக்காவில் 92 ஆயிரமான ஒரு நாள் கேஸ்கள்!
ஃபஸ்ட் லுக் போஸ்டர்
சிறுத்தை சிவா கமர்சியல் பார்முலாவில் கைதேர்ந்தவர் என்பதால் இத்திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், ரஜினி அரசியலுக்கு வரப்போவதில்லை என அறிவித்த பிறகு வெளியாகும் முதல் படம் என்பதாலும் எதிர்பார்ப்புகள் எகிறியுள்ளது. இந்தச் சூழலில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை இத்திரைப்படத்தின் பஸ்ட்லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியிடப்பட்டது. அன்று பல திரைப்படங்களின் டிரைலர், ஃபஸ்ட் லுக் வெளியான போதிலும், அண்ணாத்த தான் டிரெண்டிங்கில் இருந்தது.
ரத்த அபிஷேகம்
அதேநேரம் மதுரை, திருச்சி உள்ளிட்ட சில பகுதிகளில் பொது இடங்களில் அண்ணாத்த கட்அவுட் போஸ்டருக்கு ஆட்டை வெட்டி ரத்த அபிஷேகம் செய்தனர். பொதுவெளியில் சிறுவர்கள் முன்னிலையில் ரஜினி ரசிகர்கள் ஆட்டை வெட்டி தலையில்லாத ஆட்டை கொண்டு ரத்த அபிஷேகம் செய்தது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. தமிழ்நாட்டில் வணிக ரீதியாகக் கூட ஆடு, கோழி போன்ற விலங்குகளைப் பொதுவெளியில் வெட்டக் கூடாது. மறைவான இடங்களிலேயே விலங்குகளை வெட்ட வேண்டும் என விதி இருக்கும் நிலையில், ரஜினி ரசிகர்களின் இந்தச் செயல் பெரும் பரபரப்பைக் கிளப்பியது.
போலீசாரிடம் புகார்
இந்நிலையில் ஆட்டை கொடூரமாக வெட்டிக் கொன்று கட்டவுட்டுக்கு ரத்தாபிஷேகம் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சில அமைப்புகள் போலீசில் புகார் அளித்தனர். உயிரற்ற கட்டவுட்களுக்கு உயிருள்ள ஆட்டை பலி கொடுத்து ரத்தாபிஷேகம் செய்கிற கலாச்சாரத்தை ஆரம்பத்திலேயே தடுக்காமல் விட்டு விட்டால் இதை மற்ற முன்னணி நடிகர்களின் ரசிகர்களும் பின்பற்ற ஆரம்பித்து ஆடு, மாடு, கோழிகளைப் பலி கொடுக்க தொடங்கிவிடுவார்கள். இதனால் ஒவ்வொரு திரைப்படம் வெளியாகும் போதும் இதே செயல்கள் தொடரும். இதனால் அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தில் ஆயுத கலாசாரம் வளர்ந்து சட்ட ஒழுங்கு சீர்கெட்டுப் போகும் சூழ்நிலை ஏற்பட்டு விடும் என்று அதில் கூறப்பட்டிருந்தது.
ரஜினி மீது நடவடிக்கை தேவை
சமூக ஆர்வலர் ஒருவரும் இது தொடர்பாகப் புகார் அளித்திருந்தார். அதில், "இந்த செயலை எதிர்த்து ஓர் கண்டனமோ, எதிர்ப்பு அறிக்கையோ நடிகர் ரஜினி தரப்பில் கொடுக்கவில்லை. இச்செயலை ஆதரித்தது போலவே உள்ளார். இது பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் செயல் என்பதால் இதில் ஈடுபட்டவர்கள் மீதும் இதைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் நடிகர் ரஜினிகாந்த் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ரசிகர் மன்றம்
இது தவிர பல்வேறு அமைப்புகளும் இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றம் சார்பில் இந்த சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து ரஜினி ரசிகர் மன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "'அண்ணாத்த' திரைப்பட ஃபர்ஸ்ட் - லுக் போஸ்டர் மீது ஒரு சிலர் ஆடு வெட்டி இரத்த அபிஷேகம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அருவருப்பான செயல்
இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது மட்டுமின்றி மிகவும் வருந்தத்தக்கது. அருவருப்பான இது போன்ற செயல்களில் யாரும் ஈடுபட வேண்டாமென்று அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.