டாப் கியருக்கு மாறிய ரஜினிகாந்த்.. நாளை மறுநாள் மக்கள் மன்ற செயலாளர்களுடன் சந்திப்பு.. அடுத்த அதிரடி
சென்னை: டாப் கியரை மாற்றியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். நாளை மறுநாள், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர்களை சென்னையில் சந்திக்க அவர் அதிரடியாக அழைப்பு விடுத்துள்ளார்.
சென்னை கோடம்பாக்கம் ராகவேந்திரா மண்டபத்தில், மாவட்ட செயலாளர்களை நாளை மறுநாள் காலை 10 மணிக்கு, சந்திக்க ரஜினிகாந்த் அழைத்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், ரஜினிகாந்த், நடத்த உள்ள இந்த ஆலோசனைக் கூட்டம், பல வகைகளிலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

மக்கள் மன்றம்
அரசியல் கட்சி தொடங்க போவதாக அறிவித்த நடிகர் ரஜினிகாந்த், அதற்கான அடித்தளத்தை அமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார். முதல்கட்டமாக தமிழகத்தில் உள்ள தனது 50 ஆயிரம் ரசிகர் மன்றங்களை ரஜினி மக்கள் மன்றம் என்று மாற்றி உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்தினார். அதன்படி உறுப்பினர்கள் சேர்க்கை முடித்து அடையாள அட்டையை வழங்கப்பட்டது. இதற்கு, அடுத்தக்கட்டமாக மாவட்ட நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டனர்.

முதல் கூட்டம்
2018, மே மாதம், சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் 32 மாவட்ட செயலாளர்களுடன் செயலாளர் ராஜூ மகாலிங்கம், நிர்வாகி சுதாகர் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனைக்குப் பின் போயஸ் இல்லத்தில் மாவட்ட செயலாளர்கள், ரஜினியை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அப்போது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்துவது குறித்து நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கினாராம் ரஜினிகாந்த்.

கடந்த வருடம்
அதையடுத்து 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ஆம் தேதி ஒரு முறை மக்கள் மன்ற செயலாளர்களை சந்தித்தார். இதில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து அவருடைய நிலைபாட்டை மாவட்ட செயலாளருக்கு தெரியப்படுத்தினார் என்று கூறப்படுகிறது. அதன் பிறகு இதுவரை, ரஜினி மக்கள் மன்றத்தின், மாவட்ட செயலாளர்களை ரஜினிகாந்த் சந்திக்கவில்லை. இந்த நிலையில்தான் ரஜினிகாந்த், நாளை மறுநாள் ரசிகர் மன்ற மாவட்ட செயலாளர்களை சந்திக்க உள்ளார்.

ரஜினி ஆலோசனை
தமிழக சட்டபைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடுவோம் என நடிகர் ரஜினிகாந்த் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், இந்த ஆலோசனைக் கூட்டத்தின்போது, கட்சி செயல்பாடு, மாநாடு, கூட்டணியா, தனித்துப் போட்டியா என்பது உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து, ஆலோசிக்க வாய்ப்புள்ளது. கட்சி பெயரையும் இறுதி செய்ய வாய்ப்பு இருக்கிறது.

அதிரடி
சமீபத்தில், குடியுரிமை சட்டத் திருத்தம் தொடர்பாக, ரஜினிகாந்த்தை, இஸ்லாமிய பிரதிநிதிகள் சந்தித்து ஆலோசனை நடத்தினர். டெல்லி கலவரத்திற்கு உளவுத்துறை தோல்வியே காரணம் என்று முன்னதாக ரஜினிகாந்த் காட்டமாக தெரிவித்திருந்த நிலையில் இந்த சந்திப்பு நடந்தது. அமைதியை நிலைநாட்ட எந்த உதவியும் செய்ய தயார் என ரஜினிகாந்த் கூறியிருந்தார். இப்படி சமூக அரசியலில் பல அதிரடிகளை முன்னெடுத்து வரும் ரஜினிகாந்த், அடுத்து தேர்தல் அரசியலில் கால் வைக்க கியரை மாற்றிவிட்டார் என்கிறார்கள் விவரம் அறிந்தோர்.












Click it and Unblock the Notifications