அப்படி ஒரு பொய்.. கைகழுவிடுவீங்களா..? ‘புள்ளி விவரத்தை பாருங்க’ - திமுக அரசை விமர்சித்த உதயகுமார்!
சென்னை : நீட் தேர்வை ரத்து செய்வோம் என திமுக அளித்த வாக்குறுதி என்ன ஆனது என அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் தேர்வு முடிவுகள் நேற்று முன் தினம் இரவு வெளியிடப்பட்டன. நடந்து முடிந்த நீட் தேர்வை தமிழகத்தைச் சேர்ந்த 1.34 லட்சம் மாணவர்கள் எழுதினர். இதில், 67,787 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்வோம் என பொய் வாக்குறுதி அளித்துவிட்டு, மாணவர்களை ஏமாற்றிவிட்டதாக திமுக அரசை சாடியுள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமார்.
2020l ஈபிஎஸ் ஆட்சியில் நீட் தேர்வு முடிவுகளில் 15-வது இடம் பிடித்தோம். ஆனால் இன்றைக்கு இந்திய அளவில் 28வது இடத்திற்கு சென்றுள்ளோம் என புள்ளி விபரத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார் உதயகுமார்.

வேதனை
இதுதொடர்பாக ஆர்பி உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நீட் தேர்வு இந்தியா முழுவதும் முக்கிய விவாதமாக உள்ளது. நீட் தேர்வினால் எத்தனை உயிர்கள் பலியாகப் போகிறது என்ற அச்சத்தோடு வேதனையோடு நாம் உள்ளோம். இந்த கல்வியாண்டில் நாடு முழுவதும் 497 நகரங்களில் உள்ள 3,570 மையங்களில் 17.78 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதினர். இதில் தமிழகத்தில் 1.34 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 51.30 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.

புள்ளி விவரம்
ஏற்கனவே 2020 கல்வி ஆண்டில் எடப்பாடியார் ஆட்சியில் ஒரு லட்சம் பேர் நீட் தேர்வு எழுதினர். இதில் 57.44% பேர் தேர்ச்சி பெற்று இந்தியாவில் நாம் 15-வது இடம் பிடித்தோம். ஆனால் இன்றைக்கு ஒப்பிட்டு பார்த்தால் இந்திய அளவில் 28வது இடத்திற்கு சென்ற வேதனையான புள்ளி விபரத்தை நாம் பார்க்கிற போது இது வேதனையிலும், வேதனை அளிப்பதாக செய்தி அமைந்திருக்கிறது. அரசு பள்ளியில் மாணவர்கள் மருத்துவ படிப்பு கிடைக்கும் வகையில், ஜெயலலிதாவின் வாரிசு எடப்பாடியார், சமூக நீதிப் பாதையில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டினை கடந்த 2020ஆம் ஆண்டு உருவாக்கிக் கொடுத்து, அதே கல்வி ஆண்டில் 435 மாணவ மாணவிகளுக்கு அவரே மருத்துவ படிப்பிற்கான ஆணைகளை வழங்கினார்.

சவால் விட்டார் ஸ்டாலின்
மேலும், மத்திய அரசிடம் அழுத்தம் கொடுத்து, ஒரே ஆண்டில் 11 மருத்துவக் கல்லூரிகளை உருவாக்கினார். இதன் மூலம் கூடுதலாக 650 மாணவ மாணவிகள் சேர்க்கை வாய்ப்பினை எடப்பாடியார் உருவாக்கி கொடுத்தார். அதேபோல் எடப்பாடியார் கடந்த 2019ஆம் ஆண்டு, நீட் தேர்வுக்கு எதிராக சட்டமன்றத்தில் சிறப்பு மசோதா கொண்டு வந்து நிறைவேற்றி அதை ஜனாதிபதி ஒப்புதலுக்கும் அனுப்பி வைத்தார். அதே நிலையில் தான் நாங்கள் நீட் தேர்வை ரத்து செய்வோம் என்று உறுதியேற்று சவால் விடுத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். ஆனால் இதுவரை ஒரு மைல் தூரம் கூட முன்னேறவில்லை.

எதிர்காலம் கேள்விக்குறி
நீட் தேர்வு தேக்க நிலையில் தான் உள்ளது. ஒவ்வொரு கல்வி ஆண்டிலும் உயிர் பலியாவதை தொடர்ந்து கண்ணீரோடு நாம் பார்க்கிறோம். இந்த ஆண்டும் மாணவர்கள் தற்கொலை என்ற செய்தி வேதனையிலும் வேதனை அளிக்கிற செய்தியாக இருக்கிறது. நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வை ரத்து செய்வோம், முதல் கையெழுத்திடுவோம் என்று மிகப்பெரிய பொய்யை சொல்லி மாணவர்கள் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கி இருக்கிறது அந்த அறிவிப்பு.

சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள்
இப்போதும் அவர்கள் சொல்லிக் கொண்டே கொண்டிருக்கிறார்கள், இன்னும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்ற நிலையில் தான் நீட் தேர்வு ரத்து குறித்து அவர்கள் நிலைப்பாடு இருக்கிறது. ரத்து செய்வோம், ரத்து செய்வோம் சொன்னார்கள், சொல்லிக் கொண்டிருக்கிறார்கள், இன்னமும் சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்ற நிலைப்பாட்டை பார்க்கிறபோது, இதற்கு இன்னும் எத்தனை உயிர்களை பலி கொடுக்கப் போகிறோம் என்கிற அச்சம் ஏற்படுகிறது. ஏழை மாணவர்கள் கனவை நனவாக்குவதற்கு நீட் தேர்வை ரத்து செய்ய எந்த நாளோ அந்த நாளை எதிர்பார்த்து நமது தமிழகம் நகர்ந்து கொண்டிருக்கிறது.

கைகழுவி விடுவாரா
முதலமைச்சரும், அரசும் துரித நடவடிக்கை எடுத்து, மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்து அதில் வெற்றி பெற்று நிறைவேற்றி நீட் தேர்வு ரத்து என்கிற செய்தி வருகிற வரை இந்த துயர செய்தி தொடர்ந்து கொண்டே இருப்பது நமக்கு வேதனையிலும் வேதனையாக இருக்கிறது . நீட் தேர்வை எப்போது ரத்து செய்யப்படும் என்ற நல்ல செய்தியை மாணவர்களுக்கு தர துரித உண்மை நடவடிக்கை எடுப்பாரா இல்லை எப்பொழுதும் போல் இப்போதும் எல்லா திட்டங்களையும் கை கழுவி விட்டது போல் இதையும் விடுவாரா என்று மாணவரிடத்தில் மிகப்பெரிய அச்சம், சந்தேகம் ஏற்பட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications