சார் தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு.. அரசியல் கேள்வி கேட்காதீங்க.. ஏர்போர்ட்டில் கோபமான ரஜினிகாந்த்
சென்னை: சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் கூலி படத்தின் பணிகள் 70 சதவீதம் முடிவடைந்துள்ளது என கூறினார். அப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்வியால் சற்றே கோபமான அவர் அரசியல் கேள்விகள் கேட்க வேண்டாமென நான் ஏற்கனவே சொல்லியிருக்கேன் என கூறிவிட்டு சென்றார்.
வேட்டையன் படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தனது 171-வது திரைப்படமான கூலி படத்தில் இணைந்திருக்கிறார். விக்ரம் படத்தின் பெரு வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்படுத்தியதை அடுத்து ரஜினிகாந்த் அவருடன் கைகோர்த்தார்.

இந்த நிலையில் கூலி திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில், ஷாபின், சத்யராஜ், உபேந்திரா, சுருதிஹாசன் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளம் இணைந்து இருக்கிறது.
இந்த படம் இந்த ஆண்டு மே மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் தாய்லாந்து, பெங்களூரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் படத் தயாரிப்பு பணி நடந்து வருகிறது. இந்த நிலையில், தாய்லாந்தில் நடைபெறும் கூலி படத்தின் படப் பிடிப்பில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்துக்கு தாய்லாந்து செல்வதற்காக வந்தார்.
அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்,” கூலி திரைப்படத்தின் பணிகள் 70% நிறைவடைந்து இருக்கிறது, இன்னும் சில நாட்கள் ஷூட்டிங் நடைபெற உள்ளது” என்றார்.
அப்போது தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பற்ற நிலை இருப்பதாக கூறுகிறார்களே என செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்ப திடீரென கோபமடைந்த ரஜினிகாந்த்,” அரசியல் கேள்விகளை கேட்க வேண்டாம் என நான் ஏற்கனவே சொல்லிவிட்டேன் தேங்க்யூ” என கூறிவிட்டு புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில் ரஜினி விமான நிலையம் வந்திருந்த தகவலை கேட்டு அங்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்தனர். ரஜினியை பார்த்த உற்சாகத்தில் தலைவா தலைவா என அவர்கள் கத்திக் கூச்சலிட்ட நிலையில் அவ்வாறு சத்தம் போடக்கூடாது என ரசிகர்களுக்கு அன்பு கட்டளையிட்ட ரஜினிகாந்த் அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.












Click it and Unblock the Notifications