விஜய் ஜெயித்ததை சுட்டிக்காட்டி ஆந்திர மக்கள் பவன் கல்யாணை போட்டு பிளப்பது ஏன்?
ஹைதராபாத்: தமிழகத்தில் தமிழக வெற்றிக் கழகம் அரசியலில் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. தவெக தவைர் விஜய் கட்சி ஆரம்பித்த இரண்டு ஆண்டுகளிலேயே அதுவும் சந்தித்த முதல் தேர்தலிலேயே வென்று மாநிலத்தின் முதல்வராகிறார். இவருக்கு கிடைத்துள்ள மக்கள் ஆதரவை பார்த்து ஆடிப்போயிருக்கும் ஆந்திர ஊடகவியலாளர்கள் மற்றும் ரசிகர்கள் பலர் ஆந்திர அரசியலோடு ஒப்பிட்டு பவன் கல்யாணை விமர்சிக்கிறார்
விஜய் "மதச்சார்பற்ற சமூக நீதி" மற்றும் "பெரியாரிய, அம்பேத்கரிய கொள்கைகளை" தனது அடையாளமாக அறிவித்து தேர்தலில் களம் இறங்கினார். இது திராவிட அரசியலின் நீட்சியாகப் பார்க்கப்படுகிறது. அதே சமயம், பவன் கல்யாண் ஆந்திராவில் பாரதிய ஜனதா கட்சியுடன் (BJP) கூட்டணி வைத்து, மென்மையான இந்துத்துவா கொள்கைகளைக் கையில் எடுத்தார். விஜய்யின் தெளிவான நிலைப்பாட்டைச் சுட்டிக்காட்டி, பவன் கல்யாண் தனது சுய அடையாளத்தை இழந்துவிட்டதாக ஒரு தரப்பினர் அவரை விமர்சிக்கிறார்கள்.

தவெக தலைவர் விஜய் ஒருமுறை தான் ஒரு "கிங்"-ஆக இருக்க விரும்புவதாகவும், யாருடனும் சமரசம் இன்றி ஆட்சியைப் பிடிக்கப் போவதாகவும் அதிரடியாக அறிவித்தார். அதன்படியே எந்த சமரசமும் செய்யாமல், இத்தனைக்கும் ஜனநாயகன் படம் முடங்கி கிடந்தது. அப்போது கூட அவர் கூட்டணிக்கு வர மறுத்தார். அவர் படம் தேர்தலுக்கு சில நாள் முன்பு கள்ளத்தனமாக ரிலீஸ் ஆனது. ஆளும் திமுக பல வகையில் விஜய்க்கு நெருக்கடி தந்ததாக கூறும் தெலுங்கு சினிமா ரசிகர்கள், அதனை எல்லாம் மீறி விஜய் தனித்தே போட்டியிட்டார்.
ஆனால், பவன் கல்யாண் இத்தனை ஆண்டுகள் அரசியலில் இருந்தும், சந்திரபாபு நாயுடுவின் வெற்றிக்கு உதவும் ஒரு "கிங் மேக்கர்" அல்லது துணை முதலமைச்சர் பதவியோடு திருப்தி அடைந்துவிட்டதாக விமர்சனம் எழுகிறது. "விஜய் துணிச்சலாகத் தனியாக நின்று வென்றுள்ளார். ஆனால் பவன் கல்யாண் ஏன் இன்னும் மற்றவர்களின் நிழலில் இருக்கிறார் என்ற கேள்வி எழுப்பி ஆந்திராவில் விமர்சிக்கிறார்கள்.
விஜய் எப்போதும் அமைதியாக இருந்து காரியத்தை சாதிப்பதாகவும், ஆனால் பவன் கல்யாண் அவ்வப்போது உணர்ச்சிவசப்பட்டுப் பேசுவதாகவும், அரசியலில் ஒரு நிலையற்ற தன்மையைக் கொண்டிருப்பதாகவும் கருத்துக்களை முன்வைக்கிறார்கள். விஜய் தன்னை நடிகையுடன் இணைத்து வெளியாக செய்திகளாகட்டும், கரூர் விஷயமாகட்டும் நிதானமாக, திட்டமிட்டு காய் நகர்த்தி சென்றார். ஊடகங்கள் விஜய் குறித்து கடுமையாக விமர்சித்த போதும் அமைதியாக கடந்தார். இதனை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் செய்தார்கள். ஊடகங்களின் விமர்சனங்களை மீறி விஜய்யின் ரசிகர்கள் அவரை ஜெயிக்க வைத்தனர். ஆனால் பவன் கல்யாண் அப்படி இல்லை.. ஒருமுறை முயன்றார். அவரால் ஜெயிக்க முடியவில்லை. இப்போது கிங் மேக்கராக மட்டும் மாறி துணை முதல்வராக தொடர்வாக விமர்சிக்கிறார்கள் ஆந்திராவில்..
ஆந்திராவில் பல தெலுங்கு ஊடகங்கள் விஜய்யின் வெற்றியை அதிசயமாகவும், இது வரலாற்று சம்பவம் என்று வர்ணித்து இன்று தலைப்பு செய்திகளையே வெளியிட்டிருக்கின்றன. பலர் தெலுங்கில் இன்ஸ்டா ரீல்ஸ்களில் விஜய்யின் வெற்றி பெருமிதம் கொள்கிறார்கள். அதேநேரம் இதுபோல் பவன் கல்யாண் வராமல் போய் விட்டாரே என்று ஏக்க பெருமூச்சும் விடுகிறார்கள். சிரஞ்சீவியால் முடியாதது, பவன் கல்யாணால் முடியாதது,கமலஹாசனால் முடியாதது, ரஜினியால் முடியாதது, விஜயகாந்தால் முடியாததை விஜய் சாதித்து இருப்பதாக பல தெலுங்கு மக்கள் பெருமிதம் கொள்கிறார்கள். சாதி, மதம், பணபலத்தை தாண்டி தவெக வென்றிருப்பதையும் ஆச்சரியமாகவும், அதிசயமாகவும் பார்க்கிறார்கள்.












Click it and Unblock the Notifications