"ஸ்டாலின் இங்க பாருங்க" ராஜ்நாத் சிங் சொன்ன வார்த்தை! உடனே வெடித்து சிரித்த முதல்வர்! மேடையில் கலகல
சென்னை: கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமர்ந்து கொண்டு இருந்த முதல்வர் ஸ்டாலின்- அமைச்சர் ராஜ்நாத் சிங் சிரித்துப் பேசிக் கொண்டு இருந்தனர். இது குறித்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
சென்னை கலைவாணர் அரங்கில் இன்று கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவில் நூறு ரூபாய் நினைவு நாணயத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட முதல்வர் ஸ்டாலின் அதைப் பெற்றுக் கொண்டார்.

முதல்வர் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மத்திய இணையமைச்சர் எல் முருகன், தமிழ்நாடு அமைச்சர்கள், திமுக எம்பிக்கள், கூட்டணிக் கட்சிகள், எதிர்க்கட்சி தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
அமைச்சர் ராஜ்நாத் சிங்: இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட ராஜ்நாத் சிங்கிற்கு தமிழக நீர்வளத்துறை அமைச்சரும் மூத்த திமுக தலைவருமான துரைமுருகன் பொன்னாடை போர்த்தினார்.
வெடித்துச் சிரித்த முதல்வர் ஸ்டாலின்: தொடர்ந்து நிகழ்ச்சி நடந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினும், அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் அருகருகே அமர்ந்து இருந்தார். அப்போது திடீரென முதல்வர் ஸ்டாலினை அழைத்த ராஜ்நாத் சிங், தனக்குப் போர்த்தப்பட்ட பொன்னாடை குறித்து ஏதோ கூறுகிறார். இதைக் கேட்டதும் முதல்வர் ஸ்டாலினும், ராஜ்நாத் சிங்கும் வெடித்துச் சிரித்தனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.
முதல்வர் பேச்சு: தொடர்ந்து இந்த நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் ஸ்டாலின், "நா + நயம் மிக்க தலைவருக்கு நாணயம் வெளியிடுவது ரொம்பவே பொருத்தமானது. நூற்றாண்டு விழா நாயகருக்கு 100 ரூபாய் நாணயம் வெளியிடப்படுகிறது. இதுவரை தலைவரை நாம் கொண்டாடி வந்தோம். இன்று இந்தியாவே கொண்டாடுகிறது என்பது தான் இந்த விழா. மாநில உரிமைக்காகக் குரல் கொடுத்த கருணாநிதி.
நாணயம் என்பதற்கு இன்னொரு பொருளும் உள்ளது. அதாவது கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவது. சொன்னதைச் செய்வோம், செய்வதைத் தான் சொல்வோம் எனச் சொல்லிச் சொன்னதையெல்லாம் செய்த காட்டியது தான் கருணாநிதி. அதுவே நாணயத்துக்கு அடையாளம். இப்போது அவரது வழியில் திராவிட மாடல் அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது" என்றார்.
ராஜ்நாத் சிங் பேச்சு: தொடர்ந்து பேசிய ராஜ்நாத் சிங் முதலில் தலைசிறந்த தலைவருக்கு அனைவரும் எழுந்து நின்று கைதட்டி மரியாதை கொடுக்க வேண்டும் என குறிப்பிட்டார். அனைவரும் எழுந்து நின்று சில நொடிகள் கைதட்டிய பிறகே அவர் தனது பேச்சைத் தொடர்ந்தார். அங்கே பேசிய அவர், "கருணாநிதி மிகச் சிறந்த ஒரு நிர்வாகி.. மத்தியில் வெற்றிகரமான கூட்டணி ஆட்சிக்கு வித்திட்டவர் கருணாநிதி. எத்தனையோ மாநிலக் கட்சிகள் மறைந்து போனாலும் திமுக வலுவாக இருக்கக் கருணாநிதி போட்ட அடித்தளமே காரணம்.
கருணாநிதி ஒரு மாநிலத்தின் அரசியல்வாதி இல்லை. தேசத்தின் தலைவராகப் பார்க்கப்பட்டார். பல்வேறு தேசிய கட்சிகளுடன் நல்லுறவைப் பேணி வந்தவர் கருணாநிதி.. மேலும், சுதந்திர தினத்தன்று மாநில முதல்வர்கள் தேசியக் கொடியை ஏற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவரும் கருணாநிதி" என்று அவர் பேசினார்.












Click it and Unblock the Notifications