தமிழக மாஜி தலைமைச் செயலாளர்.. இனி ஆந்திர அரசியல்வாதி.. பவன் கல்யாண் கட்சியில் இணைந்தார்
நடிகர் பவன் கல்யாண் கட்சியில் சேர்ந்தார் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகன ராவ்
சென்னை: தமிழக அரசின் முன்னாள் தலைமை செயலாளர் ராம மோகனராவ் ஆந்திர அரசியலில் கலந்து கொண்டு விட்டார். ஆந்திர நடிகர் பவன் கல்யாண் கட்சியில் இணைந்துள்ளார்.
ராம மோகனராவ் பெயரை தமிழக மக்கள் எளிதில் மறக்க முடியாது. தமிழக அரசின் தலைமை செயலாளர்களிலேயே மிகப் பெரிய சர்ச்சைகள், பிரச்சினைகளில் சிக்கியவர்.
வரலாறு காணாத வகையில் தலைமைச் செயலகத்தில் உள்ள இவரது அலுவலகத்தில் சிபிஐ ரெய்டு நடத்தி தமிழகத்தின் மானம் கப்பலேறியது. இதில் முக்கியமானது சட்ட விரோத பணபரிமாற்றம் தொடர்பான விவகாரம்தான்.
சேகர் ரெட்டி
இவரது வீடு மற்றும் தலைமை செயலகத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், சட்ட விரோத பணப் பரிமாற்றத்தில் இவருக்கும், பிரபல தொழிலதிபர் சேகர் ரெட்டிக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியானது.
மீண்டும் பொறுப்பு
இதனை தொடர்ந்து, பதவி பறிக்கப்பட்டாலும் மீண்டும் பதவி தொழில் முனைவோர் மேம்பாட்டுக் கழக இயக்குனராக பதவி வழங்கப்பட்டது. பின்னர், ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரித்துவரும் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில், தொடர்ந்து ஆஜராகி பல்வேறு பகீர் விளக்கங்களை தந்து அதிமுக தரப்பை திக்குமுக்காட வைத்துவிட்டார்.
அரசியல் அவதாரம்
பிறகு ஒரு கட்டத்தில், ராம மோகன்ராவ் எங்கிருந்தார், என்ன செய்து கொண்டிருந்தார் என்ற தகவல்கள் வெளிவராமலேயே இருந்தது. அப்படியே பதவியிலிருந்தும் ஓய்வு பெற்றார். இந்நிலையில், ராம மோகனராவ் திடீரென அரசியல் அவதாரம் பூண்டுள்ளார்.
நடிகர் பவன் கல்யாண்
தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும், நடிகருமான பவன் கல்யாணின் ஜன சேனா கட்சியில் சேர்ந்துள்ளார். அக்கட்சியின் அரசியல் ஆலோசகராகவும் ராம மோகன ராவ் நியமிக்கப்பட்டுள்ளார். நடிகர் பவன் கல்யாணை பூங்கொத்துடன் ராமமோகன் ராவ் நேரில் சந்தித்த புகைப்படங்கள் மீடியாக்களில் வெளியாகி வருகின்றன.
தமிழகத்தில் அதிகாரியாக வலம் ராவ் இனி ஆந்திராவில் அரசியல்வாதியாக வலம் வரப் போகிறார்.