ரேஷன் கடைக்கு பறந்த உத்தரவு.. குடும்ப அட்டைதாரர்களுக்கு நல்ல செய்தி சொன்ன தமிழக அரசு..!
ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவு ஒன்று பறந்துள்ளது
சென்னை: குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்க அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது.
தமிழகம் முழுவதும் நியாய விலைக் கடைகளில் பயோமெட்ரிக் முறை நடைமுறைக்கு வந்தது. அதன் மூலம் ஸ்மார்ட் கார்டில் இடம் பெற்றுள்ள குடும்ப உறுப்பினர்கள் யாராவது ஒருவர் மட்டுமே பொருட்களை வாங்கமுடியும் என்ற சூழல் இருந்து வந்தது.
எனினும் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவு செய்யப்படுவதில் சிக்கல் நீடித்து வருகிறது. குறிப்பாக வயதானவர்கள் கைவிரல் ரேகை பதிவு செய்வது சிரமமாக உள்ளது..
குடும்ப அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ் சொன்ன தமிழக அரசு - ரேஷன் கடைகளில் இது கட்டாயம்
பொருட்கள்
வயதானவர்கள் ரேஷன் கடைகளுக்கு வரும்போது அவர்களது கைரேகைகள் சரியாக பதிவது இல்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.. இதன் காரணமாக அவர்கள் பொருட்களை வாங்க முடியாத சூழல் ஏற்படுகிறது... கைரேகை பதிவை புதுப்பித்து வருமாறு ரேஷன் கடை ஊழியர்கள் அலைக்கழிக்கும் சம்பவங்களும் நடந்து வருகின்றன.. இப்படிப்பட்ட சூழலில்தான் தமிழக அரசு முக்கிய உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
விற்பனையாளர்கள்
அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு தடையின்றி அத்தியாவசிய பொருட்கள் வழங்க அனைத்து ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கும் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அறிவுறுத்தி உள்ளது... இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில் உள்ளதாவது: "நியாய விலைக் கடைகள் வாயிலாகக் குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் இன்றியமையாப் பண்டங்கள் வழங்கும்போது கைவிரல் ரேகை சரிபார்ப்பு முறை பின்பற்றப்படுகிறது.
விரல்ரேகை சரிபார்ப்பு
ஆதார் இணையத் தரவுத் தளம் வேலை செய்யவில்லை என்றும், இதனால் விரல் ரேகை சரிபார்ப்பு மேற்கொள்ள இயலவில்லை என்றும், இதனால் சில பகுதிகளில் நியாயவிலைக் கடைகளில் அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பண்டங்கள் வழங்கப்படாமல் குடும்ப அட்டைதாரர்கள் திருப்பிவிடப்படும் நேர்வுகள் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
இடையூறுகள்
கடந்த 22.02.2022 முதல் விரல்ரேகை சரிபார்க்கும் நடைமுறையில் இடையூறுகள் நமது மாநிலத்தில் மட்டுமன்றிப் பரவலாக இதர மாநிலங்களிலும் நிகழ்ந்துள்ளன. இவை தொடர்புடைய நிறுவனங்களின் உயர் அலுவலர்களின் கவனத்திற்கு உடனுக்குடன் கொண்டு செல்லப்பட்டுச் சரி செய்யப் போர்க்கால நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
கண்காணிப்பு
எனவே பரவலாக இணைய இணைப்பு / தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை சரிபார்ப்பு முறை செயல்படுத்தப்பட இயலாத காலங்களில் உடனடியாக கைரேகை சரிபார்ப்பின்றி இதர வழிமுறைகளில் உரிய பதிவுகளை மேற்கொண்டு உரிய கண்காணிப்புடன் தவறாது இன்றியமையாப் பண்டங்கள் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
அறிவுரைகள்
அனைவருக்குமான பொது விநியோகத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய அத்தியாவசியப் பண்டங்கள் தரமாக விநியோகம் செய்யப்பட்டு உணவுப் பாதுகாப்பினை உறுதிப்படுத்திட வேண்டுமெனவும் நியாயவிலைக் கடைப்பணியாளர்கள் உட்பட அனைத்து அலுவலர்களுக்கும் உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டு உள்ளன" என்று அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.