திமுக, அதிமுகவுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்கமாட்டார்- 'சூப்பர்வைசர்' தமிழருவி மணியன் திட்டவட்டம்
சென்னை: திமுக, அதிமுகவுடன் ஒருபோதும் நடிகர் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்க மாட்டார் என்று அவர் தொடங்க இருக்கும் கட்சியின் மேற்பார்வையாளரான தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
2107-ம் ஆண்டு இறுதியில் தாம் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக அறிவித்தார் நடிகர் ரஜினிகாந்த். ஆனால் இது தொடர்பான எந்த முயற்சியும் ரஜினி தரப்பில் மேற்கொள்ளப்படாமல் இருந்தது கடும் விமர்சனத்தை உருவாக்கியது.
மேற்பார்வையாளர் தமிழருவி மணியன்
இந்த நிலையில் அடுத்த மாதம் புதிய கட்சி தொடங்க உள்ளதாக ரஜினிகாந்த் அறிவித்துள்ளார். மேலும் தாம் தொடங்க இருக்கும் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக அர்ஜுன மூர்த்தியும் மேற்பார்வையாளராக - சூப்பர்வைசராக தமிழருவி மணியனும் இருப்பார்கள் என்றும் ரஜினிகாந்த் அறிவித்தார்.
அதிமுகவுடன் கூட்டணியா?
இதையடுத்து புதிய கட்சிக்கான நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதனிடையே ரஜினிகாந்த், அதிமுகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதிமுக மூத்த தலைவர்களும் இதே கருத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
திராவிட கட்சிகளும் கூட்டணியும்
ஆனால் இன்று நாளிதழ் ஒன்றில் கட்டுரை எழுதியுள்ள தமிழருவி மணியன், அதிமுக- திமுக ஆகிய 2 கட்சிகளுடன் ரஜினிகாந்த் கூட்டணி அமைக்க மாட்டார் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும் தாம் ரஜினிகாந்திடம் இரு திராவிட கட்சிகளுடனும் உடன்பாடு எதுவும் வைத்து கொள்ள கூடாது என விருப்பத்தை தெரிவித்தேன்.
ரஜினிகாந்த் திட்டவட்டம்
இதற்கு பதிலளித்த ரஜினிகாந்த், இரு திராவிட கட்சிகளுடன் கூட்டணி என்கிற தவறை ஒருபோதும் செய்ய மாட்டேன். நீங்கள் என்னை நம்பலாம். என்னைப் பொறுத்தவரையில் எவ்வளவு கடுமையாக விமர்சித்தாலும் எதிர்வினையாற்றபோவது இல்லை என ரஜினிகாந்த் கூறியதாக பதிவு செய்துள்ளார் தமிழருவி மணியன்.
ரஜினிதான் கடைசி நம்பிக்கை
மேலும், ரஜினிகாந்த் அன்பும் அடக்கமும் தன் உயர் பண்புகளாக கொண்டவர். அவரால் தமிழகத்தில் நல்ல அரசியல் மாற்றம் நடந்தேறும் என்று நான் நம்புகிறேன். அவர்தான் எனது அரசியல் வாழ்வின் கடைசி நம்பிக்கை என்றும் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.