பாட்ஷா காலம் முதல்.. 25 வருடங்கள்.. திரைப்படம் ஓடுவதற்காக அரசியல் பேசி ரசிகர்களை ஏமாற்றினாரா ரஜினி?
சென்னை: கடந்த 25 வருடங்களாக கட்சி மற்றும் அரசியல் பற்றி பேசி, பேசி, ரசிகர்களை உசுப்பேற்றி வந்த ரஜினிகாந்த் இப்போது அரசியல் கட்சி துவங்க மாட்டேன் என்று திடீரென பல்டி அடித்துள்ளார்.
தனது திரைப்படங்களை ஓட வைப்பதற்காக அரசியலை அவர் ஒரு யுக்தியாக பயன்படுத்தினாரா என்ற கேள்விகளை கடந்த கால சம்பவங்கள் அனைவர் மத்தியிலும் எழுப்புகிறது.
ரஜினிகாந்தின் முதல் அரசியல் பேச்சு என்றால் 1995ஆம் ஆண்டில் பாட்ஷா திரைப்பட விழாவை கூறுவார்கள்.
கட்சி தொடங்க மாட்டேன்.. மக்களிடம் மன்னிப்பு கேட்டு ரஜினிகாந்த் அறிக்கை!
முதல் அரசியல் பேச்சு
ஏனெனில் அப்போது முதல்வராக இருந்தவர் ஜெயலலிதா. ஆனால் அவர் முன்னிலையிலேயே, தமிழ்நாட்டில் வெடிகுண்டு கலாச்சாரம் பெருகி விட்டது என்று பேசியவர் ரஜினிகாந்த். இதற்கு பதிலடியாக ரஜினி ரசிகர் மன்றங்கள் மீது பெரிய தாக்குதல்கள் நடைபெற்றன. ரஜினியின் கார் கூட தாக்குதலுக்கு உள்ளானது. ரஜினியின் முதல் அரசியல் பேச்சு நிகழ்ந்து சரியாக 25 ஆண்டுகள் ஆன பிறகு இன்று.. தான் அரசியலுக்கு வரப் போவது கிடையாது என்று திட்டவட்டமாக அறிவித்துவிட்டார். டுவிட்டர் வாயிலாக இதுபற்றி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் ரஜினிகாந்த்.
ஜெயலலிதாவுக்கு எதிரான பேச்சு
ரஜினிகாந்தின் அதி பிரபலமான அரசியல் பேச்சு 1996ஆம் ஆண்டு வெளியானது. ஜெயலலிதா மறுபடி ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது என்று ரஜினிகாந்த் கூறினார். அந்த தேர்தலில் திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. இன்று வரை ரஜினி ரசிகர்கள் இதை பெருமையாக பேசி வருகிறார்கள்.
பாமகவிடம் பலிக்கவில்லை
அதேநேரம் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற லோக்சபா தேர்தலில் திமுக கூட்டணியில் பாமக 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதிகளில் பாமக வேட்பாளர்களை தோற்கடிக்கப்பட வேண்டும் என்று, ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு போட்டார். இதனால் ஆங்காங்கு பாமக மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே மோதல் நடைபெற்றது. இருப்பினும் பாமக போட்டியிட்ட 6 தொகுதிகள் உட்பட 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. பாபா திரைப்படம் வெளியான போது ரஜினி சிகரெட் பிடிப்பது போன்ற புகைப்படங்களை போஸ்டர்களில் வெளியிட்டதை பாமக தலைமை எதிர்த்ததால் ஏற்பட்ட மோதலை மனதில் வைத்து ரஜினி இவ்வாறு கூறியிருந்தார். ஆனால் ரஜினி வாய்ஸ் எடுபடவில்லை. அப்போது முதல் அவர் செல்வாக்கு சரிந்ததாக கூறுவார்கள்.
சமூக செயல்பாடுகள்
இதேபோல் காவிரி பிரச்சனையில் ரஜினிகாந்த் தமிழகத்துக்கு ஆதரவாக தனியாக உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தினார். பல்வேறு இயக்கம் மற்றும் தொழில் அதிபர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். நேரடி அரசியலில் ரஜினிகாந்த் குதிப்பதற்கு சரியான நேரம் இதுதான் என்று அப்போது பேசப்பட்டது. சமூகத்தில் மட்டுமின்றி திரைப்படங்களில் தொடர்ந்து அரசியல் தொடர்பாக பஞ்ச் வைத்து பேசி வந்தவர் ரஜினி.
மன்னன் திரைப்படம்
1992ஆம் ஆண்டில் வெளியான மன்னன் திரைப்படம்தான் அவர் அரசியல் பேசிய முதல் படம் என்று சொல்ல முடியும். தொழிற் சங்க தேர்தலில் ரஜினிகாந்த் நின்று வெற்றி பெறுவது போல காட்சி இருக்கும். தனக்கு தலைவர் பட்டம் என்றால் பயம் என்றும், மற்றவர்கள் விரும்பியதால் தேர்தலில் நிற்கிறேன் என்றும் ரஜினி பேசும் டயலாக் அதில் வரும்.
முத்து படத்தில் கொத்து கொத்தாக டயலாக்
முத்து திரைப்படத்தில், நான் எப்போ வருவேன் எப்படி வருவேன் என்று யாருக்கும் தெரியாது, ஆனால் வர வேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன் என்ற டயலாக் இடம்பெற்றிருந்தது. இது 1996ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக 1995ஆம் ஆண்டில் வெளியான திரைப்படமாகும் முத்து. அப்போது ஜெயலலிதா மற்றும் ரஜினிகாந்த் இடையே மோதல் முற்றி இருந்த நிலையில் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவார் என்று ரசிகர்களை தூண்டுவது போல காட்சி இருந்தது. முத்து திரைப்படத்தில் திரையை பார்த்துக் கொண்டு அரசியல் டயலாக் சிலவற்றை ரஜினி பேசுவது போல பஞ்ச் வசனங்கள் இருந்தன, கட்சியெல்லாம் நமக்கெதுக்கு, காலத்தின் கையில் அது இருக்கு என்று ஒரு பாடல் வரி கூட வரும். ஆனால் மீனா கதாப்பாத்திரம், என்னவோ திட்டம் இருக்கு.. என்று பதிலுக்கு பாடி அந்த பாட்டை முடித்து வைத்து ரசிகர்களை உசுப்பேற்றும்.
அருணாச்சலம் படத்தில் பஞ்ச்
அருணாச்சலம் படத்தில், தான் சுட்டிக்காட்டும் ஒரு வேட்பாளரை தேர்தலில் வெற்றி பெற வைக்கும் காட்சிகளை வைத்திருப்பார்கள்.
அருணாச்சலம் திரைப்படத்தில், சிங்கம் ஒன்று புறப்பட்டதே, அதுக்கு நல்ல காலம் பொறந்திருக்கு, நல்ல நேரம் பிறந்திருக்கும்.. ரெண்டில் ஒன்று பார்க்கும் வரைக்கும், அட ரெண்டு கண்ணில் இல்லை உறக்கம் என்ற பாடல் இடம்பெற்றது. அரசியல் கட்சி ஆரம்பிக்க, சந்தர்ப்பம் மற்றும் சூழ்நிலைதான் காரணமாக அமைந்துவிட்டது என்று ரஜினி பேசுவது போல காட்சி இருக்கும்.
படையப்பா அரசியல்
இதேபோல, பெரிய வெற்றிபெற்ற படையப்பா திரைப்படத்திலும், ராஜ்பகதூர், ரவி ராகவேந்திரா, ஆகியோர் ரஜினிகாந்துடன் அரசியல் பற்றிப் பேசக்கூடிய காட்சி இருந்தது. ரஜினிகாந்த் கதாபாத்திரத்தை பார்த்து இவர் அரசியலுக்கு வந்தால் அவர் மாறமாட்டார். எங்களை எல்லாம் மாற்றி விடுவார் என்று ராஜ்பகதூர் கதாபாத்திரம் பேசுவது போல காட்சி இருந்தது. "நம்ம கையில் என்ன இருக்கிறது எல்லாம் ஆண்டவன் கையில்" என்பது போல வானத்தை நோக்கி விரலை உயர்த்தி காண்பிப்பார் ரஜினிகாந்த்.
பாபா படத்திலும் உசுப்பேற்றிய ரஜினி
அதேபோல 2002ஆம் ஆண்டு வெளியான பாபா திரைப்படத்தில், "கட்சிகளை, பதவிகளை நான் விரும்ப மாட்டேன், காலத்தின் கட்டளையை நான் மறுக்க மாட்டேன்," என்ற பாடல்வரி இடம்பெற்றிருந்தது. பாபா திரைப்படத்திலும், அடாவடி அரசியல்வாதிக்கு எதிராக செயல்படும் நபராகத்தான் ரஜினிகாந்த் நடித்து இருப்பார். ஆனால் இதன் பிறகு ஜெயலலிதா, கருணாநிதி ஆகிய இரு தலைவர்களிடமும் ரஜினிகாந்த் நெருக்கம் காட்டி நட்பு பாராட்டினார். எனவே படங்களில் அரசியல் பேச்சு குறைந்தது.
25 வருட ஏமாற்றம்
அதேநேரம், பேட்ட, தர்பார் போன்ற சமீபத்திய படங்கள் ஓட வசதியாக, வெளிப்படையாக அரசியல் பேசி வந்தார். நீண்ட காலமாக சினிமாவிலும், சமூக செயல்பாடுகள் மூலமாகவும் தொடர்ந்து ரசிகர்களிடம் அரசியல் பற்றிய உணர்ச்சியை ஊட்டி கொண்டே வந்திருக்கிறார் ரஜினி. இதன் மூலம் தங்கள் தலைவர் அரசியலுக்கு வருவார் என்று நம்பிக்கொண்டு 25 வருடங்களாக காத்திருந்தனர் ரசிகர்கள். மாவட்ட செயலாளர், அமைச்சர், எம்எல்ஏ என பல கனவுகளில் திளைத்தவர்கள் பலர். ஆனால், திரைப்படங்களின் வெற்றிக்கும், பரபரப்புக்கும் அது காரணமாக அமைந்ததே தவிர, ரசிகர்களின் கோரிக்கை நிறைவேறவில்லை. அவர்களை ஏமாந்தது மட்டுமே மிச்சம்.