பாஜகவிற்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த் பேட்டி.. மோடியின் 'அந்த பேச்சுக்கு' இதுதான் காரணமா?
Recommended Video
சென்னை: பேட்ட படத்தின் வெற்றி, புகழ் எல்லாமே இயக்குநர் கார்த்திக் சுப்புராஜுக்குத்தான் என நடிகர் ரஜினி தெரிவித்துள்ளார்.
அப்போது நிருபர்கள், "உங்களது ஸ்டைல், மாஸ் விஷயம் அனைத்தும் பழையபடி வந்துள்ளதாக ரசிகர்கள் கூறுகிறார்களே" என்று கேள்வி எழுப்பினர்.
பதிலளித்த ரஜினிகாந்த், "அவர்களுக்கு பிடித்து போய்விட்டது. அவர்களுக்கு பிடித்தால் ரொம்ப சந்தோஷம். அவர்களுக்கு பிடிப்பது தான் முக்கியம். அவர்களை சந்தோஷப்படுத்துவது தான் நமது வேலை. அவர்களுக்கு சந்தோஷம் என்றால் நமக்கும் சந்தோஷம்" என்றார்.
பேட்டி
பழைய ரஜினியை காளியாக திரும்ப பார்த்ததாக சொல்கிறார்களே என்று நிருபர்கள் கேட்டதற்கு "அந்த பெருமை எல்லாம் கார்த்திக் சுப்பராஜைதான் சேரும். அவர் முதலில் இருந்து முழுமையாக ஒவ்வொரு பிரேமும், ஒவ்வொரு சீனும், உசுப்பேத்தி உசுப்பேத்தியே செய்ய வைத்து விட்டார். ரொம்ப சந்தோசம்." இவ்வாறு ரஜினிகாந்த் தெரிவித்தார்.
அரசியல் கேள்வி
அப்போதுதான் நிருபர் ஒருவர் அரசியல் கேள்வியை முன்வைத்தார். "உங்களை காலா, கபாலி, பேட்ட என படங்களில் பார்க்க முடிகிறது. தொடர்ந்து ரஜினிகாந்த் நடிகராக உள்ளார். எப்போது தலைவராக வருவார்" என்று கேள்வி எழுப்பினார். உடனே முகம் மாறியது ரஜினிகாந்த்துக்கு. அதுவரை ஜாலியாக சிரித்து பேசிய ரஜினிகாந்த் இந்த கேள்வியால் அதிருப்தியடைந்தார். அதை அவரது முகமே பிரதிபலித்தது.
ஆள விடுங்கப்பா
"அத பத்தி பேச வேண்டாம்" என்று கூறிவிட்டு, தனது வழக்கமான பாணியில், கையெடுத்துக் கும்பிட்டு விட்டு அங்கிருந்து வீட்டை நோக்கி வேகமாக கிளம்பிவிட்டார் ரஜினிகாந்த். கட்சி எப்போது ஆரம்பிக்கப்படும்.. ஓராண்டு ஆகிவிட்டதே.. என்று நிருபர்கள் கூச்சல்போட்டு கேட்டனர். ஆனால் எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் அவர் வீட்டுக்குள் நடந்து சென்று விட்டார்.
கட்சி அறிவிப்பு
அரசியலுக்கு வரப் போவதாகவும், தனிக் கட்சி தொடங்கப்போவதாகவும் 2017 டிசம்பர் இறுதியில் அறிவித்தார் ரஜினிகாந்த். அவர் அறிவிப்பு வெளியிட்டு ஓராண்டை கடந்து விட்ட நிலையிலும் கூட, இன்னமும் கட்சி தொடர்பான அறிவிப்பு வெளியாகவில்லை. இதோ வருகிறது.. அதோ வருகிறது என்று பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறாரே தவிர, முறையான ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை.
பாஜக அதிருப்தி
லோக்சபா தேர்தலுக்கு இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களே உள்ள நிலையில், ரஜினிகாந்தை மலை போல நம்பி கொண்டு இருந்தது பாஜக. தமிழகத்தில் வெற்றிடம் உருவாகியுள்ளதால் ரஜினிகாந்த் என்ற புது சக்தி வருவதன் மூலம், அதன் துணையுடன் தமிழகத்தில் ஓரளவுக்கு வெற்றியை அறுவடை செய்யலாம் என்று கணக்கு போட்டு இருந்தது அந்த கட்சி. ஆனால் ரஜினிகாந்த் ஜகா வாங்கும் இந்த நிலைமையில்தான், பிரதமர் மோடி, கூட்டணிக்கு அடிபோட ஆரம்பித்துள்ளார்.
கூட்டணி
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் நேற்று வீடியோவில் பிரதமர் மோடி பேசியதில் கூறிய கூட்டணி குறித்த விஷயம், முக்கியத்துவம் பெறுகிறது. வாஜ்பாய் 20 வருடங்கள் முன்பாகவே கூட்டணி அரசை வெற்றிகரமாக நடத்திக் காட்டியவர். பழைய நண்பர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்ள பாஜக தயாராக இருக்கிறது, என்று தெரிவித்துள்ளார். இதுவரை கூட்டணி குறித்து பேசாத பிரதமர் மோடி, தமிழகத்தில் பழைய நண்பர்களுடன் கூட்டணி வைத்துக் கொள்வோம் என்று தெரிவிக்கிறார்.
பாஜகவிற்கு பெரிய அதிர்ச்சி
கடந்த தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து வெற்றிபெற்ற போதிலும், பாமகவின் அன்புமணி ராமதாசுக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படவில்லை. கூட்டணி கட்சிகளை வாஜ்பாய் அரசுபோல மோடி அரசு நடத்தவில்லை என்பதற்கு இது ஒரு உதாரணம்தான். இந்த நிலையில்தான் மீண்டும் பழைய நண்பர்கள் என்று கூறி, பழைய பல்லவியை பாடுகிறார் மோடி. இதற்கு காரணம் ரஜினிகாந்த் கட்சி துவங்காததுதான் என்று கூறப்படுகிறது. ரஜினிகாந்த் கட்சி துவங்காமல் இழுத்தடிப்பது, ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறதோ இல்லையோ, பாஜகவுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது என்பது தான் பிரதமர் மோடியின் கூட்டணி குறித்து பேச்சிலிருந்து அனைவராலும் புரிந்து கொள்ளப்படுகிறது.