மிக கனமழை..ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி மாவட்ட மக்களே உஷார்..சூறாவளியும் வீசுமாம்!
தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை: தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வரும் நிலையில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றைய தினம் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தைப் பொங்கலுக்கு முன்னதாகவே முடிவுக்கு வந்து விட்டது. வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாகவே காற்றழுத்த தாழ்வு நிலையில் பரவலாக மழை பெய்து வருகிறது.
தமிழ்நாட்டில் நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மற்றும் அதனை சுற்றி இருக்கும் பகுதிகளான திருபுவனம், திரு நாகேஸ்வரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவில் இருந்து விட்டு விட்டு மிதமான மழை பெய்து வருகிறது. அவ்வப்பொழுது சாரல் மழையும் பெய்து வருகிறது.
மழையால் கும்பகோணம் மற்றும் திருவிடை மருதூர் பகுதிகளில் நடைபெற்று வரும் சம்பா பருவ நெல் அறுவடை பணிகள் பாதிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் நாகை, நாகூர், சிக்கல், வேளாங்கண்ணி, வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்தது. அதன் விளைவாக வேளாங்கண்ணி, காரபிடாகை, புலியூர், சிக்கல் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 1000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெற்பயிர்கள் சாய்ந்தன. சம்பா பயிர்கள் அடியோடு சாய்த்திருப்பதால் விவசாயிகள் கவலை அடைந்திருக்கிறார்கள்.
நகரும் காற்றழுத்தம்..3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..யாருக்கெல்லாம் குடை அவசியம்
ராமநாதபுர மாவட்டத்தில் பலத்த சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதன் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் விசைப்படகு மற்றும் நாட்டு படகு மீனவர்கள் இன்று இரண்டாவது நாளாக மீன்பிடிக்க மீன்வளத்துறை தடை விதித்துள்ளது. இதனிடையே பரமக்குடி, ராமேஸ்வரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகாலை முதல் பரவலாக மழை பெய்து வருகிறது. பலத்த காற்றால் பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இதே போன்று தூத்துக்குடி துறைமுகத்தில் மூன்றாம் என் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வானிலை ஆய்வு மையம் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்டங்களில் இன்றைய தினம் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. கன்னியாகுமரி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் தமிழகத்தில் அநேக இடங்களிலும், வடதமிழக மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
நாளைய தினம் கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடியில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. வடதமிழக மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களிலும் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.