Ramadoss second wife:1000 கோடி சொத்து..மாதம் 25 லட்சம்! ராமதாஸின் 2வது மனைவி சுசீலாவின் டிமாண்ட்? கொதிக்குது தைலாபுரம்
சென்னை: பாட்டாளி மக்கள் கட்சியில் ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையேயான மோதல் ஒருபுறம் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் ராமதாஸின் இரண்டாவது மனைவி என சொல்லப்படும் சுசீலா குறித்த விவகாரங்கள் மேலும் பரபரப்பை அதிகப்படுத்தி இருக்கின்றன. இந்த நிலையில் சொத்து விவகாரம் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம் என்கின்றனர் தைலாபுரம் வட்டாரத்தினர்.
கடந்த சில மாதங்களாகவே உட்கட்சி மோதலில் சிக்கித் தவிக்கிறது பாட்டாளி மக்கள் கட்சி. கட்சியின் நிறுவனரான ராமதாஸ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை அதாவது 2023க்கு முன்பு வரை கட்சியில் குடும்பத்தினர் அல்லாதவர்களுக்கு தான் பாமக தலைவர் பதவியை கொடுத்து வந்தார்.
அந்த வகையில் ஜிகே மணி தலைவராக இருந்த நிலையில் கட்சியின் எதிர்கால நலனைக் கருத்தில் கொண்டு இளைஞர் அணி தலைவராக இருந்த தனது மகன் அன்புமணி ராமதாஸைத் தலைவர் ஆக்கினார். தொடர்ந்து ராமதாஸ் அன்புமணி ராமதாஸ் இடையே உறவு சுமூகமாகச் சென்று கொண்டிருந்த நிலையில் மக்களவைத் தேர்தலின் போது பிரச்சனை வெடித்தது.

பாமக
சௌமியா அன்புமணியைத் தருமபுரியில் போட்டியிடக் கூடாது என ராமதாஸ் வலியுறுத்தியும் அவர் போட்டியிட்டதாகச் சொல்லப்படுகிறது. மிகக் குறைந்த அளவிலான வாக்கு வித்தியாசத்தில் தான் சௌமியா அன்புமணி தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அடுத்தடுத்து வன்னியர் சங்கம், பாமக நிகழ்வுகள் நடைபெற்ற நிலையில் ராமதாஸ் - அன்புமணி இடையேயான மோதல் வெளிச்சத்திற்கு வர ஆரம்பித்தது. உச்சபட்சமாக வன்னியர் சங்க மாநாட்டுக்கு முன்னதாக அன்புமணியைத் தலைவர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்ததோடு அவரைச் செயல் தலைவராகவும் ஆக்கினார் ராமதாஸ்.
ராமதாஸ்
தொடர்ந்து அன்புமணியின் ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இப்படியாக பரபரப்பான நிகழ்வுகள் அரங்கேறிக் கொண்டிருக்க அன்புமணி பொதுக்குழுவைக் கூட்டி நான் தான் தலைவர், அடுத்த ஆண்டு வரை பதவியில் தொடர்வேன் எனத் தீர்மானம் நிறைவேற்றினார். அதற்குப் போட்டியாக ராமதாஸ் தரப்பும் பொதுக்குழுவைக் கூட்டியது. விவகாரம் இவ்வாறு சென்று கொண்டிருக்க கடந்த ஜூன் மாதம் தனது மனைவி சரஸ்வதியுடன் திருமண நாளைக் கொண்டாடினார் ராமதாஸ்.
ராமதாஸ் சுசிலா
அது தொடர்பான புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வாழ்த்துகள் குவிந்தன. இதற்கிடையே அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாக கடந்த வாரம் ராமதாஸ் தனது இரண்டாவது மனைவி எனச் சொல்லப்படும் சுசீலாவுடன் ஐம்பதாவது திருமண நாளைக் கொண்டாடியதாகப் புகைப்படங்கள் வெளியாகின. சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர விடுதியில் சுசீலாவின் குடும்பத்தினர் இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். தன்னிடம் செவிலியராகப் பணியாற்றியவரையே ராமதாஸ் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதாகச் சொல்லப்படுகிறது.
ராமதாஸ் இரண்டாவது மனைவி
இதனால் ராமதாஸ் மீது விமர்சனங்களும் எழுந்தன. இந்த நிலையில் அந்தப் புகைப்படங்களை வெளியிட்டது சுசீலா தரப்பினர் என்கின்றனர் தைலாபுரம் வட்டாரத்தினர். இது தொடர்பாக நம்மிடம் பேசிய அவர்கள்," சிறுவயதில் இருந்து ராமதாசுடன் தான் சுசீலா இருக்கிறார். பழுத்த அரசியல்வாதி உடனான பயணம் அவருக்கு அரசியலையும் கற்றுத் தந்தது. சில விவகாரங்களில் ராமதாசுக்கு ஆலோசனையும் சொல்லி வந்தவர் தான் சுசீலா. இந்த நிலையில் கட்சியில் அன்புமணியின் ஆதிக்கம் அதிகமாவதால் தன்னால் தைலாபுரத்தில் நிரந்தரமாக இருக்க முடியாது என்பதுதான் சுசீலாவின் எண்ணம்.
சொத்து பிரச்சனை
காடுவெட்டி குரு போல தன்னையும் ஆக்கி விடுவார்களோ? என்ற எண்ணத்தில் தான் கட்சியின் கட்டுப்பாட்டை முழுக்க முழுக்க தன் பக்கம் கொண்டுவர ராமதாஸைப் பயன்படுத்திக் கொண்டார். அதற்கு ஜிகே மணி உள்ளிட்ட நிர்வாகிகள் உடந்தை எனச் சொல்லப்படுகிறது. ராமதாஸ் ஆதரவு எனச் சொல்லிக் கொண்டாலும் அவர்களை இயக்கியது என்னவோ சுசிலாதான். மேலும் சென்னை மாதவரத்தில் பிரபல பள்ளி ஒன்று இருக்கிறது. அதன் மதிப்பு இன்று ஆயிரம் கோடிக்கு மேல் இருக்கும். பராமரிப்புத் தொகையாக சுசிலா குறிப்பிட்ட தொகையைப் பெற்று வருகிறார். இந்த நிலையில் நிரந்தரமாக அந்தப் பள்ளியைத் தன் பெயருக்கு மாற்றவும், 25 லட்சம் ரூபாய் பராமரிப்புத் தொகையாக வேண்டும் என்பதே சுசிலாவின் கோரிக்கை.
குடும்ப மோதல்
அதற்கு ராமதாஸ் குடும்பம் ஒப்புக் கொள்ளாததால் தான் ராமதாசுடன் திருமண நிகழ்வு புகைப்படங்களை எடுத்து அதனை வெளியிட்டு இருக்கிறார் சுசிலா" எனக் கூறி அதிர வைக்கின்றனர் தைலாபுரம் தரப்பினர். அதே நேரத்தில் புகைப்படங்கள் வெளியானது ராமதாஸுக்குத் தெரியாது எனவும், தற்போது குடும்பத்தினர் மூலம் அதனைத் தெரிந்து கொண்ட அவர் கடும் கோபத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்த விவகாரம் ஏற்கனவே தெரிந்தது தான் என்றாலும் புகைப்படங்கள் வெளியானதால் ராமதாஸின் குடும்பத்தினர் கடும் கொந்தளிப்பில் இருப்பதாகச் சொல்கின்றனர் நம்மிடம் பேசிய தைலாபுரம் தரப்பினர்.












Click it and Unblock the Notifications